மும்பை: 2025 சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் இந்திய அணி துபாய் மைதானத்திலேயே தனது அனைத்து போட்டிகளையும் விளையாடி வெற்றி பெற்றது குறித்து பலரும் விமர்சித்து வருகின்றனர். ஆனால், ஆஸ்திரேலிய ஜாம்பவான் கிளென் மெக்ராத் அதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
இந்திய அணிக்கு இருந்த ஒரே வழி அது மட்டுமே என அவர் குறிப்பிட்டுள்ளார். 2025 சாம்பியன்ஸ் கோப்பை தொடர் பாகிஸ்தானில் நடைபெற இருந்தது. இந்திய அணி பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள முடியாத நிலையில் தான் துபாயில் விளையாடியது என்பதை மெக்கிராத் சுட்டிக்காட்டியுள்ளார்.

இது பற்றி கிளென் மெக்கிராத் பேசுகையில், "இது இப்படித்தான் நடந்திருக்க முடியும். இந்திய அணி இனி பாகிஸ்தானுக்கு பயணம் செய்யாது. எனவே, இந்த தொடரை நடத்துவதற்கு ஒரே ஒரு வழி மட்டுமே இருந்தது. அதனால், அவர்களது போட்டிகள் துபாயில் நடத்தப்பட்டன. நீங்கள் நிச்சயமாக இந்தியாவை பாராட்டியாக வேண்டும். அவர்கள் அங்கிருந்த சூழ்நிலைக்கு ஏற்ப ஆடினார்கள். அவர்கள் சுழற்பந்து வீச்சுக்கு சாதகமான ஆடுகளங்களில் எவ்வளவு நன்றாக விளையாடுவார்கள் என்பது நமக்குத் தெரியும்."
"இந்திய அணி நியாயமற்ற முறையில் அதிக நன்மையை பெற்றதாக நான் நினைக்கவில்லை. நீங்கள் இதுபோல ஒரு அணி நியாயமற்ற முறையில் நன்மை பெற்றதாக கூறுகிறீர்கள் என்றால், அது இந்தியா தனது போட்டிகளை இந்தியாவில் ஆடியது அல்லது ஆஸ்திரேலியா தனது போட்டிகளை ஆஸ்திரேலியாவில் ஆடியது என்றால்தான் அப்படி சொல்ல முடியும்."
"இந்திய அணி ஐபிஎல் மற்றும் டி20 கிரிக்கெட்டில் கிடைத்த தாக்கத்தால் ஒருநாள் போட்டிகளில் நன்றாக விளையாடுகிறார்கள். தங்கள் போட்டியை எப்படி ஆட வேண்டும் என்பதைத் தெரிந்து அவர்கள் அதிக தன்னம்பிக்கையுடன் ஆடுகிறார்கள். டெஸ்ட் கிரிக்கெட்டை நாம் காப்பாற்ற வேண்டும். அதேசமயம் ஒருநாள் போட்டிகளும், உலகக் கோப்பைகளும் முக்கியம்தான்."
"இந்திய அணிக்கு ஒருநாள் போட்டியை எப்படி ஆட வேண்டும் என்பது நன்கு தெரியும். இந்தியாவுக்குச் சென்று இந்திய அணிக்கு எதிராக விளையாடுவது என்பது மிகப்பெரிய சவால். அவர்களுக்கு சவால் விடுவதை நான் விரும்புகிறேன். இந்திய அணி நிச்சயம் தரமான அணி" என்று மெக்ராத் கூறினார்.