மும்பை : சாம்பியன்ஸ் கோப்பை தொடர் வரும் 19ஆம் தேதி பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடைபெற உள்ள நிலையில் தற்போது மிகப்பெரிய முட்டுக்கட்டை ஒன்று ஏற்பட்டு இருக்கிறது. பாகிஸ்தானில் நடைபெறும் போட்டிகள் ராவல்பிண்டி, லாகூர் மற்றும் கராச்சி ஆகிய மூன்று மைதானங்களில் நடைபெறுகிறது.
இந்த மூன்று மைதானங்களையும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் இந்திய மதிப்பில் சுமார் 300 கோடி ரூபாய் செலவில் புணரமைக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறது. இதில் மூன்று மைதானங்களிலும் 98 சதவீதம் பணிகள் முடிவடைந்தாலும் லாகூர் மைதானத்தில் இன்னும் சில முக்கிய பணிகள் முடிவடையவில்லை என்று தகவல்
வெளியாகியுள்ளது.

முக்கியமாக வீரர்கள் இருக்கும் அறை ஊடக நிபுணர்கள் அமரும் இடம் உள்ளிட்ட இடங்களில் இன்னும் நிறைவு பெறவில்லை என தெரிகிறது. இந்த சூழலில் ஜனவரி 31ஆம் தேதி தான் மைதானத்தை ஐசிசி இடம் வழங்க இறுதிக் கெடு விதிக்கப்பட்டு இருந்தது. ஆனால் இன்னும் ஒரு நாள் மட்டுமே உள்ள நிலையில் அதற்குள் ஒட்டுமொத்த மைதானப் பணிகளையும் 100% நிறைவு செய்வது என்பது முடியாத காரியம் என தற்போது தெரியவந்துள்ளது.
இதனால் ஐசிசி என்ன செய்வது என்று தெரியாமல் விழி பிதுங்கி இருக்கிறது. எனினும் இது குறித்து கருத்து தெரிவித்துள்ள பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய அதிகாரிகள், "பணிகள் திட்டமிட்டபடி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. விரைவில்
பணிகள் முடியும் சாம்பியன்ஸ் கோப்பை தொடர் அல்ல, அதற்கு முன்பு நடைபெறும் முத்தரப்பு தொடருக்கு மைதானம் 100% பணிகள் முடிவடைந்து விடும்" என உறுதியாக கூறி இருக்கிறார்கள்.
ஆனால் அங்கிருந்து வரும் புகைப்படங்களை பார்க்கும் போது, லாகூர் மைதானத்தில் உள்ள மெயின் கேலரியிலேயே பணிகள் முடியவில்லை என்பது தெளிவாக தெரிகிறது. சாம்பியன்ஸ் கோப்பை தொடர் நடைபெறுவதற்கு பத்து நாளுக்கு முன்பே மைதானத்தை ஐசிசி வழங்க வேண்டும். அப்போதுதான் ஐசிசி மைதானத்தை முறையாக பராமரித்து ஆடுகளத்தை தயார் செய்ய முடியும். இந்த நிலையில் பாகிஸ்தான், தென்னாபிரிக்கா, நியூசிலாந்து ஆகிய அணிகள் பங்குபெறும். முத்தரப்பு தொடர்
வரும் பிப்ரவரி 8ஆம் தேதி முதல் 14ஆம் தேதி வரை லாகூர் மற்றும் கராச்சியில் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.