துபாய்: 2025 சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரில் இந்தியா விளையாடும் போட்டிகள் அனைத்தும் துபாயில் நடைபெற உள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன. 2025 ஐசிசி சாம்பியன்ஸ் ட்ராபி கிரிக்கெட் தொடரை பாகிஸ்தான் நடத்த உள்ளது.
இந்திய கிரிக்கெட் அணி பாகிஸ்தானுக்கு செல்ல மறுத்ததை அடுத்து இந்தியா விளையாடும் போட்டிகளை மட்டும் துபாயில் நடத்த முடிவு எட்டப்பட்டு இருக்கிறது. முன்னதாக இலங்கையில் உள்ள கொழும்பு மைதானம் அல்லது ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாய் மைதானத்தில் இந்தியா விளையாடும் போட்டிகளை நடத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டு வந்தது.

அதன் முடிவில் இந்தியா ஆடும் போட்டிகளை துபாயில் நடத்த முடிவு எட்டப்பட்டு இருக்கிறது. தொடரை நடத்தும் பாகிஸ்தான் தான் இதில் இறுதி முடிவை எடுத்தது எனக் கூறப்படுகிறது. பாகிஸ்தான் கிரிக்கெட் அமைப்பே இந்தியா ஆடும் போட்டிகளை துபாயில் நடத்த முடிவு செய்தது. அதற்கு அனைத்து தரப்பும் ஒப்புக்கொண்டதை எடுத்து குரூப் சுற்றில் இந்தியா விளையாடும் மூன்று போட்டிகள் துபாயில் நடத்தப்படும் என முதற்கட்டமாக முடிவு கட்டப்பட்டுள்ளது.
ஒருவேளை இந்திய அணி அரை இறுதி மற்றும் இறுதிப் போட்டிக்கு முன்னேறினால், அப்போதும் இந்தியா விளையாடும் போட்டிகள் துபாயில் நடத்தப்படும். குரூப் சுற்றில் பாகிஸ்தானுடன் இந்தியா ஒரு போட்டியில் விளையாட உள்ளது. அந்தப் போட்டியும் துபாயில் நடைபெற உள்ளது.
தொடரை நடத்தும் பாகிஸ்தான் அதற்காக துபாய்க்கு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டு இருக்கிறது. கடந்த ஆறு ஆண்டுகளில் மூன்று முறை இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆடிய போட்டிகள் துபாயில் நடத்தப்பட்டுள்ளன. 2018 மற்றும் 2022 ஆசிய கோப்பையில் இந்தியா - பாகிஸ்தான் போட்டிகள் துபாயில் நடந்தன. 2021 டி20 உலகக் கோப்பையிலும் இந்தியா மற்றும் பாகிஸ்தான் விளையாடிய போட்டி துபாயில் நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.