மும்பை : சாம்பியன்ஸ் கோப்பை தொடருக்கான இந்திய அணியில் பல வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை என்று குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதில் குறிப்பாக இந்திய அணியின் விக்கெட் கீப்பராக கே எல் ராகுல் மற்றும் ரிஷப் பண்ட் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டு இருக்கிறார்கள்.
ஆனால் சர்வதேச கிரிக்கெட்டில் 16 ஒரு நாள் போட்டிகளில் விளையாடி 56 ரன்கள் என சராசரி வைத்திருக்கும் கேரளாவைச் சேர்ந்த சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. தற்போது டி20 கிரிக்கெட்டில் கடந்த சில மாதங்களில் மூன்று சதம் அடித்திருக்கும் சஞ்சு சாம்சன் பெயர் இடம்பெறாதது ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்திருக்கிறது.

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள முன்னாள் கிரிக்கெட் வீரர் ஹர்பஜன்சிங், "உண்மையிலேயே சஞ்சு சாம்சனுக்காக நான் வருத்தப்படுகிறேன். இந்திய அணிக்காக ரன்களை சேர்த்த பிறகும் அவர் அணியிலிருந்து நீக்கப்படுகிறார். இந்திய அணியில் 15 பேரை மட்டும் தான் தேர்வு செய்ய முடியும் என்று எனக்கு நன்றாக தெரியும்".
"ஆனால் சஞ்சு சாம்சன், ஒருநாள் கிரிக்கெட்டுக்கு ஏற்ற வீரராக விளங்குகிறார். அவர் ஒரு நாள் கிரிக்கெட்டில் சராசரி 56 என்ற அளவில் வைத்திருக்கிறார். ஆனால் அணியின் இரண்டாவது விக்கெட் கீப்பராக கூட அவரை தேர்வு செய்யவில்லை. சஞ்சு சாம்சன் பற்றி நாம் பேச ஆரம்பித்தால், எந்த இடத்தில் அவரை தேர்வு செய்வீர்கள் என்று கேட்கிறார்கள். இடத்தை நாமே உருவாக்கி கொடுக்க வேண்டும் என்பதுதான் என்னுடைய பதில்".
"சாம்சன் மட்டுமல்ல சாகலும் இந்திய அணியில் தேர்வு செய்யப்படவில்லை. நீங்கள் நான்கு சுழற் பந்துவீச்சாளர்களை தேர்வு செய்து இருக்கிறீர்கள். இதில் இரண்டு பேர் இடது கை சுழற் பந்து வீச்சாளர்கள் அப்படி இருந்தால் ஒரு லெக் ஸ்பின்னரான சாஹலையும் நீங்கள் தேர்வு செய்து இருக்கலாம். அவர் என்ன தவறு செய்தார் என்று எனக்குத் தெரியவில்லை. அவர் ஒரு நல்ல வீரர்".
"சாகலை அணியில் சேர்த்திருக்க வேண்டும். நான் ஜெய்ஸ்வால்தான் தொடக்க வீரராக விளையாடுவார் என நினைத்தேன்.தற்போது கில் துணை கேப்டனாக அறிவிக்கப்பட்டிருப்பதால் கில்லுக்கு தான் முக்கியத்துவம் வழங்கப்படும். எனவே ஜெய்ஸ்வால் 3 அல்லது நான்காவது வீரராக விளையாட முடியாது. ஏனென்றால் அந்த இடத்தில் கோலி, ஸ்ரேயாஸ் இருக்கிறார்கள்" என்று ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார்.