மும்பை: 2025 ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடர் பிப்.19 முதல் மார்ச் 9 வரை பாகிஸ்தானில் நடக்கவுள்ளது. ஏற்கனவே இதற்கான முதற்கட்ட அட்டவணை சமர்ப்பிக்கப்பட்டுள்ள நிலையில், இந்திய அணி விளையாடும் போட்டிகள் லாகூரில் நடத்தப்படும் என்று தெரிய வந்தது. இருப்பினும் பாகிஸ்தானுக்கு பயணித்து இந்தியா அணி விளையாடுமா என்ற சந்தேகம் எழுந்தது.
ஏனென்றால் 2008ஆம் ஆண்டுக்கு பின் இந்திய அணி ஒருமுறை கூட பாகிஸ்தான் சென்று இந்திய அணி கிரிக்கெட் போட்டிகளில் விளையாடவில்லை. இதனால் மத்திய அரசு இந்திய அணியின் பயணத்திற்கு அனுமதியளிக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது. இதனால் ஆசியக் கோப்பை போல் ஹைபிரிட் மாடலில் சாம்பியன்ஸ் டிராபியை நடத்த பிசிசிஐ தரப்பில் முயற்சிக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியது.

இதனிடையே பாகிஸ்தானைச் சேர்ந்த முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் இந்திய அணியை தூண்டிவிடும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்தனர். இந்த நிலையில் ஐசிசி தரப்பில் சாம்பியன்ஸ் டிராபி தொடரை நடத்துவதற்கான பட்ஜெட்-க்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. மொத்தமாக ரூ.544.48 கோடி சாம்பியன்ஸ் டிராபி தொடரை நடத்துவதற்காக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
அதன்படி ரூ.293 கோடி சாம்பியன்ஸ் டிராபி போட்டிகளை நடத்துவதற்காக மட்டும் ஒதுக்கப்பட்டுள்ளது. அதேபோல் ரூ.167.53 கோடி 8 நாடுகளின் பங்கேற்பு மற்றும் பரிசுத்தொகைக்காக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பின்னர் ரூ.83.76 கோடி ஒளிபரப்பு செலவுகளுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது. இதனிடையே ஐசிசி தரப்பில் அளிக்கப்பட்டுள்ள விளக்கத்தில், பாகிஸ்தானுக்கு வெளியில் சில போட்டிகளை நடத்துவதற்கும் சேர்த்து நிதி ஒதுக்கீட்டிற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் இந்திய அணி பாகிஸ்தான் பயணிக்கும் வாய்ப்புகள் குறைவு என்று பார்க்கப்படுகிறது. இதனால் கடைசி நேரத்தில் தயாராகாமல் முன்னதாக தயார் நிலையில் இருக்க ஐசிசி தரப்பில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஒருவேளை இந்தியா பயணிக்கவில்லை என்றால், மாற்று இடத்தில் போட்டிகளை நடத்த பாகிஸ்தான் தயாராக இருக்க வேண்டும் என்பதே மறைமுக செய்தியாக உள்ளது.
இதன் காரணமாக பாகிஸ்தான் செல்லவில்லை என்றாலும், இந்திய அணி தகுதி நீக்கம் செய்யப்பட வாய்ப்பில்லை என்று பார்க்கப்படுகிறது. ஆனால் இந்திய அணிக்கு மட்டும் மாற்று இடத்தில் போட்டியை நடத்தினால், இந்திய அணிக்கு எதிராக விளையாடும் அணிகள் பயணம் மேற்கொண்டு விளையாட தயாராக இருக்குமா என்பதே கேள்வியாக உள்ளது.