மும்பை: சிவம் துபேவுக்கு 2025 சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான இந்திய அணியில் ரிசர்வ் வீரராக இடம் அளிக்கப்பட்டுள்ளது. இது அவருக்குக் கிடைத்த ஒரு எதிர்பாராத வாய்ப்பாக அமைந்துள்ளது
சிவம் துபே இதுவரை நான்கு சர்வதேச ஒருநாள் போட்டிகளில் மட்டுமே ஆடி இருக்கிறார். டி20 அணியிலும் கூட இடையே அவருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டது. இங்கிலாந்து அணிக்கு எதிரான டி20 தொடரில், ரிங்கு சிங் மற்றும் நிதிஷ் குமார் ரெட்டிக்கு காயம் ஏற்பட்டபோதுதான் சிவம் துபே மாற்று வீரராக மீண்டும் அணியில் இடம் பிடித்தார்.

தனக்குக் கிடைத்த வாய்ப்பை அவர் பயன்படுத்தி அதிரடியாக ரன்கள் குவித்ததால், அவருக்கான முக்கியத்துவம் மீண்டும் அதிகரித்தது. அவர் இனி தொடர்ந்து டி20 அணியில் வாய்ப்பு பெறுவார் என்ற எதிர்பார்ப்பு இருந்தது.
இந்த நிலையில், யாரும் எதிர்பாராத விதமாக 2025 சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான அணியில் ரிசர்வ் வீரராக இடம் பிடித்து இருக்கிறார் சிவம் துபே. சாம்பியன்ஸ் டிராபியில் போட்டிகளில் ஆடும் வாய்ப்பு கிடைக்காவிட்டாலும், தொடரின் இடையே ஏதேனும் ஒரு மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனுக்கு காயம் ஏற்பட்டால், அணியில் இடம்பெறும் வாய்ப்பு கிடைக்கும்.
மேலும், சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான ரிசர்வ் வீரராக அவர் இருப்பதால், வருங்காலத்தில் ஒருநாள் அணியிலும் அவருக்கு வாய்ப்பு கிடைக்கக்கூடும். அந்த வகையில், இது சிவம் துபேவுக்குக் கிடைத்த அதிர்ஷ்டமான வாய்ப்பு என்று பார்க்க வேண்டும்.
சிவம் துபே வேகப்பந்து வீச்சாளராக இருந்தாலும், அவரை சிஎஸ்கே அணி பேட்ஸ்மேனாக மட்டுமே பயன்படுத்தி வந்தது. ஆனால், இந்திய டி20 அணியில் சிவம் துபே பந்து வீச்சாளராகவும் பயன்படுத்தப்படுகிறார். அவர் ஆல்ரவுண்டர் என்ற காரணத்திற்காகவே அவர் தொடர்ந்து டி20 அணியில் வாய்ப்பு பெற்று வருகிறார்.
தற்போது, சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான அணியில் இருக்கும் வேகப்பந்து வீச்சாளர் ஹர்திக் பாண்டியாவுக்கு காயம் ஏற்பட்டால், சிவம் துபேவுக்கு இந்திய அணியில் வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கலாம். அவர் மட்டுமின்றி, ஸ்ரேயாஸ் ஐயருக்கும் காயம் ஏற்பட்டாலும், சிவம் துபேவுக்கு வாய்ப்பு கிடைக்கும். சிவம் துபே சுழற்பந்து வீச்சாளர்களை அடித்து ஆடுவதில் வல்லவர் என்பதால், இந்த வாய்ப்பு அவருக்கு கிடைத்திருக்கலாம் என விமர்சகர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்திய அணி விளையாட உள்ள போட்டிகள் அனைத்தும் துபாயில் நடைபெற உள்ளன. அங்கு சுழற்பந்து வீச்சாளர்களுக்கு சாதகமான ஆடுகளங்கள் இருக்கும். ஒருவேளை இந்திய அணியில் சிவம் துபேவுக்கு பிளேயிங் லெவனில் வாய்ப்பு கிடைத்தால், அதை பயன்படுத்தி அவர் சுழற்பந்து வீச்சாளர்களுக்கு எதிராக பெரிய ஸ்கோர் எடுக்க முயற்சிப்பார் என எதிர்பார்க்கலாம்.