டெல்லி: இமாச்சல பிரதேச மாநிலம் தரம்சலாவில் நடைபெற உள்ள இந்தியா - பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டிக்கு தேவைப்பட்டால் மத்திய பாதுகாப்பு படையை அனுப்பி பாதுகாப்பு வழங்க தயாராக இருப்பதாக மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.
உலககோப்பை 20 ஓவர் கிரிக்கெட் போட்டிகள் வருகிற 8-ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 3-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்தியாவில் உள்ள 7 நகரங்களில் இந்த போட்டிகள் நடைபெறுகின்றன. இதில் இந்தியா- பாகிஸ்தான் அணிகள் மோதும் ஆட்டம் வருகிற 19-ந்தேதி தரம்சலாவில் நடக்கிறது.

போட்டிக்கான டிக்கெட்டுக்கள் மும்முரமாக விற்பனையாகி கொண்டிருக்கும் நிலையில் தரம்சலாவில் பாகிஸ்தான் அணியை விளையாட எங்களால் அனுமதிக்க முடியாது என்று அம்மாநில முதல்வர் வீரபத்ர சிங் மத்திய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளார். மேலும் இந்த போட்டிக்கு பாதுகாப்பு வழங்க இயலாது. நாங்கள் கிரிக்கெட்டுக்கு எதிரானவர்கள் அல்ல பாகிஸ்தான் அணியினர் இங்கு விளையாடுவைத் தான் எதிர்கிறோம் என்று கூறியுள்ளார்.
இதையடுத்து இந்தியாவில் பாகிஸ்தான் அணிக்கு உரிய பாதுகாப்பு வழங்காவிடில் உலகக்கோப்பை போட்டியை புறக்கணிப்போம் என்று பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது. இதற்கு பி.சி.சி.ஐ. தலைவர் ஷசாங் மனோகர் பாகிஸ்தான் அணிக்கு உச்சக்கட்ட பாதுகாப்பு வழங்குவோம் என்று உறுதியளித்தார்.
இருந்தாலும், பாதுகாப்பு அளிப்பதற்கான உத்தரவாதத்தை மத்திய அரசு உறுதிபடுத்த வேண்டும் என்று பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத் தலைவர் ஷகாரியார் கான் தெரிவித்தார். இதனால் போட்டி கொல்கத்தா அல்லது வேறு இடத்துக்கு மாற்றப்படலாம் என்று கூறப்பட்டது.
இந்நிலையில் இமாச்சல பிரதேச மாநில அரசு மத்திய பாதுகாப்பு படை வேண்டி கேட்டுக்கொண்டால் இந்தியா- பாகிஸ்தான் போட்டிக்கு மத்திய பாதுகாப்பு படையை அனுப்ப தயாராக இருக்கிறோம் என்று உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறியுள்ளார். இதனால் இந்தியா- பாகிஸ்தான் அணிகள் இடையிலான போட்டி உச்சக்கட்ட பாதுகாப்பிற்கு மத்தியில் நடைபெற வாய்ப்புள்ளது.