மும்பை : சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் இந்தியா பங்கேற்கவில்லை என்றால் அந்த தொடர் முக்கியத்துவத்தை இழந்துவிடும் என்று முன்னாள் கிரிக்கெட் வீரர் ஆகாஷ் சோப்ரா தெரிவித்துள்ளார். சாம்பியன்ஸ் கோப்பைத் தொடர் தற்போது பாகிஸ்தானில் நடக்க இருக்கிறது.
எனினும் இந்திய அணி பாகிஸ்தானுக்கு செல்ல மறுத்து விட்டது. இதனால் போட்டியை வேறு இடத்திற்கு மாற்ற ஐசிசி யோசித்து வருகிறது. இந்த நிலையில் இந்தியா விளையாடும் போட்டிகளை பாகிஸ்தானில் இருந்து மாற்றினால் தாங்கள் சாம்பியன்ஸ் கோப்பை தொடரிலிருந்து விலக நேரிடும் என்று பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்த சூழலில் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஆகாஷ் சோப்ரா வெளியிட்டுள்ள வீடியோ ஒன்றில், சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் இந்தியா விளையாடவில்லை என்றால் அந்த தொடருக்கு முக்கியத்துவம் இருக்காது என்று கூறி இருக்கிறார். இது குறித்து பேசிய அவர், பாகிஸ்தானுக்கு இந்திய அணி செல்லாது என்பது பிசிசிஐ எடுத்த முடிவு கிடையாது என்பதை நான் இங்கு தெளிவுபடுத்த விரும்புகின்றேன்.
இது மத்திய அரசு எடுத்த முடிவு. இந்திய அணி எங்கு செல்ல வேண்டும், எங்கு செல்லக்கூடாது என்பதை எல்லாம் அரசுதான் முடிவு செய்யும். மற்ற நாடுகள் என்றால் பரவாயில்லை. ஆனால் பாகிஸ்தான் என்பது யோசிக்க வேண்டிய விஷயமாக தான் இருக்கின்றது. பாகிஸ்தானுக்கு செல்ல அனுமதி இல்லை என்பதை அந்நாட்டு கிரிக்கெட் வாரியத்துடன் இந்தியா ஏற்கனவே குறிப்பிட்டது.
அப்படி இருக்கும் நிலையில் மாற்று ஏற்பாடுகளை செய்யாமல் விட்டது பாகிஸ்தானின் தவறுதான். நேற்று கூட பாகிஸ்தானில் குயட்டா நகரில் ரயில் நிலையத்தில் வெடிகுண்டு வெடித்து 20 பேர் இறந்ததாக செய்திகளில் பார்த்தேன். எனவே இப்படி ஒரு சூழலில் இந்திய அணி அங்கு செல்வது கடினமாகும். பாகிஸ்தானை அவமதிக்கும் விதமாக நான் இதை சொல்லவில்லை.
ஆனால் உண்மை இதுதான். உண்மையை ஒப்புக் கொள்ளுங்கள். ஏனென்றால் அது மாறாது. இந்திய அணி தங்களால் சாம்பியன்ஸ் கோப்பை தொடரை பாகிஸ்தானில் நடத்தினால் விளையாட முடியாது. எங்களுக்கு வேறு நாட்டில் நடத்துங்கள் என்று தான் கூறுகிறது. அதே சமயம் இந்தியா இந்த தொடரில் விளையாட மாட்டேன் என்று விலகினால் சாம்பியன்ஸ் கோப்பை தொடர் முக்கியத்துவத்தை இழந்து விடும்.
இது மற்ற அணிகளுக்குமே நன்றாக தெரியும். பாகிஸ்தானுக்கு இது நிச்சயம் புரியும். எனினும் தங்கள் அணி ரசிகர்களை திருப்தி படுத்த தான் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் இவ்வாறு செய்து வருகிறது என்று ஆகாஷ் சோப்ரா கூறியுள்ளார்.