மும்பை: 2025 ஆம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராபி தொடரை வென்ற இந்திய அணிக்கு இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) 58 கோடி ரூபாய் பரிசுத் தொகையை அறிவித்துள்ளது. இந்தத் தொடர் பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடைபெற்றது. இந்திய அணி தனது போட்டிகளை துபாயில் விளையாடியது.
குரூப் சுற்றில் தான் ஆடிய மூன்று போட்டிகளிலும் வெற்றி பெற்ற இந்திய அணி, அடுத்து அரையிறுதியில் ஆஸ்திரேலியா அணியையும், இறுதிப் போட்டியில் நியூசிலாந்து அணியையும் வீழ்த்தி 2025 சாம்பியன்ஸ் டிராபி கோப்பையை கைப்பற்றியது.

முன்னதாக, 2024 டி20 உலகக் கோப்பையை இந்திய அணி கடந்த ஆண்டு ஜூன் மாதம் வென்றிருந்தது. அடுத்த சில மாதங்களிலேயே இந்திய ஒருநாள் அணி சாம்பியன்ஸ் டிராபி கோப்பையையும் கைப்பற்றியுள்ளது. இந்த இரண்டு தொடர்களிலும் இந்திய அணி ஒரு போட்டியில் கூட தோல்வியடையவில்லை. மிகவும் வெற்றிகரமான அணியாக இந்திய அணி திகழும் நிலையில், சாம்பியன்ஸ் டிராபி வெற்றிக்காக பிசிசிஐ 58 கோடி ரூபாய் பரிசுத் தொகையை அறிவித்துள்ளது.
கடந்த முறை, 2024 டி20 உலகக் கோப்பை வெற்றிக்கு 125 கோடி ரூபாய் பரிசுத் தொகை அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்த முறை நடந்தது உலகக் கோப்பை அல்ல, சாம்பியன்ஸ் டிராபி எனும் சிறிய அளவிலான தொடர் என்பதால், அதைவிட குறைவான பரிசுத் தொகை அறிவிக்கப்பட்டுள்ளது. எந்தெந்த வீரர்கள் மற்றும் பயிற்சியாளர்களுக்கு எவ்வளவு பரிசுத் தொகை அளிக்கப்படும் என்பது குறித்த விவரம் இன்னும் வெளியாகவில்லை.
இது குறித்து பிசிசிஐ வெளியிட்டுள்ள அறிவிப்பில், "2025 ஆம் ஆண்டு இது இந்தியாவுக்கு கிடைத்த இரண்டாவது ஐசிசி கோப்பை" என சுட்டிக்காட்டி உள்ளது. முன்னதாக, இந்திய அண்டர்-19 மகளிர் அணி 2025 அண்டர்-19 மகளிர் உலகக் கோப்பையை வென்றிருந்தது.
அதைத் தொடர்ந்து இந்திய ஆடவர் அணி ஐசிசி நடத்திய சாம்பியன்ஸ் டிராபி தொடரிலும் வெற்றி பெற்றுள்ளது. பிசிசிஐ தலைவர் ரோஜர் பின்னி, செயலாளர் தேவஜித் சைக்கியா மற்றும் துணைத் தலைவர் ராஜீவ் சுக்லா ஆகியோர் இந்திய அணியை பாராட்டி உள்ளனர்.
செய்தி சுருக்கம்: