மும்பை: 2025 சாம்பியன்ஸ் ட்ராபி கிரிக்கெட் தொடரை பாகிஸ்தான் நடத்த உள்ள நிலையில், அதற்கு இந்தியாவில் கிரிக்கெட்டை நிர்வகித்து வரும் பிசிசிஐ பெரிய முட்டுக்கட்டை ஒன்றை போட்டுள்ளது. ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து ஆகிய அணிகளுடன் சேர்ந்து, சாம்பியன்ஸ் ட்ராபி தொடரை பாகிஸ்தானில் இருந்து வேறு நாட்டுக்கு கொண்டு செல்ல திட்டம் தீட்டப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
2025 சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் பாகிஸ்தானில் நடைபெற உள்ளது. அதற்கான முதற்கட்ட போட்டிகள் அட்டவணையை பாகிஸ்தான் கிரிக்கெட் அமைப்பு தயார் செய்து சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் ஒப்புதலுக்கு அனுப்பி உள்ளது. மேலும், பாகிஸ்தானில் உள்ள கிரிக்கெட் மைதானங்களை பல கோடி செலவு செய்து புதுப்பித்து வருகிறது.

இந்த நிலையில் இந்திய கிரிக்கெட் அணியை சாம்பியன்ஸ் டிராபி தொடரில் பங்கேற்க பாகிஸ்தான் செல்ல அனுமதிக்க முடியாது என பிசிசிஐ சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலிடம் கூறி இருக்கிறது. இந்தியா ஆடும் போட்டிகளை மட்டும் பாகிஸ்தான் அல்லாத வேறு ஒரு நாட்டில் நடத்த வேண்டும் என பிசிசிஐ கோரிக்கை வைத்துள்ளது.
கடந்த 2008 ஆம் ஆண்டு முதலில் இந்திய கிரிக்கெட் அணி பாகிஸ்தான் செல்ல மறுத்து வருவது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் 2025 சாம்பியன்ஸ் ட்ராபி தொடருக்கும் இந்திய அரசு அனுமதி அளிக்கவில்லை என பிசிசிஐ கூறியுள்ளது. தற்போது சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் இதை பாகிஸ்தான் கிரிக்கெட் அமைப்பிடம் சொல்லிவிட்டதாகவும், பாகிஸ்தான் இந்திய அணியின் திட்டத்துக்கு ஒப்புக் கொள்ளவில்லை எனவும் தகவல் வெளியாகி உள்ளது.
பிசிசிஐ கூறுவது போல இந்தியா ஆடும் போட்டிகளை மட்டும் துபாயில் நடத்த பாகிஸ்தான் ஒப்புக் கொள்ளவில்லை என்றால் சாம்பியன்ஸ் ட்ராபியில் இருந்து இந்தியா விலகுவதாக அறிவிக்க திட்டமிட்டு உள்ளது. சாம்பியன்ஸ் ட்ராபி தொடரில் இந்திய அணி பங்கேற்கவில்லை என்றால் அந்தத் தொடருக்கு மிகப்பெரிய அளவில் நஷ்டம் ஏற்படும். உலகிலேயே கிரிக்கெட் ஒளிபரப்புக்கு அதிக வருவாய் ஈட்டுவது இந்திய அணி தான். எனவே, இந்திய அணி விலகினால் அந்த தொடரின் ஒளிபரப்பு உரிமை அதிக விலைக்கு விற்காது. இது பாகிஸ்தானுக்கு முதல் அடி.
இரண்டாவதாக மற்றொரு அடியை கொடுக்க பிசிசிஐ திட்டமிட்டு உள்ளது. இந்திய கிரிக்கெட் அணியுடனான தொடர்களால் அதிக லாபம் ஈட்டி வரும் இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணிகள், பிசிசிஐ-க்கு ஆதரவளிக்கும் வகையில் அவர்களும் சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இருந்து விலகுவதாக அறிவிப்பு வெளியிட திட்டமிட்டு உள்ளன.
இப்படி அறிவித்தால் நிச்சயமாக சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் சாம்பியன்ஸ் ட்ராபியை பாகிஸ்தானில் இருந்து வேறு நாட்டுக்கு மாற்றி விடும் என கூறப்படுகிறது. இந்த சூழ்நிலையால் பாகிஸ்தான் கிரிக்கெட் அமைப்பு கடும் அழுத்தத்தில் இருக்கிறது. இந்தியா கேட்பது போல துபாயில் இந்திய அணி ஆடும் போட்டிகளை நடத்த ஒப்புக்கொள்ள வேண்டும். அதை செய்ய மறுத்தால் சாம்பியன்ஸ் ட்ராபி தொடரை நடத்தும் வாய்ப்பை பாகிஸ்தான் கிரிக்கெட் அமைப்பு இழக்க நேரிடும். இந்த இரண்டில் எதை செய்வது? என அந்த பாகிஸ்தான் தவித்துக் கொண்டிருக்கிறது.