மும்பை: சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான இந்திய அணி இன்னும் 4 நாட்களில் அறிவிக்கப்பட உள்ளதாக தகவல் வெளி வந்துள்ளது. ஐசிசி தொடர் என்பதால் சாம்பியன்ஸ் டிராபியில் பங்கேற்க உள்ள 8 அணிகளும் தங்களின் 15 பேர் கொண்ட வீரர்கள் பட்டியலை வரும் 12 அல்லது 13ஆம் தேதிக்குள் அறிவிக்க வேண்டும் என்று கெடு விதிக்கப்பட்டுள்ளது.
ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடர் பிப்.19 முதல் மார்ச்.9 வரை நடக்கவுள்ளது. 2017ஆம் ஆண்டுக்கு பின் சாம்பியன்ஸ் டிராபி தொடர் ஹைபிரிட் மாடலில் பாகிஸ்தான் மற்றும் துபாய் நாடுகளில் நடக்கவுள்ளது. இதற்காக அனைத்து அணிகளும் தீவிரமாக தயாராக தொடங்கியுள்ளனர். இந்த நிலையில் தொடரில் பங்கேற்கும் 8 நாடுகளும் தங்களின் அணியை வரும் 12 அல்லது 13 ஆகிய தேதிகளில் அறிவிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதன்பின் அடுத்த 30 நாட்களில், அதாவது பிப்.13ஆம் தேதி வரை அணியில் மாற்றம் செய்து கொள்ளலாம். இந்த நிலையில் பிசிசிஐ தரப்பில் வரும் 10ஆம் தேதி 15 வீரர்கள் கொண்ட இந்திய அணியை அறிவிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த அணியை ரோஹித் சர்மா வழிநடத்தவுள்ளது உறுதியான ஒன்றாகும். ஆனால் இம்முறை துணைக் கேப்டனாக பும்ரா அறிவிக்கப்பட இருக்கிறார்.
அதன்பின் சுப்மன் கில், விராட் கோலி, ரிஷப் பண்ட், கேஎல் ராகுல், ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா உள்ளிட்ட சீனியர் வீரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல் ஆல்ரவுண்டர் வாஷிங்டன் சுந்தர், அக்சர் படேல் மற்றும் நிதிஷ் குமார் ரெட்டி ஆகியோரில் 2 பேர் சேர்க்கப்பட வாய்ப்புகள் உள்ளது. ஹர்திக் பாண்டியா இருப்பதால், நிதிஷ் குமார் ரெட்டி சேர்க்கப்படுவது சந்தேகம் தான்.
அதேபோல் வேகப்பந்துவீச்சாளர்களில் சுமார் ஒன்றரை ஆண்டுகளுக்கு பின் முகமது ஷமி கம்பேக் கொடுக்கவுள்ளார். முகமது சிராஜ், அர்ஷ்தீப் சிங் ஆகியோர் தேர்வு செய்யப்படுவார்கள். நட்சத்திர வீரர் ஸ்ரேயாஸ் ஐயர் சிறந்த ஃபார்மில் இருப்பதால், அவர் அணிக்கு கம்பேக் கொடுப்பார் என்று நம்பலாம். அதேபோல் டாப் ஆர்டர் வீரரான யஷஸ்வி ஜெய்ஸ்வால் தேர்வு செய்யப்பட உள்ளது தெரிய வந்துள்ளது.
இதனால் தொடக்க வீரர்களாக யார் களமிறங்குவார்கள் என்ற கேள்வி ரசிகர்களிடையே விவாதமாகி வருகிறது. ஏனென்றால் சுப்மன் கில்லின் ஃபார்ம் விமர்சனத்திற்குள்ளாகி உள்ளது. அதேபோல் டாப் ஆர்டரில் இடதுகை பேட்ஸ்மேன் யாரும் இல்லாததால், ஜெய்ஸ்வாலின் தேர்வும் கிட்டத்தட்ட உறுதியான ஒன்றாக பார்க்கப்படுகிறது. மேலும் இந்த அணியே இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் தொடரிலும் விளையாடும் என்று கூறப்படுகிறது.
இந்திய அணி விவரம் (வாய்ப்பு): ரோஹித் சர்மா, சுப்மன் கில், விராட் கோலி, ஸ்ரேயாஸ் ஐயர், கேஎல் ராகுல், ரிஷப் பண்ட், ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, முகமது ஷமி, ஜஸ்பிரிட் பும்ரா, அர்ஷ்தீப் சிங், வாஷிங்டன் சுந்தர், நிதிஷ் குமார் ரெட்டி, அக்சர் படேல், யஷஸ்வி ஜெய்ஸ்வால்.