லண்டன்: தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான சாம்பியன்ஸ் டிராபி போட்டியில் இந்தியாவின் ஆர். அஸ்வின் விளையாடுவார்.
பாகிஸ்தான், இலங்கைக்கு எதிரான போட்டிகளில் அஸ்வின் சேர்க்கப்படவில்லை. பாகிஸ்தானுக்கு எதிராக பெரும் வெற்றி பெற்ற இந்தியா, இலங்கையிடம் கேவலமாக தோற்று விட்டது. மிகப் பெரிய ஸ்கோரை எடுத்தும் கூட பந்து வீச்சு முற்றிலும் கைவிட்டதால் இந்தியா பெரும் தோல்வியைச் சந்திக்க நேரிட்டு விட்டது.

இந்த நிலையில் அடுத்து இந்தியா வருகிற ஞாயிற்றுக்கிழமை தென் ஆப்பிரிக்காவைச் சந்திக்கவுள்ளது. இது கிட்டத்தட்ட காலிறுதிப் போட்டி போல. இதில் இந்தியா தோற்றால் நாடு திரும்ப வேண்டியதுதான். எனவே மிகவும் முக்கியமான இப்போட்டிக்கு அஸ்வின் அழைக்கப்பட்டுள்ளார்.
முக்கியமான போட்டி மட்டுமல்லாமல், தென் ஆப்பிரிக்க அணி சுழற்பந்துக்கு தடுமாறும் என்பதால் அஸ்வின் வரவழைக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.
பாகிஸ்தானுடன் நடந்த முதல் போட்டியிலும் அஸ்வின் ஆடவில்லை. அவருக்குப் பதில் ஜடேஜாவை சேர்த்திருந்தார் கோஹ்லி. நல்ல வேளையாக அப்போட்டியில் சிறப்பான வெற்றியை இந்தியா பெற்றதால் கோஹ்லியின் முடிவு சர்ச்சையாகவில்லை.
ஆனால் இன்றைய இலங்கைக்கு எதிரான போட்டியிலும் அஸ்வின் இல்லை என்று அறிவிக்கப்பட்டதால் லேசாக புகைய ஆரம்பித்தது. தற்போது இலங்கையிடம் மோசமான முறையில் இந்தியா தோல்வியைத் தழுவியிருப்பதால் அஸ்வின் சேர்க்காமல் விடப்பட்டது சர்ச்சையாகியுள்ளது.