சாம்பியன்ஸ் கோப்பை: பாகிஸ்தானை 124 ரன்களில் வீழ்த்தி இந்தியா அபார வெற்றி!
பர்மிங்காம்: மினி உலகக் கோப்பையான ஐசிசி டிராபி கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தானை இந்திய அணி 124 ரன்களில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றுள்ளது.
இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் பாகிஸ்தானும் இந்தியாவும் இன்று மோதின. இப்போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பீல்டிங்கை தேர்வு செய்தது.
இந்திய அணியின் ரோஹித் சர்மா, ஷிகார் தவான் இருவரும் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். தொடக்கம் முதலே இருவரும் சீரான வேகத்தில் ரன்களை குவித்தனர்.
ஆட்டம் தொடங்கிய சிறிது நேரத்தில் இந்திய அணி 9.5 ஓவரில் 46 ரன்கள் எடுத்த நிலையில் மழை குறுக்கிட்டது. இதனால் ஆட்டம் நிறுத்தப்பட்டது. மழை நின்றவுடன் மீண்டும் ஆட்டம் தொடங்கியது.
ரோஹித் சர்மா 72 பந்துகளில் அரைசதத்தைக் கடந்தார். 68 ரன்கள் எடுத்திருந்த தவான் அவுட் ஆனார். அப்போது இந்தியா 1 விக்கெட் இழப்புக்கு 136 ரன்களை எடுத்திருந்தது.
இதையடுத்து கோஹ்லி களமிறங்கினார். இந்திய அணி 33.1 ஓவரில் 1 விக்கெட் இழப்புக்கு 173 ரன்கள் எடுத்திருந்த நிலையில் மீண்டும் மழை குறுக்கிட்டது. அப்போது ரோஹித் சர்மா 77, கோஹ்லி 24 ரன்களுடன் களத்தில் இருந்தனர்.
மழை தொடர்ந்து குறுக்கிடுவதால் இன்றைய போட்டி 49 ஓவர்களாக குறைக்கப்படுவதாக முதலில் அறிவிக்கப்பட்டது. பின்னர் 48 ஓவர்களாக குறைக்கப்பட்டது. 91 ரன்கள் எடுத்த நிலையில் ரோஹித் சர்மா ரன் அவுட் ஆனார். அவர் 119 பந்துகளில் 7 பவுண்டரிகள், 2 சிக்சர்களை விளாசியிருந்தார். ரோஹித் அவுட் ஆகும்போது இந்திய அணி 2 விக்கெட் இழப்புக்கு 192 ரன்களை எடுத்தது.

யுவி- கோஹ்லி ஜோடி அசத்தல்
களத்தில் இருந்த கோஹ்லியுடன் யுவராஜ் கை கோர்த்தார். 29 பந்துகளில் யுவராஜ்சிங் அரைசதத்தைக் கடந்து விளையாடினார். அவர் 32 பந்துகளில் 53 ரன்கள் எடுத்த நிலையில் யுவி அவுட் ஆனார். அப்போது 46.2 ஓவர்களில் இந்திய அணி 3 விக்கெட்டுகளை இழந்து 285 ரன்களை எடுத்திருந்தது.

கோஹ்லி- பாண்ட்யா
கோஹ்லி 58 பந்துகளில் அரைசதத்தைக் கடந்தார். யுவி பெவிலியனுகுத் திரும்பிய நிலையில் ஹர்திக் பாண்ட்யா களத்துக்கு வந்தார். கடைசி ஓவரில் முதல் 3 பந்துகளை அடுத்தடுத்து சிக்சர்களுக்கு பறக்க விட்டு மிரட்டினார் பாண்ட்யா. 48 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 319 ரன்கள் குவித்தது.

பாகிஸ்தானும் மழையும்
பின்னர் பாகிஸ்தான் களத்துக்கு வந்தது. அந்த அணி 4.5 ஓவர்களில் 22 ரன்கள் எடுத்த நிலையில் மழையால் ஆட்டம் பாதிக்கப்பட்டது. மழை தொடர்ந்ததால் டிஎல்எஸ் முறைப்படி 41 ஓவர்களாக குறைக்கப்பட்டது. 41 ஓவர்களில் 289 ரன்கள் எடுத்தால் பாகிஸ்தான் வெற்றி என்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.

மந்தமான ஆட்டம்
தொடக்கம் முதலே பாகிஸ்தான் அணி வீரர்கள் மந்தமாக விளையாடி வந்தனர். 9 ஓவர்கள் முடிவடைந்த நிலையில் 12 ரன்களே எடுத்த நிலையில் பாகிஸ்தானின் அகமது ஷேசாத் அவுட் ஆனார். அப்போது பாகிஸ்தான் 47 ரன்களைத்தான் எடுத்திருந்தது.

தொடர்ச்சியாக மோசமான ஆட்டம்
தொடர்ந்தும் பாகிஸ்தான் மோசமான ஆட்டத்தையே வெளிப்படுத்தி அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்து வந்தது. 5வது விக்கெட்டு விழுந்ததுதான் தாமதம்... அதற்கடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் சீரான இடைவெளியில் பறிகொடுத்தது பாகிஸ்தான். 164 ரன்களே எடுத்த நிலையில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது பாகிஸ்தான். இதையடுத்து டக்-ஒர்த் லெவிஸ் முறைப்படி இந்திய அணி 124 ரன்களில் வென்றதாக அறிவிக்கப்பட்டது.


Click it and Unblock the Notifications