கொழும்பு : 2025 ஆம் ஆண்டு சாம்பியன்ஸ் கோப்பை தொடர் பாகிஸ்தானில் வரும் பிப்ரவரி மாதம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இந்தியா இந்த தொடரில் விளையாட பாகிஸ்தான் வரப்போவதில்லை என்று அண்மையில் அறிவித்தது.
மேலும் தாங்கள் இந்த தொடரில் பங்கேற்க வேண்டும் என்றால் ஹைபிரிட் மாடலில் வேறு ஏதேனும் நாட்டில் இந்திய அணி விளையாடும் போட்டிகளை நடத்த வேண்டும் என்று பிசிசிஐ கோரிக்கை விடுத்திருந்தது. இது ஐசிசிக்கு மிகப்பெரிய தர்ம சங்கடத்தை ஏற்படுத்தியது.

இந்தியா இந்த தொடரில் பங்கேற்கவில்லை என்றால் சாம்பியன்ஸ் கோப்பை தொடர் பெரும் நஷ்டத்தை சந்திக்கும். அதே சமயம் இந்தியா பேச்சைக் கேட்டு ஹைபிரிட் மாடலை பயன்படுத்தி போட்டிகளை இலங்கை மற்றும் துபாயில் நடத்தினால் பிசிசிஐ பேச்சை ஐசிசி கேட்கிறது என்ற குற்றச்சாட்டுகளும் வரும். இந்த நிலையில் தான் ஐசிசி யின் ஆலோசனைக் கூட்டம் இலங்கை தலைநகர் கொழும்புவில் இன்று நடைபெற்றது.
இதில் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் சார்பாக சாம்பியன்ஸ் கோப்பை தொடரை நடத்துவதற்கான 384 கோடி ரூபாய் வேண்டும் என்று பட்ஜெட்டை தாக்கல் செய்தது. இதனை ஐசிசி நிர்வாகிகள் ஏற்றுக்கொண்டு அதற்கான நிதி வழங்க ஒப்புதல் அளித்திருக்கிறார்கள். மேலும் இந்த கூட்டத்தில் ஹைபிரிட் முறை குறித்து ஐசிசி ஆலோசனை நடத்தும் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் அது குறித்து எந்த ஒரு பேச்சும் இடம்பெறவில்லை. மேலும் போட்டிகளை நடத்துவதற்கான பட்ஜெட்டையும் ஐசிசி ஒதுக்கி விட்டதால், இந்திய அணி கண்டிப்பாக பாகிஸ்தான் வந்து விளையாட வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டிருக்கிறது. இதனால் சாம்பியன்ஸ் கோப்பை தொடர பாகிஸ்தானுக்கு சென்று இந்தியா விளையாட வேண்டும்.
இல்லையெனில் இந்த தொடரில் இருந்து இந்தியா புறக்கணித்து விடும். அப்படி செய்தால் இந்தியாவுக்கு பதிலாக இலங்கை அல்லது வெஸ்ட் இண்டீஸ் போன்ற அணிகள் இந்த தொடரில் மாற்று அணியாக பங்கேற்கும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்திய அணி கடைசியாக 2008 ஆம் ஆண்டு பாகிஸ்தானுக்கு சென்று ஆசிய கோப்பை தொடரில் விளையாடியது குறிப்பிடத்தக்கது.