துபாய்: 2025 சாம்பியன்ஸ் டிராபி தொடர் இன்னும் சில தினங்களில் துவங்க உள்ள நிலையில் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் தலைமை செயல் அதிகாரி ஜெஃப் அலார்டிஸ் தனது பதவியில் இருந்து விலகி இருக்கிறார். இதற்கு காரணம் பாகிஸ்தான் கிரிக்கெட் அமைப்பு செய்த சொதப்பல் தான் என கூறப்படுகிறது.
2025 சாம்பியன்ஸ் டிராபி தொடரை பாகிஸ்தான் நடத்துவதற்கு அனுமதி அளித்திருந்தது சர்வதேச கிரிக்கெட் கவுன்சில். பல ஆண்டுகளுக்கு முன்பே இந்த முடிவு எடுக்கப்பட்ட நிலையில் பாகிஸ்தானில் உள்ள மைதானங்களை புனரமைக்கும் பணிகளை பாகிஸ்தான் கிரிக்கெட் அமைப்பு மேற்கொள்ள வேண்டி இருந்தது.

ஆனால், பாகிஸ்தான் கிரிக்கெட் அமைப்பின் நிர்வாகத்தில் ஏற்பட்ட அரசியல் ரீதியான மாற்றங்கள் மற்றும் குளறுபடிகள் காரணமாக அந்த பணிகள் தாமதமானது. தற்போது சாம்பியன்ஸ் டிராபி தொடர் பிப்ரவரி 19 அன்று துவங்க உள்ள நிலையில் இன்னும் இந்த தொடர் நடைபெற உள்ள மூன்று மைதானங்களிலும் புனரமைப்பு பணிகள் முடிவுக்கு வரவில்லை.
சாதாரண புனரமைப்பு என்பதை தாண்டி கராச்சி, ராவல்பிண்டி மற்றும் லாகூர் என சாம்பியன்ஸ் டிராபி தொடர் நடைபெற உள்ள மூன்று மைதானங்களிலும் புதிய கட்டுமானங்களையும் உருவாக்கி வருகிறது பாகிஸ்தான் கிரிக்கெட் அமைப்பு. எப்போதும் ஒரு பெரிய கிரிக்கெட் தொடர் நடைபெறும் முன்பு சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் போட்டி நடைபெற உள்ள மைதானங்களை ஆய்வு செய்து, போட்டிகளை நடத்துவது பாதுகாப்பானதா? என சரி பார்த்து அனுமதி வழங்கும்.
ஆனால், இந்த முறை அதற்கு வாய்ப்பு இல்லை. இன்னும் மைதானங்கள் தயாராகாததால் வேறு வழியின்றி டிக்கெட் விற்பனையை துவக்கி இருக்கிறது சர்வதேச கிரிக்கெட் கவுன்சில். பாகிஸ்தான் கிரிக்கெட் அமைப்பு ஏற்பாடுகளை சரியாக செய்யும் என அனுமதி அளித்திருந்த தலைமை செயல் அதிகாரி ஜெஃப் அலார்டிஸ் தற்போது தனது பதவியில் இருந்து ராஜினாமா செய்து இருக்கிறார்.
சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் தலைவராக இந்தியாவின் ஜெய் ஷா இருக்கும் நிலையில், ஜெஃப் அலார்டிஸ் பதவி விலகி இருப்பது முக்கியமான விஷயமாக பார்க்கப்படுகிறது. தற்போது பிப்ரவரி 19ஆம் தேதிக்குள் பாகிஸ்தானில் உள்ள மைதானங்கள் தயாராகிவிடும் என அந்த நாட்டின் கிரிக்கெட் அமைப்பு உறுதி அளித்து இருக்கிறது.
எனினும், ஆயிரக்கணக்கான ரசிகர்கள் கூடும் இடங்களில் கட்டப்பட்டு இருக்கும் முழுமையடையாத புதிய கட்டிடங்கள் பாதுகாப்பானதா? என்பது கேள்விக்குறியாக உள்ளது. அவை அனைத்தும் அவசரகதியில் கட்டப்பட்டு இருக்கும் நிலையில் பாதுகாப்பு தொடர்பாக நிச்சயமற்ற சூழ்நிலை நிலவி வருகிறது. இதனிடையே அந்த மைதானங்களில் சாம்பியன்ஸ் டிராபி தொடர் நடைபெற உள்ளது.