துபாய்: வரலாற்றிலேயே முதன்முறையாக இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே மூன்று ஆண்டுகளுக்கான கிரிக்கெட் ஒப்பந்தத்தை உருவாக்க சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் முயன்று வருகிறது. இந்த ஒப்பந்தம் நிறைவேறினால் இந்தியா மற்றும் பாகிஸ்தான் போட்டிகள் எதுவும் இந்த இரண்டு நாடுகளில் நடக்காது.
2025 சாம்பியன்ஸ் ட்ராபி தொடர்பாக இந்தியா மற்றும் பாகிஸ்தான் கிரிக்கெட் அமைப்புகளுக்கு இடையே இழுபறி நடந்து வருகிறது. 2025 சாம்பியன்ஸ் ட்ராபி தொடரை பாகிஸ்தான் நடத்த உள்ளது. ஆனால், பாகிஸ்தானுக்கு இந்திய அணி பயணம் மேற்கொள்ளாது என பிசிசிஐ அறிவித்து இருக்கிறது.

அதனால், இந்தியா ஆடும் போட்டிகளை பாகிஸ்தான் அல்லாத வேறு நாட்டில் நடத்த வேண்டிய இக்கட்டான சூழ்நிலை உருவாகி உள்ளது. அதற்கு பாகிஸ்தான் கிரிக்கெட் அமைப்பு ஒப்புக் கொள்ள மறுத்துவிட்டது. அதன் காரணமாக இந்தியா மற்றும் பாகிஸ்தான் கிரிக்கெட் அமைப்புக்கு இடையே சமரசத்தை ஏற்படுத்த சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் முயன்று வருகிறது.
அந்த அமைப்பின் துணை தலைவரின் தலைமையில் இந்த கூட்டம் நடைபெற்று வருகிறது. இதற்கு முன் பாகிஸ்தான் அணி இந்தியாவுக்கு வந்து சர்வதேச கிரிக்கெட் தொடர்களில் ஆடிய போதும், இந்திய அணி பாகிஸ்தான் செல்ல மறுத்து வருகிறது. இந்திய அணி கடைசியாக 17 ஆண்டுகளுக்கு முன்பு பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு இருந்தது.
இதை சுட்டிக்காட்டி இருக்கும் பாகிஸ்தான் கிரிக்கெட் அமைப்பு, "நாங்கள் இந்தியாவுக்கு செல்லும் போது, இந்தியா மட்டும் பாகிஸ்தானுக்கு வராதது ஏன்?" என கேள்வி எழுப்பி உள்ளது. இந்த நிலையில் 2025 சாம்பியன்ஸ் ட்ராபி தொடரில் இந்தியா ஆடும் போட்டிகளை வேறு நாட்டில் நடத்த நாங்கள் ஒப்புக் கொண்டால், பாகிஸ்தான் இனி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளாது என்பதையும் ஏற்றுக் கொள்ள வேண்டும் என பாகிஸ்தான் கிரிக்கெட் அமைப்பு சார்பில் இந்தக் கூட்டத்தில் ஒரு யோசனை தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இதை முடிவை சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலால் நேரடியாக ஏற்றுக்கொள்ள முடியாது. அப்படி ஏற்றுக் கொள்ள வேண்டும் என்றால் அனைத்து உறுப்பினர் நாடுகளின் கருத்துக்களை பெற வேண்டும். பின்னர் ஓட்டெடுப்பு நடத்த வேண்டும். இதற்கு கால தாமதம் ஆகும். சாம்பியன்ஸ் ட்ராபி தொடருக்கான தேதிகளை விரைவில் அறிவிக்க வேண்டும் என்ற சிக்கல் இருப்பதால் பிசிசிஐ மற்றும் பாகிஸ்தான் கிரிக்கெட் அமைப்புக்கு இடையே மூன்றாண்டு கிரிக்கெட் ஒப்பந்தத்தை நிறைவேற்ற சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் முயன்று வருகிறது.
அந்த ஒப்பந்தத்தின் உள்ள முக்கிய அம்சங்கள் -
- அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டிகள் எதுவும் இந்தியா மற்றும் பாகிஸ்தானில் நடத்தப்படாது. இனி இந்த இரண்டு நாடுகளில் நடத்தப்படும் சர்வதேச கிரிக்கெட் தொடர்களுக்கான (உலகக்கோப்பை, சாம்பியன்ஸ் ட்ராபி) ஒப்பந்தத்தில் இந்த மூன்று ஆண்டு ஒப்பந்தம் இணைக்கப்படும்.
- அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு இந்தியா - பாகிஸ்தான் போட்டிகள் அனைத்தும் துபாயில் நடத்தப்படும். இதன் மூலம் இந்தியா - பாகிஸ்தான் போட்டிகளை எந்த இடத்தில் நடத்துவது என்ற சிக்கலும் இனி இருக்காது.
இந்த இரண்டு முக்கிய விஷயங்களும் இந்த மூன்று ஆண்டு ஒப்பந்தத்தில் இடம் பெறும் என கூறப்படுகிறது. இந்த ஒப்பந்தத்திற்கு பாகிஸ்தான் ஒப்புக்கொள்ளும் என கூறப்படுகிறது. ஆனால், பிசிசிஐ இந்த ஒப்பந்தத்திற்கு ஒப்புக் கொள்ளுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்து இட்டால் அதனால் அடுத்த மூன்று ஆண்டுகளில் இந்தியாவில் நடைபெற உள்ள நான்கு முக்கிய சர்வதேச கிரிக்கெட் தொடர்களில் பாகிஸ்தான் ஆடும் போட்டிகளை மட்டும் துபாயில் நடத்த வேண்டிய நிர்பந்தம் ஏற்படும்.