சாம்பியன்ஸ் டிராபி 2017: இந்தியா பாகிஸ்தானை இறுதிப் போட்டி வரை அழைத்துச் சென்ற அந்த 10 வீரர்கள்
லண்டன் : சாம்பியன்ஸ் டிராபி இறுதிப் போட்டியில் இந்தியா பாகிஸ்தான் மோதிக் கொள்ள 10 முக்கிய வீரர்கள் காரணமாகக் கணிக்கப்பட்டுள்ளனர்.
சாம்பியன்ஸ் டிராபி இறுதிப் போட்டியில், நடப்பு சாம்பியன் இந்திய அணி, கணிக்க முடியாத பாகிஸ்தான் அணியை எதிர்கொள்கிறது. அந்த அளவுக்கு இறுதிப் போட்டியில் அனல் பறக்கவுள்ளது என்கிறார்கள் கிரிக்கெட் விமர்சகர்கள்.
இந்த நிலையில், இறுதிப் போட்டிக்கு இந்தியா பாகிஸ்தானும் செல்ல காரணமாக இருந்த இரண்டு அணியிலும் தலா 5 பேர் பட்டியலிடப்பட்டுள்ளனர். இந்த 10 பேரும் விடாமல் முழு திறமையையும் வெளிப்படுத்தி இறுதிப்போட்டி வரை கொண்டுவந்துள்ளனர் என்று கணிக்கிறார்கள் கிரிக்கெட் நிபுணர்கள்.
முதலில் இந்திய அணியின் 5 வீரர்கள் யார் யாரென்பதை இங்கே பார்க்கலாம். இந்திய அணியின் டாப் 5 வீரர்களாக, ரோஹித் ஷர்மா, ஷிகர் தவான், விராட் கோஹ்லி, புவனேஷ்வர் குமார், ஜஸ்பிரிட் பும்ரா ஆகியோரின் முழுத்திறன் இந்தியாவை இறுதிக்கு அழைத்துச் சென்றுள்ளது.

ரோஹித் ஷர்மா
மிக லாவகமாக திறமையான பேட்டிங் செய்பவர். அவரின் ஸ்டைலான ஆட்டம் ரசிகர்களை வெகுவாக ஈர்க்கும். 304 ரன்கள் குவித்துள்ள ரோஹித் ஷர்மா, ஷிகர் தவானுடன் இணைந்து சிறந்த ஓப்பனிங்கை இன்றும் கொடுப்பார் என்று எதிர்பார்க்கலாம்.

ஷிகர் தவான்
ஐபிஎல் போட்டிகளில் இருந்தே ஷிகர் தவான் தனது அதிரடியை தொடர்ந்து வருகிறார். அது சாம்பியன்ஸ் இறுதியிலும் தொடரும். ரன் குவிப்பை மெதுவாக தொடங்கி இறுதியில் அதிரடியைக் காட்டுவார். பாகிஸ்தானுடனான முதல் போட்டி தொடங்கி எல்லா போட்டிகளிலும் அரை சதங்களைக் கடந்து இருக்கிறார் தவான். அதே போல இலங்கைக்கு எதிரான ஆட்டத்தில் தவான் சதமடித்தும் சாதனை படைத்துள்ளார்.

விராட் கோஹ்லி
இது கோஹ்லி காலம். சாம்பியன்ஸ் போட்டி தொடங்குவதற்கு முன்பு பேட்டிங் பார்ம் எப்படி இருக்கும் என்று எதிர்பார்த்திருந்த நிலையில், 3 அரை சதங்களை விளாசி தனது பேட்டிங் பவரை காட்டினார் கோஹ்லி. அவரை யாரும் இப்போதைக்கு பேட்டிங்கில் அடித்துக் கொள்ள முடியாது.

புவனேஷ்வர் குமார்
சிறப்பான பந்துவீச்சை தருபவர் இவர். எக்கனாமிக்கல் பவுலராக பும்ரா இருந்தாலும் புவனேஷ் 6 விக்கெட்டுகளை வீழ்த்தி இந்திய அணிக்குத் தூணாக இருக்கிறார்.

ஜஸ்பிரிட் பும்ரா
சிறந்த எக்கனாமிக்கல் பவுலர். இப்போது யார்க்கர் போடுவதில் கில்லாடியாக இருக்கிறார். ஐபிஎல் போட்டியில் மலிங்காவுடன் சேர்ந்து விளையாடிய அனுபவம் இப்போது பும்ராவுக்கு நன்றாகவே கைக்கொடுக்கிறது எனலாம். இவரை யார்க்கர் பேட்ஸ் மேன்களை நிச்சயம் கதி கலங்க வைக்கும்.

பாகிஸ்தான் வீரர்கள்
பாகிஸ்தானின் 5 வீரர்கள் அந்த அணியின் தூண்களாக இருக்கிறார்கள். அவர்கள், ஹசன் அலி, ஜுனைத் ஹான், அஷர் அலி, ஃபார்கர் ஜமான், முகமத் ஹபீஸ் ஆகியோராவர்.

ஹசன் அலி
சாம்பியன்ஸ் டிராபியில் 10 விக்கெட்டுகளை எடுத்த சிறப்பான பாகிஸ்தான் வீரர். இந்தியாவின் தவான், கோஹ்லி, ஷர்மாவை ரன்கள் குவிப்பதைக் கட்டுப்படுத்த கூடிய பவுலிங் திறன் கொண்டவர்.

ஜுனைத் ஹான்
அதிரடி வேகப்பந்துவீச்சாளர். பாகிஸ்தானின் வெற்றிக்கு இவரும் ஹசனும் அடிப்படையானவர்கள். இந்தியாவின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்களுக்கு மிகுந்த நெருக்கடியைக் கொடுப்பதில் கில்லாடிகளாக இருக்கிறார்கள்.

அஷர் அலி
மிக வேகமாக ரன்களை குவிப்பவர். இரண்டு அரை சதங்களை குவித்தவர். அஷர் அலியும் பாகர் ஸமானும் இணைந்து இந்தியாவின் திட்டங்களை இன்று துவசம் செய்வார்கள் என்று பாகிஸ்தான் வீரர்கள் எதிர்பார்க்கிறார்கள்.

ஃபார்கர் ஜமான்
கடந்த, இந்தியாவுடனான கிரிக்கெட் ஆட்டத்தில் பாகிஸ்தான் சொல்லிக் கொள்ளும்படியான ரன்கள் எண்ணிக்கையை அடைந்தது இவரால்தான் .

முகமத் ஹபீஸ்
வேகமாக ரன் எடுப்பதில் பாகிஸ்தானின் 3வது வீரர். மொத்த ரன்கள் 91 என்றாலும் விரைவாக ரன்கள் குவிப்பதில் வல்லவர் என்பதால் இந்திய அணிக்கு நெருக்கடியை தருவார் என்கிறார்கள்.


Click it and Unblock the Notifications