துபாய்: 2025 சாம்பியன்ஸ் ட்ராபி தொடரில் இந்தியா ஆடும் போட்டிகளை வேறு நாட்டில் நடத்த ஒப்புக் கொள்ளுமாறு பாகிஸ்தான் கிரிக்கெட் அமைப்புக்கு அழுத்தம் கொடுத்து இருக்கிறது சர்வதேச கிரிக்கெட் கவுன்சில். 2025 சாம்பியன்ஸ் ட்ராபி தொடர் பாகிஸ்தானில் நடைபெற உள்ளது.
அதற்காக பாகிஸ்தான் முன்னேற்பாடுகளை செய்து வருகிறது. இந்த நிலையில், பாகிஸ்தானின் பாதுகாப்பு அச்சுறுத்தல் இருப்பதால் இந்திய அணி வீரர்களை பாகிஸ்தான் அனுப்ப முடியாது என பிசிசிஐ கூறி இருக்கிறது. அதனால், இந்தியா ஆடும் போட்டிகளை மட்டும் வேறு நாட்டில் நடத்த வேண்டும் எனவும் பிசிசிஐ கோரிக்கை வைத்து இருந்தது.

அதற்கு பாகிஸ்தான் கிரிக்கெட் அமைப்பு கொள்ளவில்லை. இந்த நிலையில், சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் இது பற்றி விவாதிக்க கூட்டம் நடத்தியது. அதில் சாம்பியன்ஸ் ட்ராபி தொடரில் பங்கேற்க உள்ள எட்டு அணிகளின் கிரிக்கெட் அமைப்புகளும் பங்கேற்றன. அதில் பாகிஸ்தானை தவிர்த்து ஏழு அணிகளும் சாம்பியன்ஸ் ட்ராபி டோர்டை "ஹைபிரிட்" (Hybrid) மாடலாக நடத்த ஒப்புக்கொண்டன.
அதாவது இந்தியா ஆடும் போட்டிகளை மட்டும் வேறு நாட்டில் நடத்த மற்ற அணிகள் ஒப்புக்கொண்டன. பாகிஸ்தான் மட்டும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இருக்கிறது. பாகிஸ்தானின் நிலைமை சர்வதேச கிரிக்கட் கவுன்சிலுக்கு புரிந்தாலும் இந்தியா இல்லாமல் விளையாடினால் ஒளிபரப்பு உரிமையில் ஒன்றும் தேறாது என்ற நிதர்சனத்தின் அடிப்படையில் அவர்கள் பாகிஸ்தான் கிரிக்கெட் அமைப்புக்கு அழுத்தம் கொடுத்து உள்ளனர்.
ஒளிபரப்பு உரிமம் சார்ந்த விஷயம் பாகிஸ்தான் கிரிக்கெட் அமைப்புக்கும் தெரியும். அதனால் அவர்கள் தற்போது இக்கட்டான நிலையில் உள்ளனர். ஒன்று இந்தியா ஆடும் போட்டிகளை வேறு நாட்டில் நடத்த ஒப்புக்கொள்ள வேண்டும். இல்லை எனில் பாகிஸ்தானை விட்டுவிட்டு சாம்பியன்ஸ் ட்ராபி தொடர் வேறு நாட்டில் நடத்தப்படும் என கூறப்படுகிறது.
எனினும், இப்போதைக்கு எந்த முடிவும் எடுக்க வேண்டாம் என சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் முடிவு செய்துள்ளது. அதனால் அடுத்து வரும் நாட்களிலும் இந்த கூட்டம் தொடர்ந்து நடைபெறும் என சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலை சேர்ந்த அதிகாரி ஒருவர் தெரிவித்து இருக்கிறார்.