துபாய்: சுமார் எட்டு ஆண்டுகளுக்கு பிறகு சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் நடைபெற உள்ளது. 2017 ஆம் ஆண்டில் கடைசியாக சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் நடைபெற்று இருந்தது. இந்த நிலையில் இந்த முறை சாம்பியன்ஸ் டிராபி கோப்பையை வெல்லப் போவது யார்? என்ற எதிர்பார்ப்பு உள்ளது.
இதுபற்றி முன்னாள் வீரர்கள் ரிக்கி பாண்டிங் மற்றும் ரவி சாஸ்திரி தங்கள் கணிப்புகளை வெளியிட்டு உள்ளனர். அவர்கள் இருவரும் இரண்டு முக்கிய அணிகள் தான் இறுதி போட்டிக்கு முன்னேறும் என ஒரே மாதிரியாக கூறி உள்ளனர். 2017 சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டியில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதின.

அப்போது பாகிஸ்தான் அணி வெற்றி பெற்று கோப்பையை வென்று இருந்தது. ஆனால், இந்த முறை இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் தான் வலுவாக உள்ளன என்றும், அந்த இரண்டு அணிகளே இறுதிப் போட்டிக்கு முன்னேறும் எனவும் ரவி சாஸ்திரி மற்றும் ரிக்கி பாண்டிங் கணித்து உள்ளனர்.
அரை இறுதிக்கு முன்னேற உள்ள அணிகளாக ரவி சாஸ்திரி இங்கிலாந்து, தென்னாப்பிரிக்காவையும் சேர்த்து இருக்கிறார். இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து மற்றும் தென்னாபிரிக்கா ஆகிய நான்கு அணிகள் அரை இறுதிக்கு முன்னேறும் என ரவி சாஸ்திரி கூறி இருக்கிறார்.
ரிக்கி பாண்டிங்கிடம் எந்த நான்கு அணிகள் அரை இறுதிக்கு முன்னேறும்? என கேட்கப்பட்ட பொது அவர் இந்தியா, ஆஸ்திரேலியா உடன் பாகிஸ்தான் அணியையும் குறிப்பிட்டார். இந்த முறை பாகிஸ்தான் அணி அதன் சொந்த மண்ணில் சாம்பியன்ஸ் டிராபி தொடரில் விளையாட இருப்பதால் அந்த அணிக்கு சாதகமாக இருக்கும் என்றார் பாண்டிங்.
மேலும், சமீபத்தில் பாகிஸ்தான் அணி ஆஸ்திரேலியா மற்றும் தென்னாபிரிக்கா அணிகளுக்கு எதிரான ஒருநாள் தொடர்களை அந்த அணிகளின் சொந்த மண்ணிலேயே வைத்து கைப்பற்றி இருந்தது என்பதையும் சுட்டிக் காட்டினார் பாண்டிங். நான்காவதாக அவர் எந்த அணியையும் தேர்வு செய்யவில்லை.
2025 சாம்பியன்ஸ் டிராபி தொடர் வரும் பிப்ரவரி 19 அன்று துவங்க உள்ளது. முதல் போட்டியில் பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிகள் மோத உள்ளன. இந்தியா ஆடும் போட்டி பிப்ரவரி 20 அன்று தொடங்க உள்ளது. இந்திய அணி அதன் முதல் போட்டியில் வங்கதேச அணிக்கு எதிராக விளையாட உள்ளது. இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் முதல் முக்கிய போட்டி பிப்ரவரி 23 அன்று நடைபெற உள்ளது. இந்த தொடரின் இறுதிப் போட்டி மார்ச் 9 அன்று நடைபெற உள்ளது.