சென்னை : சாம்பியன்ஸ் கோப்பை தொடருக்கான இந்திய அணியில் நான்கு சுழற் பங்குவீச்சாளர்கள் தேர்வு செய்யப்பட்டது மிகவும் தவறான முடிவு என அஸ்வினின் நண்பரும் கிரிக்கெட் வல்லுனருமான பிரசன்னா தெரிவித்திருக்கிறார்.
ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணியில் குல்தீப் யாதவ், அக்சர் பட்டேல், ஜடேஜா,வாஷிங்டன் சுந்தர் என நான்கு சுழற் பந்துவீச்சாளர்கள் தேர்வு செய்யப்பட்டு இருக்கிறார்கள். ஆனால் வேகபந்துவீச்சாளர்கள் மூன்று பேர் தான் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார்கள்.

ஆல்ரவுண்டர் வேகப்பந்துவீச்சாளர் ஹர்திக் பாண்டியா ஒருவர் இருக்கிறார். இந்த நிலையில் இது குறித்து அஸ்வின் உடன் நடைபெற்ற உரையாடலில் பேசிய பிரசன்னா இந்திய அணியின் தேர்வு முறையில் தவறு இருப்பதாக சுட்டிக் காட்டியுள்ளார். சாம்பியன்ஸ் கோப்பை தொடர் ஒன்றும் உலகக்கோப்பை தொடர்பு போல் நீண்ட நெடிய தொடர் கிடையாது. இது ஆரம்பித்த உடனே முடிந்துவிடும் என்று பிரசன்னா கூறி இருக்கிறார்.
வெறும் மூன்று லீக் போட்டிகள் தான் இந்தியா விளையாடுகிறது. இதில் ஒரு தவறு செய்தால் கூட தொடரை விட்டு வெளியேறும் நிலை ஏற்பட்டு விடும். இந்த சூழலில் துபாயில் ஆடுகளம் தற்போது சுழற் பந்து வீச்சுக்கு சாதகமாக இருப்பதில்லை. முதல் 10 ஓவர்லிருந்து 15 ஓவர் வரை வேகப்பந்து வீச்சாளர்கள் தான் தாக்கத்தை ஏற்படுத்துகிறார்கள். அது மட்டும் இல்லாமல் தற்போது துபாயில் பனிப்பொழிவு அதிகமாக இருக்கிறது.
இதனால் இரண்டு சுழற் பந்துவீச்சாளர்களுக்கு மேல் பிளேயிங் லெவனில் இருந்தால் நிச்சயம் அது இந்திய அணிக்கு தான் ஆபத்தாக இருக்கும். எனவே வேகப்பந்து வீச்சாளர்களை அதிகப்படுத்தி விட்டு சுழற் பந்துவீச்சாளர்கள் குறைந்த அளவு அணியில் எடுத்திருக்க வேண்டும். ஏற்கனவே டி20 உலக கோப்பை தொடரும்போது கூடுதலாக சுழற் பந்துவீச்சாளர்களை அழைத்துச் சென்றார்கள்.
இதில் சாகல் ஒரு போட்டியில் கூட விளையாடாமல் கடற்கரையில் ஓய்வு எடுத்துக் கொண்டிருந்தார். தற்போது அதே தவறை தான் இந்தியா மீண்டும் செய்கிறது. என்னை கேட்டால் வாஷிங்டன் சுந்தர் பதில் முகமது சிராஜ் போன்ற வேகபந்துவீச்சாளரை அணியில் தேர்வு செய்திருக்க வேண்டும். இதேபோன்று ஜெய்ஸ்வாலை அணியில் எதற்கு எடுத்தார்கள் என்று தெரியவில்லை. துணை கேப்டன் என்ற பொறுப்பு கில்லுக்கு கொடுத்து இருக்கிறார்கள்.
இதனால் கில் அணியை விட்டு நீக்கப்பட வாய்ப்பே கிடையாது. இதன் காரணமாக ஜெய்ஸ்வாலுக்கு பதில் சஞ்சு சாம்சன் அல்லது வேறு ஏதேனும் வீரர்களை தேர்வு செய்திருக்கலாம். இதேபோன்று விக்கெட் கீப்பராக கே.எல் ராகுல் தான் இடம்பெற வேண்டும் என்றும் பிரசன்னா கூறி இருக்கிறார். யுக்திகள் வகுப்பதில் இந்திய அணி மீண்டும் தவறு செய்தால் ஆஸ்திரேலிய அணி கடந்த முறை உலக கோப்பையில் தோற்கடித்தது போல் இம்முறையும் இந்தியாவை தோற்கடித்து ரசிகர்களை அமைதியாக்கிவிடும் என்று பிரசன்னா எச்சரிக்கை விடுத்திருக்கிறார்.