துபாய்: 2025 சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்திய அணி பங்கேற்றுள்ள குரூப் ஏ பிரிவில் இடம்பெற்றுள்ள மற்ற மூன்று அணிகளின் பலம், பலவீனம் மற்றும் இந்திய அணியின் வெற்றி வாய்ப்புகள் குறித்து இங்கு காணலாம்.
குரூப் ஏ பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், நியூசிலாந்து மற்றும் வங்கதேசம் ஆகிய நான்கு அணிகள் இடம்பெற்று உள்ளன. இந்திய அணி ஆடும் போட்டிகள் அனைத்தும் துபாய் மைதானத்தில் நடைபெற உள்ளது. முதலில் வங்கதேசம் குறித்து பார்க்கலாம்.

வங்கதேச அணி பலம் குறைந்த அணி என்ற கருத்து நிலவினாலும், இது போன்ற ஐசிசி தொடர்களில் வங்கதேசம் சில அதிர்ச்சி வெற்றிகளைப் பெற்றுள்ளது. சௌமியா சர்க்கார், தன்சிம் ஹாசன் சகிப், மெஹிதி ஹாசன் மிராஜ் ஆகியோர் ஆல்ரவுண்டர்களாக இருப்பதால் நீண்ட பேட்டிங் வரிசையை கொண்ட அணியாக உள்ளது.
ஷகிப் அல் ஹசன் மற்றும் லிட்டன் தாஸ் ஆகிய அனுபவ வீரர்கள் இல்லாதது இந்திய அணிக்கு சாதகமாக அமையும். துபாயில் மந்தமான பிட்ச்சில் மெஹிதி ஹாசன் மிராஸ் மற்றும் ரிஷாத் உசேன் தாக்கத்தை ஏற்படுத்த வாய்ப்பு உள்ளது. எனவே இந்திய அணி வங்கதேசத்தை கவனமாக எதிர்கொள்ள வேண்டும்.
பாகிஸ்தான் அணியில் ஃபகர் ஜமான், பாபர் அசாம், முகமது ரிஸ்வான் மற்றும் சல்மான் அலி ஆகா ஆகியோர் பேட்டிங்கில் இந்திய அணிக்கு எதிராக சிறப்பாக செயல்பட வாய்ப்பு உள்ளது. இருப்பினும், அவர்கள் அவ்வப்போது சில போட்டிகளில் மட்டுமே சதங்கள் அடித்து வருகின்றனர். பாகிஸ்தான் அணியில் சில வீரர்கள் மோசமாக செயல்பட்டு வந்தாலும் ஒரு சில வீரர்கள் போட்டியை காப்பாற்றி விடுகின்றனர்.
அந்த அணியில் வேகப்பந்துவீச்சாளர்கள் ஷாஹீன் ஷா அப்ரிடி, நசீம் ஷா, ஹாரிஸ் ராஃப் ஆகியோர் தாக்கத்தை ஏற்படுத்துவார்கள் என்றாலும் துபாய் மைதானத்தில் அவர்களுக்கு பெரிய வேலை இருக்காது. அங்கு சுழற்பந்து வீச்சு எடுபடும் நிலையில், பாகிஸ்தான் அணியின் சுழற்பந்து வீச்சாளர்களான அப்ரார் அகமது மற்றும் சல்மான் ஆகா ஆகியோரிடம் இந்திய பேட்ஸ்மேன்கள் கவனமாக ஆட வேண்டும். பாகிஸ்தான் அணியில் பேட்டிங் தான் அந்த அணியின் பலமாக உள்ளது. எனவே அதை உடைக்க இந்திய அணி திட்டமிட வேண்டும்.
நியூசிலாந்து அணியைப் பொறுத்தவரை சுழற்பந்து வீச்சை சமாளித்து ஆடும் திறமை கொண்ட வீரர்கள் அந்த அணியில் உள்ளனர். மேலும் அதிரடியாக ரன் சேர்க்கும் வீரர்களும் உள்ளனர். டெவோன் கான்வே, வில்லியம் யங், டாம் லாதம், கேன் வில்லியம்சன், டேரில் மிட்செல் என டாப் ஆர்டர் முதல் மிடில் ஆர்டர் வரை அதிரடியாக ரன் குவிக்கும் ஆற்றல் உடைய பேட்ஸ்மேன்கள் உள்ளனர்.
கிளென் பிலிப்ஸ் சமீப காலமாக பேட்டிங்கிலும் ஜொலித்து வருகிறார். அவர் சுழற்பந்து வீச்சாளராகவும் சிறப்பாக செயல்பட்டு வருகிறார். மிட்செல் சான்ட்னர் சுழற் பந்து வீச்சு ஆல்ரவுண்டராக இருக்கிறார். அவரே அணியின் கேப்டன். எனவே சுழற்பந்து வீச்சை நியூசிலாந்து அணி லாவகமாக பயன்படுத்தும்.
இந்த மூன்று அணிகளில் நியூசிலாந்து அணி தான் இந்திய அணிக்கு சவாலாக இருக்கும். ஏனெனில் சமீபத்தில் இந்திய மண்ணில் நியூசிலாந்து அணி டெஸ்ட் தொடரில் வெற்றி பெற்றிருந்தது. இந்திய சுழற்பந்து வீச்சாளர்களால் நியூசிலாந்து பேட்ஸ்மேன்களை அச்சுறுத்த முடியவில்லை. எனவே அதே விஷயம் துபாயிலும் நடக்க வாய்ப்பு உள்ளது.
துபாய் மைதானம் பொதுவாக பேட்டிங்கிற்கு சாதகமாக இருக்கும். ஆனால், அங்கு சுழற்பந்து வீச்சாளர்களுக்கும் உதவி கிடைக்கும். இந்திய அணியில் தரமான சுழற்பந்து வீச்சாளர்கள் மற்றும் வேகப்பந்து வீச்சாளர்கள் உள்ளனர். இந்திய பேட்ஸ்மேன்கள் எந்த சூழ்நிலையிலும் ரன் குவிக்கும் திறமை உடையவர்கள். எனவே, இந்திய அணி இந்த மூன்று அணிகளையும் வீழ்த்தி குரூப் சுற்றில் முதலிடம் பிடிக்க வாய்ப்புள்ளது.