மும்பை : 2025 ஆம் ஆண்டு சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடருக்கு புதிய முட்டுக்கட்டை ஒன்றை பிசிசிஐ போட்டு இருக்கிறது. வரும் பிப்ரவரி 19ஆம் தேதி முதல் மார்ச் 9ஆம் தேதி வரை சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடர் பாகிஸ்தானில் நடைபெற இருக்கிறது. இந்தியா விளையாடும் போட்டிகளை லாகூரில் நடத்துவதற்காக அந்த மைதானத்தை பாகிஸ்தான் அணி புதுப்பித்து வருகிறது.
இந்த சூழ்நிலையில் பாகிஸ்தானுக்கு தாங்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்ள மத்திய அரசு அனுமதி அளிக்கவில்லை என்றும் தாங்கள் விளையாடும் போட்டிகளை ஹைபிரிட் முறையில் வேறு நாட்டில் நடத்த வேண்டும் என்றும் பிசிசிஐ கோரிக்கை விடுத்து இருக்கிறது.

முதலில் இந்த கோரிக்கையை மறுத்த பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தற்போது ஒப்பு கொண்டிருக்கிறது. ஆனால் மூன்று நிபந்தனைகளை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் விதித்து இருக்கிறது. அதன்படி ஐசிசி நிதியில் இருந்து தங்களுக்கு கூடுதல் நிதி வழங்க வேண்டும். இனி பாகிஸ்தானும் இந்தியாவுக்கு வந்து கிரிக்கெட் போட்டிகளில் விளையாடாது.
ஐசிசி தொடர் இந்தியாவில் நடத்தப்பட்டால் பாகிஸ்தான் விளையாடும் போட்டிகளை மட்டும் வெளிநாட்டில் நடத்த வேண்டும் என்று பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் வலியுறுத்தி இருந்தது. இதன் மூலம் சாம்பியன்ஸ் கோப்பை தொடரின் பிரச்சினை முடிவுக்கு வந்ததாக ஐசிசி நினைத்தது. ஆனால் தற்போது பிசிசிஐ புதிய குண்டு ஒன்றை போட்டு இருக்கிறது.
அதன்படி வரும் 2026 டி20 உலக கோப்பையை இந்தியாவும் இலங்கையும் இணைந்து நடத்துகிறது. ஆனால் பாகிஸ்தான் கூற்றின்படி அந்நாடு விளையாடும் அனைத்து போட்டிகளையும் இலங்கையில் தான் நடத்த வேண்டும். ஆனால் இதற்கு பிசிசிஐ ஒப்புதல் வழங்கவில்லை. ஹைபிரிட் மாடல் முறை தங்களுக்கு மட்டும்தான் பொருந்தும் என்றும் பாகிஸ்தானுக்கு அது பொருந்தாது என்று பிசிசிஐ போர் கொடி தூக்கியிருக்கிறது.
2026 டி20 உலக கோப்பையில் இந்தியா பாகிஸ்தான் மோதும் போட்டி இந்தியாவில் தான் நடைபெறும் என்றும் பிசிசிஐ கூறி இருக்கிறது. பாகிஸ்தானில் இருப்பது போல் தங்களது நாட்டில் பாதுகாப்பு பிரச்சனை இல்லை என்பதால் ஹைபிரிட் முறையை பிசிசிஐ நிராகரித்திருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளது. இதனால் சாம்பியன்ஸ் கோப்பை தொடருக்கு சிக்கல் ஏற்பட்டு இருக்கிறது.