லாகூர்: 2025 சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இன்று மிக முக்கியமான போட்டி நடைபெற உள்ளது. ஆஸ்திரேலியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையே கிட்டத்தட்ட நாக் அவுட் போன்ற சூழ்நிலை உள்ளது. இந்தப் போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி வென்றால் மட்டுமே அரையிறுதிக்கு முன்னேறும்.
அதே சமயம், ஆஸ்திரேலியா அணி வென்றால் அந்த அணி முன்னேறும். இந்தப் போட்டியில் தோல்வியடையும் அணி உறுதியாக அரையிறுதி வாய்ப்பை இழந்துவிடும். இந்த இக்கட்டான நிலையில், இந்தப் போட்டியின்போதும் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை அறிக்கைகள் சுட்டிக்காட்டுகின்றன.

இந்த போட்டி பாகிஸ்தானில் உள்ள லாகூரில் நடைபெற உள்ளது. போட்டி நேரத்தின்போது மாலை ஆறு அல்லது ஏழு மணி வரை மழை பெய்யக்கூடும் என பல்வேறு வானிலை அறிக்கை தளங்களும் சுட்டிக்காட்டி உள்ளன. குறைந்தபட்சமாக 20% முதல் அதிகபட்சமாக 71% வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாகக் கூறப்பட்டிருக்கிறது.
பாகிஸ்தானில் உள்ள மைதானங்களில் மழை நீர் வடிகால் வசதி சரியாக இல்லை என்பதால், மழை பெய்தால் ஆடுகளங்கள் குளம் போல மாறிவிடும். அப்போது, அதை வெளியேற்றுவதற்கு நீண்ட நேரம் ஆகும். எனவே, இந்தப் போட்டியின்போதும் மழை பெய்தால் நிச்சயமாக அது போட்டி கைவிடப்படும் வாய்ப்பு உள்ளது.
முன்னதாக, ராவல்பிண்டியில் நடைபெற்ற இரண்டு போட்டிகள் டாஸ் கூட போடப்படாமல் கைவிடப்பட்டிருந்தன. அதேபோல, இந்தப் போட்டியிலும் நடக்கலாம் என அச்சம் இருந்துள்ளது. அப்படி நடந்தால், எந்த அணி அரையிறுதிக்கு முன்னேறும் என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
ஏற்கனவே, ஆஸ்திரேலியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டி மழையால் கைவிடப்பட்டதால், ஆஸ்திரேலியாவுக்கு ஒரு புள்ளி வழங்கப்பட்டது. தற்போது, ஆஸ்திரேலியா ஒரு வெற்றி மற்றும் மழையால் கிடைத்த ஒரு புள்ளியுடன் மொத்தம் மூன்று புள்ளிகளுடன் உள்ளது. ஆப்கானிஸ்தான் அணி 2 போட்டிகளில் விளையாடி ஒரு வெற்றியுடன், இரண்டு புள்ளிகளுடன் உள்ளது.
இந்த நிலையில், ஆஸ்திரேலியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் இடையேயான போட்டி மழையால் கைவிடப்பட்டால், இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி வழங்கப்படும். அப்போது, ஆஸ்திரேலியா நான்கு புள்ளிகளையும், ஆப்கானிஸ்தான் மூன்று புள்ளிகளையும் பெறும். அதன் மூலம், ஆஸ்திரேலியா அணி அரையிறுதிக்கு முன்னேறிவிடும்.
குரூப் பி பிரிவில் மற்றொரு அணியாக தென்னாப்பிரிக்காவும் அரையிறுதிக்கு முன்னேறும். ஏனெனில், தென்னாப்பிரிக்கா அடுத்து இங்கிலாந்து அணிக்கு எதிராக தோல்வியடைந்தாலும், மூன்று புள்ளிகளுடன் ஆப்கானிஸ்தானுடன் சமநிலையில் தான் இருக்கும். ஆனால், நெட் ரன் ரேட் என்பது தென்னாப்பிரிக்காவுக்கு மிக அதிகமாக உள்ளது.
அந்த வகையில், ஆப்கானிஸ்தானை எளிதாகவே தென்னாப்பிரிக்கா முந்திவிடும். எனவே, லாகூரில் நடைபெற உள்ள இன்றைய போட்டியில் மழை பெய்தால், அது ஆப்கானிஸ்தான் அணிக்கு மிகப்பெரிய பாதகமாக அமையும். ஆஸ்திரேலியாவுக்கு சாதகமாக இருக்கும்.