துபாய்: 2025 சாம்பியன்ஸ் டிராபி தொடரின் இறுதிப் போட்டியில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோத உள்ள நிலையில், அந்தப் போட்டிக்கான நடுவர்கள் பட்டியலை சர்வதேச கிரிக்கெட் அமைப்பு வெளியிட்டிருக்கிறது. ஆஸ்திரேலியாவின் வின் பால் ரைபிள் மற்றும் இங்கிலாந்தின் ரிச்சர்ட் இல்லிங்வொர்த் ஆகிய இருவரும் கள நடுவர்களாக செயல்பட உள்ளனர்.
இலங்கையின் ரஞ்சன் மதுகலே போட்டி நடுவராக செயல்பட இருக்கிறார். மூன்றாவது நடுவராக ஜோயல் வில்சன், நான்காவது நடுவராக குமார் தர்மசேனா செயல்பட உள்ளனர். இவர்கள் அனைவருமே இந்திய அணி ஆடிய பல்வேறு சர்வதேச போட்டிகளில் நடுவர்களாக செயல்பட்டவர்கள் தான்.

இதில் ரிச்சர்ட் இல்லிங்வொர்த் அதிக கவனத்தை பெறுகிறார். ஏனெனில் அவர் இந்திய அணி ஆடும் முக்கியமான போட்டிகளுக்கு எல்லாம் நடுவராக இருந்துள்ளார். 2023 ஒருநாள் போட்டி உலகக் கோப்பை இறுதிப் போட்டி மற்றும் 2024 டி20 உலகக் கோப்பை இறுதிப் போட்டிகளுக்கும் அவர் நடுவராக செயல்பட்டு இருக்கிறார்.
அந்த இரண்டு போட்டிகளிலும் இந்திய அணி விளையாடிய நிலையில், அந்த இரண்டு போட்டிகளிலும் நடுவராக செயல்பட்டவர் தற்போது மூன்றாவது முறையாக இந்திய அணி இறுதிப் போட்டியில் விளையாடும் போது நடுவராக செயல்பட இருக்கிறார். இந்த பட்டியலில் உள்ள ஐந்து பேரில் அவர் மட்டுமே அந்த இரண்டு இறுதிப் போட்டிகளிலும் நடுவராக செயல்பட்டவர்.
2023 உலகக் கோப்பையில் இந்திய அணி தோல்வி அடைந்தது, ஆனால் 2024 டி20 உலகக் கோப்பையில் இந்திய அணி வெற்றி பெற்றது. அந்த வகையில் ரிச்சர்ட் இல்லிங்வொர்த் ராசியானவரா? தவறான முடிவுகளை அளிப்பாரா? என ரசிகர்கள் சமூக வலைதளங்களில் விவாதத்தை துவக்கி உள்ளனர். ஆனால் இதெல்லாம் தேவையற்ற விஷயமாகவே இருக்கும். அவர் அம்பயராக செயல்பட்ட போதுதான் இந்திய அணி டி20 உலகக்கோப்பையை வென்று இருந்தது. சமீபத்தில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான அரையிறுதியையும் வென்று இருந்தது.
இந்திய அணியை பொறுத்தவரை இதுவரை தனது போட்டிகள் அனைத்தையும் துபாயில் விளையாடி உள்ளது. அதே மைதானத்தில் தான் நியூசிலாந்து அணிக்கு எதிராக இறுதிப் போட்டியில் விளையாட உள்ளது. இதே துபாய் மைதானத்தில் நியூசிலாந்து அணியை இந்திய அணி 44 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இருந்தது குறிப்பிடத்தக்கது.
மேலும்,. குரூப் சுற்றில் வங்கதேசம் மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு எதிராகவும் இந்திய அணி வெற்றி பெற்றது. அரையிறுதியில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக இந்திய அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. எனவே, இந்திய அணி தற்போது நல்ல ஃபார்மில் இருக்கிறது. இறுதிப்போட்டி என்ற பதற்றம் இல்லாமல் தவறுகளை செய்யாமல் ஆடினாலே இந்திய அணி வெற்றி பெறும். நடுவர்கள் யாராக இருந்தாலும் அது இந்திய அணியை எந்த வகையிலும் பாதிக்கப் போவதில்லை.