மும்பை: பும்ராவுக்கு காயம் ஏற்பட்டு இருக்கும் நிலையில், இந்திய அணியில் வேகப் பந்துவீச்சாளர்களை தேர்வு செய்வதில் சிக்கல் எழுந்து இருக்கிறது. இந்த நிலையில், அர்ஷ்தீப் சிங் விஜய் ஹசாரே தொடரில் அபாரமாக விக்கெட் வேட்டையாடி இருக்கிறார். அவரை இந்திய அணியில் தேர்வு செய்தால் பும்ரா இடத்தை ஓரளவு நிரப்புவார்.
இந்திய அணி அடுத்து இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் தொடரிலும், 2025 சாம்பியன்ஸ் டிராபி தொடரிலும் விளையாட உள்ளது. இந்த ஒருநாள் தொடர்களில் இந்திய அணியின் முக்கிய வேகப் பந்துவீச்சாளர் பும்ரா விளையாடுவாரா? என்ற சந்தேகம் உள்ளது.

அவருக்கு காயம் ஏற்பட்டிருப்பதால் அவரால் இந்த தொடர்களில் விளையாட முடியாமல் போகலாம் என தகவல் வெளியாகி உள்ளது. இந்த நிலையில், இந்திய அணியின் வேகப்பந்துவீச்சை முன்னின்று வழிநடத்த போவது யார்? என்ற கேள்வி எழுந்துள்ளது. முகமது ஷமியும் ஒருநாள் போட்டிகளில் விளையாடுவாரா? என்ற சந்தேகம் உள்ளது.
முகமது ஷமி அணியில் தேர்வு செய்யப்பட்டாலும், பவர் பிளே ஓவர்களில் ஷமியுடன் சேர்ந்து பந்து வீச விக்கெட் வீழ்த்தும் வேகப் பந்துவீச்சாளர் தேவை. இந்த நிலையில் தான் அர்ஷ்தீப் சிங் அந்த இடத்தை நிரப்ப போகிறார். அவர் இந்திய டி20 அணியின் வெற்றிகரமான பந்துவீச்சாளராக நிரூபித்து இருக்கிறார்.
டி20 போட்டிகளில் இந்தியாவின் சிறந்த வேகப் பந்துவீச்சாளர்களில் பும்ராவுக்கு அடுத்த இடத்தை அவர் பிடித்து விட்டார் என்றே சொல்லலாம். இந்த நிலையில், அவரை ஒரு நாள் அணியிலும் தேர்வு செய்யும் முயற்சியில் பிசிசிஐ உள்ளது. தற்போது நடைபெற்று வரும் விஜய் ஹசாரே ஒருநாள் போட்டி தொடரில் அர்ஷ்தீப் சிங் பஞ்சாப் அணியில் பங்கேற்று விளையாடி வருகிறார்.
விஜய் ஹசாரே தொடரில் அதிக விக்கெட்களை வீழ்த்தியவராக இருக்கிறார் அர்ஷ்தீப் சிங். அவர் அந்த தொடரில் 7 இன்னிங்ஸ்களில் 20 விக்கெட்களை வீழ்த்தி அசத்தி இருக்கிறார். மும்பை அணிக்கு எதிரான முக்கியமான போட்டியில் அவர் 5 விக்கெட்களை வீழ்த்தினார். ஒவ்வொரு போட்டியிலும் குறைந்தது ஒரு விக்கெட் வீழ்த்தி இருக்கிறார்.
மகாராஷ்டிரா அணிக்கு எதிரான கால் இறுதிப் போட்டியில் அவர் சிறப்பாக பந்து வீசினார். முதல் ஓவரிலேயே ருதுராஜ் கெய்க்வாட் விக்கெட்டை வீழ்த்தினார். மூன்றாவது ஓவரில் சித்தேஷ் வீர் விக்கெட்டை வீழ்த்தினார். அதன் பின் ஆட்டத்தின் இறுதியில் சதம் அடித்து இருந்த ஆர்ஷின் குல்கர்னி விக்கெட்டையும் வீழ்த்தினார், 9 ஓவர்களில் 56 ரன்கள் விட்டுக் கொடுத்து 3 விக்கெட்களை வீழ்த்தினார்.
சற்று அதிக ரன்களை விட்டுக் கொடுத்தாலும் விக்கெட் வீழ்த்தும் வேகப் பந்துவீச்சாளராக இருக்கிறார் அர்ஷ்தீப் சிங். எனவே, பும்ரா இடத்தில் அவரை இந்திய அணியில் தேர்வு செய்யலாம் என முன்னாள் வீரர்களும், ரசிகர்களும் சுட்டிக்காட்டி வருகின்றனர்.
இங்கிலாந்து அணிக்கு எதிராக நடைபெற உள்ள டி20 தொடரிலும், ஒருநாள் தொடரிலும் அர்ஷ்தீப் சிங் பங்கேற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. அந்த இரண்டு தொடர்களிலும் அவர் சிறப்பாக பந்து வீசு விக்கெட்களை வீழ்த்தும் பட்சத்தில் 2025 சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான அணியிலும் அவர் பிளேயிங் லெவனில் இடம் பிடிப்பார் என எதிர்பார்க்கலாம்.