ரவிச்சந்திரன் அஸ்வின் இந்திய அணியில் ஐந்து ஸ்பின்னர்கள் இடம்பெற்று இருப்பது குறித்து விமர்சனம் செய்துள்ளார்.
2025 சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான இந்திய அணியில் ஐந்து ஸ்பின்னர்கள் இடம்பெற்று இருப்பது குறித்து முன்னாள் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் விமர்சனம் செய்திருக்கிறார். நான்கு ஸ்பின்னர்களை அழைத்துச் சென்றாலே போதுமானது ஐந்தாவது ஸ்பின்னரை சேர்க்க வேண்டும் என்பதற்காக ஜெய்ஸ்வாலை அணியிலிருந்து நீக்கி இருக்கிறார்கள். அது சரியானது அல்ல என அஸ்வின் விமர்சனம் செய்திருக்கிறார்.

இது பற்றி அஸ்வின் பேசுகையில், "எனக்கு ஒரு விஷயம் மட்டும் புரியவில்லை. எதற்காக துபாய்க்கு இத்தனை ஸ்பின்னர்களை அழைத்துச் செல்கிறோம்? ஐந்து ஸ்பின்னர்களை அணியில் வைத்துக் கொண்டு யஷஸ்வி ஜெய்ஸ்வாலை அணியிலிருந்து நீக்கி இருக்கிறோம். மூன்று அல்லது நான்கு ஸ்பின்னர்களை ஒரு தொடருக்கு அழைத்துச் செல்வதை என்னால் புரிந்து கொள்ள முடியும். ஆனால் துபாயில் 5 ஸ்பின்னர்கள் தேவையா? இது எனக்கு தெரியவில்லை."
"நிச்சயமாக இந்திய அணியில் ஒரு ஸ்பின்னர் கூடுதலாக இருக்கிறார்கள். இரண்டு பேர் கூடுதல் என்று சொல்ல முடியாது. இந்திய அணியில் இருக்கும் இரண்டு இடது கை ஸ்பின்னர்கள் (அக்சர் பட்டேல், ரவீந்திர ஜடேஜா) சிறந்த ஆல்ரவுண்டர்களாக உள்ளனர். அவர்களுடன் ஹர்திக் பாண்டியாவும் இருக்கிறார். நிச்சயமாக அக்சர் பட்டேல் மற்றும் ரவீந்திர ஜடேஜா அணியில் ஆடுவார்கள். ஹர்திக் பாண்டியா, குல்தீப் யாதவும் விளையாடுவார்கள்."
"அந்த நிலையில் வருண் சக்கரவர்த்தி அணியில் சேர்க்க வேண்டும் என்றால் ஒரு வேகப்பந்து வீச்சாளரை அணியில் இருந்து நீக்க வேண்டும். ஹர்திக் பாண்டியாவை இரண்டாவது வேகப்பந்து வீச்சாளராக பயன்படுத்த வேண்டும். அப்படி இல்லை என்றால் வேறொரு ஸ்பின்னரை நீக்கிவிட்டு தான் மூன்றாவது வேகப்பந்து வீச்சாளரை அணியில் சேர்க்க முடியும்."
"ஜெய்ஸ்வாலுக்கு பதிலாக ஒரு ஸ்பின்னர் அணியில் ஆடும் நிலையில், அணித் தேர்வின் முடிவில் ஜெய்ஸ்வாலிடம் ஏன் உங்களை அணியிலிருந்து நீக்கினோம்? என சொல்லும் இடத்தில் நான் இல்லை என்பதை நினைத்து மகிழ்ச்சி அடைகிறேன். நான் அணியின் பயிற்சியாளராகவோ, கேப்டனாகவோ இருந்தால் என்னால் அவரிடம் என்ன சொல்ல முடியும்?"
"ஜெய்ஸ்வால் இப்போது வீரர்களுக்கு தண்ணீர் எடுத்து வரும் வேலையைப் பார்ப்பார். அவர் மனதில் என்ன ஓடிக்கொண்டிருக்கும்? என்று நினைத்து பார்க்கிறேன். அவர் முதலில் தான் சாம்பியன்ஸ் டிராபி அணியில் இடம் பெற்றதை நினைத்து மகிழ்ச்சி அடைந்திருப்பார். திடீரென அவர் இப்போது அணியில் இல்லை. இதே போல தான் அணியிலிருந்து நீக்கப்படும் ஒவ்வொரு வீரருக்கும் இருக்கும்" என்றார் ரவிச்சந்திரன் அஸ்வின்.