மும்பை: 2025 சாம்பியன்ஸ் ட்ராபி கிரிக்கெட் தொடர் இந்தியாவில் நடைபெற வாய்ப்பு உள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன. 2025 சாம்பியன்ஸ் ட்ராபி கிரிக்கெட் தொடர் பாகிஸ்தானில் நடைபெற திட்டமிடப்பட்டு, அதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. 29 ஆண்டுகளுக்கு பின் பாகிஸ்தானில் முதல் முறையாக சர்வதேச கிரிக்கேட் கவுன்சில் நடத்தும் தொடர் ஒன்றை நடத்த உள்ளது.
அதற்காக பல நூறு கோடிகளையும் பாகிஸ்தான் கிரிக்கெட் அமைப்பு செலவிட்டு உள்ளது. இந்த நிலையில், இந்தியா பாகிஸ்தான் செல்ல மறுத்து உள்ளது. கடந்த 17 ஆண்டுகளாக இந்திய அணி பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவில்லை. தற்போதும் இந்திய அரசு பாகிஸ்தான் செல்ல அனுமதி வழங்கவில்லை என பிசிசிஐ அறிவித்து இருக்கிறது.

இதை அடுத்து இந்தியா ஆடும் போட்டிகளை மட்டும் வேறு நாடுகளில் நடத்த வேண்டும் என சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் பாகிஸ்தான் கிரிக்கெட் அமைப்பிடம் கூறி உள்ளது. ஆனால், அதற்கு பாகிஸ்தான் கிரிக்கெட் அமைப்பு ஒப்புக் கொள்ளவில்லை. இந்தியா விளையாடவில்லை என்றால் ஒளிபரப்பு உரிமத்தில் மிகப் பெரிய வருவாய் இழப்பு ஏற்படும் என்ற சிக்கல் உள்ளது.
இதற்கிடையே பாகிஸ்தான் மறைமுகமாக மிரட்டல் ஒன்றை விடுத்துள்ளது. அதன்படி இந்தியா இந்த தொடரில் பங்கேற்க பாகிஸ்தான் வரவில்லை என்றால், பாகிஸ்தான் இந்த தொடரில் இருந்து விலக உள்ளதாக கூறப்படுகிறது. இது நடந்தால் சாம்பியன்ஸ் ட்ராபி தொடரை வேறு நாட்டுக்கு மாற்ற சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் முடிவு செய்துள்ளது.
முன்னதாக தென்னாப்பிரிக்காவுக்கு மாற்ற உள்ளதாக தகவல் வெளியானது. ஆனால் தற்போது இந்தியாவில் சாம்பியன்ஸ் ட்ராபி தொடரை நடத்துவதற்கான மறைமுக பேச்சு வார்த்தைகள் நடந்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்தியாவால் மிகக் குறுகிய காலத்தில் இந்த தொடரை நடத்த முடியும் என சர்வதேச கிரிக்கட் கவுன்சில் கருதுவதால் இது பற்றி விவாதம் நடந்து வருவதாக கூறப்படுகிறது.