டர்பன்: டர்பனில் நடைபெற்ற சாம்பியன்ஸ் லீக் டுவென்டி 20 போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் தனது முதல் போட்டியில் அபார ஆடி நியூசிலாந்தின் சென்டிரல் ஸ்டேக்ஸ் அணியை வென்றது.
சென்னை அணியின் பத்ரிநாத்தும், அனிருத்தா ஸ்ரீகாந்த்தும் அபாரமாக பேட்டிங் செய்ய, அஸ்வின், முரளிதரன் சிறப்பாக பந்து வீச சென்னை அணி சிறப்பான வெற்றியைப் பெற்றது.
முதலில் ஆடிய சென்னை அணி 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 151 ரன்களை எடுத்தது. இந்த ஸ்கோரை எட்ட சென்னை அணி ஆரம்பத்தில் தடுமாறி விட்டது. ஆனால் பத்ரியும், அனிருத்தாவும் சிறப்பாக ஆடி அணியை சரிவிலிருந்து மீட்டனர்.
பத்ரிநாத் அதிரடியாக ஆடி ஆட்டமிழக்காமல் 52 ரன்களைக் குவித்தார். அதேபோல அனிருத்தாவும் மி்ன்னல் வேக ஆட்டத்தைக் காட்டி 42 ரன்களைக் குவித்தார். இருவரும் சேர்ந்து 73 ரன்களைச் சேர்த்தனர்.
பின்னர் ஆடிய சென்டிரல் ஸ்டேக்ஸ் அணியின் முதுகெலும்பை முறித்துப் போட்டது பாலாஜி, அஸ்வின், முரளிதரனின் பந்து வீச்சு. இவர்களின் புயல் வேகப் பந்து வீச்சால் 18.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 94 ரன்கள் மட்டுமே எடுத்தது ஸ்டேக்ஸ்.
பாலாஜி சிறப்பாக பந்து வீசி 20 ரன்களை மட்டுமே கொடுத்து 3 விக்கெட்களை முறித்தார். அஸ்வினும், முரளிதரனும் தலா 2 விக்கெட்களை சாய்த்தனர்.
வழக்கம் போல அஸ்வினின் பந்து வீச்சு மிகச் சிறப்பாக இருந்தது. ஆட்டத்தின் 6வது ஓவரின்போது அவரை பந்து வீச அழைத்தார் டோணி. அதற்கு சரியான பலன் கிடைத்தது.
முத்தையா முரளிதரனும் 3 பந்து இடைவெளியில் 2 பேரை வீழ்த்தி நியூசிலாந்து அணியை முழுமையாக நிலை குலைய வைத்தார்.
சென்னை தரப்பில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட முரளி விஜய் சற்று ஏமாற்றத்தை அளிக்கும் வகையில் ஆடினார். பவுன்ஸ் ஆகி வரும் பந்துகளை சமாளிக்க அவர் சிரமப்படுவது தொடர் கதையாகியுள்ளது. நேற்றும் அதே கதைதான். அதை சமாளிக்க அவர் கற்றுக் கொண்டால் மிகப் பெரிய வீரராக உருவெடுப்பார் என்பதில் சந்தேகமில்லை.
நேற்றைய ஆட்ட நாயகன் பத்ரிதான். அட்டகாசமாக ஆடிய பத்ரி, 11வது ஓவரில் ஒரு சிக்ஸ், ஒரு பவுண்டரி, என மொத்தம் 14 ரன்களை விளாசினார். அதேபோல 14வது ஓவரிலும் வெளுத்துக் கட்டினார்.