துபாய்: 2025 சாம்பியன்ஸ் டிராபி தொடரில் தங்கப் பந்து (Golden Ball) விருதை முகமது ஷமி வெல்வாரா? என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. ஆனால், அவருக்கு நியூசிலாந்து பந்துவீச்சாளர் ஹென்ரி முட்டுக்கட்டை போட்டு இருக்கிறார். வருண் சக்கரவர்த்தி அந்த விருதை வெல்ல வாய்ப்பு உள்ளது என்றாலும் அதுவும் சற்று கடினமே.
சாம்பியன்ஸ் டிராபி தொடரில் ஒவ்வொரு முறையும் தொடரின் முடிவில் அதிக விக்கெட் வீழ்த்தும் பந்துவீச்சாளருக்கு தங்கப் பந்து விருது வழங்கப்படும். 2025 சாம்பியன்ஸ் டிராபியின் தங்கப்பந்து விருதை வெல்லும் வாய்ப்பு நான்கு பந்து வீச்சாளர்களுக்கு உள்ளது.

தற்போது நடைபெற்று வரும் சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இன்னும் இறுதிப் போட்டி மட்டுமே மீதம் உள்ள நிலையில், நியூசிலாந்தின் மேட் ஹென்ரி நான்கு போட்டிகளில் 10 விக்கெட்களை வீழ்த்தி அதிக விக்கெட் வீழ்த்தியவர்கள் பட்டியலில் முதலிடத்தில் இருக்கிறார்.
முகமது ஷமி நான்கு போட்டிகளில் 8 விக்கெட்களை வீழ்த்தி இரண்டாவது இடத்தில் இருக்கிறார். இந்தியாவின் சுழற் பந்துவீச்சாளர் வருண் சக்கரவர்த்தி இரண்டு போட்டிகளில் மட்டுமே விளையாடி 7 விக்கெட்களை வீழ்த்தி மூன்றாவது இடத்தில் இருக்கிறார். நியூசிலாந்து கேப்டன் மிட்செல் சாண்ட்னர் நான்கு போட்டிகளில் 7 விக்கெட்களை வீழ்த்தி இருக்கிறார்.
இந்த நால்வருக்கும் தான் தற்போது தங்கப் பந்துக்கான வாய்ப்பு அதிகம் உள்ளது. இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோத உள்ள இறுதிப் போட்டியில் இந்த நால்வரில் அதிக விக்கெட்களை வீழ்த்துபவர்கள் அந்த விருதை வெல்வார்கள். மேட் ஹென்ரி தற்போது 10 விக்கெட்களுடன் இருப்பதால், அவர் நிச்சயம் இந்த விருதை வெல்வதற்கு அதிக வாய்ப்பு உள்ளது.
மேட் ஹென்ரி இறுதிப் போட்டியில் வீழ்த்தும் விக்கெட்களின் எண்ணிக்கையை விட முகமது ஷமி 3 விக்கெட்கள் அதிகமாக வீழ்த்தினால் மட்டுமே தங்கப் பந்து விருதை வெல்ல முடியும். வருண் சக்கரவர்த்தி, மேட் ஹென்ரியை விட 4 விக்கெட்கள் அதிகமாக வீழ்த்த வேண்டும். இதற்கான வாய்ப்புகள் உள்ளன. மேட் ஹென்ரி விக்கெட் வீழ்த்தாமலே கூட போவதற்கு வாய்ப்பு உள்ளது.
அப்படி நடந்தால் முகமது ஷமி மற்றும் வருண் சக்கரவர்த்தி அவரை முந்தி அதிக விக்கெட்கள் வீழ்த்துவதற்கு வாய்ப்பு உள்ளது. இதில் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவெனில், மேட் ஹென்ரி, முகமது ஷமி மற்றும் வருண் சக்கரவர்த்தி ஆகிய மூவரும் துபாய் மைதானத்தில் தலா ஒரு போட்டியில் 5 விக்கெட்களை வீழ்த்தியுள்ளனர்.
இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதிய போட்டியில் மேட் ஹென்ரி மற்றும் வருண் சக்கரவர்த்தி மாறி, மாறி ஐந்து விக்கெட்கள் வீழ்த்தியது குறிப்பிடத்தக்கது. அந்த போட்டியில் முகமது ஷமி ஒரு விக்கெட் கூட வீழ்த்தவில்லை என்பதும் கவனிக்கத்தக்கது.
7 விக்கெட்கள் வீழ்த்தி இருந்தாலும் சாண்ட்னர் நான்கு போட்டிகளில் மட்டுமே விளையாடி இருப்பதால் அவர் வருண் சக்கரவர்த்தியை விட குறைவாக மதிப்பிடப்படுகிறார். எனவே அவருக்கு தங்கப் பந்து விருது கிடைப்பதற்கான வாய்ப்பு குறைவாகவே உள்ளது.
இதுவரை சாம்பியன்ஸ் டிராபி வரலாற்றில் இரண்டு இந்திய பந்துவீச்சாளர்கள் மட்டுமே தங்கப் பந்து விருதை வென்று இருக்கிறார்கள். 2000-ஆம் ஆண்டு நடந்த நாக்-அவுட் டிராபி என அப்போது அழைக்கப்பட்ட சாம்பியன்ஸ் டிராபி தொடரில் வெங்கடேஷ் பிரசாத் நான்கு போட்டிகளில் 8 விக்கெட்களை வீழ்த்தி அந்த விருதை வென்றார்.
அதன் பின் 2013-வது ஆண்டு இந்திய அணி சாம்பியன்ஸ் டிராபி பட்டம் வென்ற நிலையில், அப்போது ரவீந்திர ஜடேஜா 12 விக்கெட்களை வீழ்த்தி அந்த விருதை வென்றார். அந்தத் தொடரில் ரவீந்திர ஜடேஜா ஒரு போட்டியில் கூட ஒரு ஓவருக்கு சராசரியாக நான்கு ரன்களுக்கு மேல் விட்டுக் கொடுக்கவில்லை. அதன் காரணமாகவும் அவருக்கு அப்போது அந்த விருது வழங்கப்பட்டது. இந்த முறை மேட் ஹென்ரி, முகமது ஷமி அல்லது வருண் சக்கரவர்த்தி ஆகிய மூவரில் யார் தங்கப்பந்து விருதை வெல்லப் போகிறார்கள் என பொறுத்திருந்து பார்ப்போம்.