துபாய்: இந்திய வீரர் சுப்மன் கில்லை காயப்படுத்த வேண்டும் என தான் அவரை வெளியேறுமாறு சொல்லவில்லை எனவும், தனது செயலுக்கு மன்னிப்பு கோரி இருக்கிறார் பாகிஸ்தான் அணியின் சுழற் பந்துவீச்சாளர் அப்ரார் அகமது. மேலும், தான் விராட் கோலியை சீண்டியதை பற்றியும் பேசி இருக்கிறார்.
2025 சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதிய போட்டியில் அந்த பரபரப்பான சம்பவம் நடந்தது. அந்த போட்டியில் இந்திய அணி பாகிஸ்தான் அணி நிர்ணயித்த 242 ரன்கள் என்ற இலக்கை நோக்கி ஆடி கொண்டு இருந்தது. அப்போது விராட் கோலி மற்றும் சுப்மன் கில் களத்தில் இருந்தனர்.

சுப்மன் கில்லின் விக்கெட்டை வீழ்த்திய பிறகு பாகிஸ்தான் அணியின் சுழற் பந்துவீச்சாளர் அப்ரார் அகமது கையை கட்டி நின்று கொண்டு தனது தலையை மட்டும் அசைத்து சுப்மன் கில்லை மைதானத்தை விட்டு வெளியேறுமாறு சைகை செய்தார். அது தேவையற்ற சர்ச்சையாக மாறியது.
அப்போது பாகிஸ்தான் அணி வெற்றி பெறும் நிலையிலும் இல்லை, அப்படி இக்கட்டான நிலையில் இருக்கும்போதும் இது போன்ற விக்கெட் வீழ்ச்சி கொண்டாட்டங்கள் தேவையா என்ற கேள்வி எழுந்தது. முன்னாள் பாகிஸ்தான் வீரர்களை அவரை விமர்சித்து இருந்தனர்.
இது பற்றி தற்போது அப்ரார் அகமது விளக்கம் அளித்து மன்னிப்பு கோரி இருக்கிறார். இது பற்றி அவர் அளித்த பேட்டியில், "அந்த விக்கெட் வீழ்ச்சி கொண்டாட்டம் தான் எனது முறை. அதில் எந்த தவறும் இருப்பதாக நான் நினைக்கவில்லை. எந்த ஒரு அம்பயரோ, அதிகாரியோ நான் செய்தது தவறு என சொல்லவில்லை. ஆனால் அதனால் யாருக்கேனும் காயம் ஏற்பட்டிருந்தால் நான் அதற்காக மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். நான் யாரையும் காயப்படுத்த வேண்டும் என அவ்வாறு செய்யவில்லை" என்றார்.
மேலும் தான் விராட் கோலியை சிக்ஸ் அடிக்குமாறு கூறி சீண்டியதாகவும் ஒரு விளக்கத்தை அளித்து இருக்கிறார். விராட் கோலியை சிக்ஸ் அடிக்குமாறு தான் சொன்னதாகவும், ஆனால் விராட் கோலி அதற்கு கோபம் அடையாமல் இருந்ததோடு போட்டி முடிந்தவுடன் தனது பந்துவீச்சை பாராட்டினார் எனவும் கூறியிருக்கிறார் அப்ரார் அகமது.
இது பற்றி அப்ரார் அகமது பேசுகையில், "விராட் கோலிக்கு பந்து வீச வேண்டும் என்ற எனது சிறு வயது கனவு துபாயில் நிறைவேறியது. இது மிகப்பெரிய சவால். எனவே, நான் எனக்கு கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி அவரை சீண்டினேன். எனது பந்துவீச்சில் சிக்ஸ் அடிக்குமாறு சொன்னேன். ஆனால், அவர் கோபம் அடையவில்லை. விராட் கோலி மிகப்பெரிய பேட்ஸ்மேன் என நம் அனைவருக்கும் அது தெரியும். ஆனால், அவர் சிறந்த மனிதரும் கூட. அவர் போட்டி முடிந்தவுடன் நான் நன்றாக பந்து வீசியதாக சொன்னார். அந்த நாளில் நான் மிகவும் மகிழ்ச்சி அடைந்தேன்" என்றார் அப்ரார் அகமது.