துபாய்: 2025 சாம்பியன்ஸ் டிராபி தொடரின் பரிசளிப்பு விழாவில், பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தைச் சேர்ந்த யாரும் பங்கேற்காத விவகாரம் சர்ச்சையாக மாறி உள்ள நிலையில், மீண்டும் பாகிஸ்தான் கிரிக்கெட் அமைப்புக்கு நோஸ் கட் செய்வது போன்ற அறிவிப்பை சர்வதேச கிரிக்கெட் அமைப்பை (ICC - ஐசிசி) சேர்ந்த அதிகாரி ஒருவர் வெளியிட்டுள்ளார்.
2025 சாம்பியன்ஸ் டிராபி தொடரின் பரிசளிப்பு விழாவுக்கு பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்துக்கு அழைப்பு விடுக்கவில்லை எனவும், பாகிஸ்தானின் தலைமை நிர்வாக அதிகாரி துபாய் மைதானத்தில் இருந்தபோதும் அவரை மேடைக்கு வருமாறு அழைப்பு விடுக்கவில்லை எனவும் பாகிஸ்தான் கிரிக்கெட் அமைப்பு அதிருப்தி அடைந்தது.

அது பற்றி சர்வதேச கிரிக்கெட் அமைப்பு பொதுவெளியில் விளக்கம் அளிக்க வேண்டும் என்று பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் புகார் பதிவு செய்ய உள்ளதாக கூறியிருந்தது. அதிகாரப்பூர்வ விளக்கம் கேட்டு அறிக்கை அனுப்பப் போவதாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் சார்பில் கூறப்பட்டிருந்தது.
ஆனால், தற்போது சர்வதேச கிரிக்கெட் அமைப்பை சேர்ந்த பெயர் வெளியிட விரும்பாத அதிகாரி ஒருவர் இது பற்றி விளக்கம் அளித்துள்ளார். அவர், "ஐசிசி எப்போதும் ஒரு கிரிக்கெட் வாரியத்தில் அதிகாரப்பூர்வமாக தேர்வு செய்யப்பட்டவர்களை மட்டுமே விழாக்களுக்கு மேடைக்கு அழைக்கும்; அங்கு செயல்படும் அலுவலக ஊழியர்களை எப்போதும் மேடைக்கு அழைப்பதில்லை."
"அதே துபாயில் சாம்பியன்ஸ் டிராபி இறுதிப் போட்டி நடந்த போது சர்வதேச கிரிக்கெட் வாரியத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ஜெஃப் அலார்டிஸ் மேடைக்கு அழைக்கப்படவில்லை. இந்த ஒரு உதாரணமே போதுமானது" என விளக்கம் அளித்துள்ளார். மேலும் இது பற்றி தாங்கள் அதிகாரப்பூர்வமாக எந்த விளக்கமும் அளிக்கப் போவதில்லை எனவும் அவர் தெளிவுபடுத்தி இருக்கிறார்.
இது பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்துக்கு மேலும் ஒரு அடியாக இருக்கும். இந்த விவகாரத்தை கைவிட்டு விடுவதே பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்துக்கு சிறந்த வழியாக இருக்கும். பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் தலைவர் மொஹ்சின் நக்வி அந்த இறுதிப் போட்டியில் பங்கேற்று இருக்க வேண்டும். ஆனால் அவர் அதில் பங்கேற்காததே இந்த சிக்கலுக்கு காரணம்.
பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் மீது தான் தவறு இருக்கிறது எனும் நிலையில் சர்வதேச கிரிக்கெட் வாரியத்தை சீண்டி வருவது தேவையற்ற செயலாகவும். தங்கள் மீது தாங்களே மண்ணை வாரி இறைத்துக்கொள்ளும் நிகழ்வாகவும் உள்ளது.