கராச்சி: 2025 சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் பாகிஸ்தானில் அடுத்த ஆண்டு பிப்ரவரி - மார்ச் மாதங்களில் நடைபெற உள்ளது. 2008 முதல் பாகிஸ்தானுக்கு செல்ல மறுத்து வரும் இந்திய அணி, இப்போதும் பாகிஸ்தான் செல்ல முடியாது என சர்வதேச கிரிக்கட் கவுன்சிலிடம் தெரிவித்து இருக்கிறது. மேலும், இந்திய அணி ஆடும் போட்டிகளை பாகிஸ்தான் அல்லாத வேறு ஒரு நாட்டில் நடத்த வேண்டும் எனவும் பிசிசிஐ தெரிவித்து இருக்கிறது.
பாகிஸ்தான் அல்லாத இடத்தில் தான் இந்திய அணி தனது சாம்பியன்ஸ் டிராபி போட்டிகளில் பங்கேற்கும் என ஒரு முட்டுக்கட்டையை போட்டு இருக்கிறது பிசிசிஐ. இந்த நிலையில், முன்னாள் பாகிஸ்தான் கிரிக்கெட் அமைப்பின் தலைவர் காலித் மஹ்மூத் இந்திய அணி, பாகிஸ்தானுக்கு வரவில்லை என்றால் என்ன நடக்கும் என்பது குறித்து பாகிஸ்தான் கிரிக்கெட் அமைப்புக்கு எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளார்.

இது பற்றி காலித் மஹ்மூத் பேசுகையில், "இந்திய அணி பாகிஸ்தான் வந்து விளையாட ஒப்புக்கொள்ள மிக, மிக குறைந்த வாய்ப்புகளே உள்ளன. இந்தியா உலகின் பணக்கார கிரிக்கெட் நாடாகும். கிரிக்கெட் உலகில் மிகப்பெரிய செல்வாக்கை கொண்டுள்ளது. அவர்கள் தங்கள் அணியை பாகிஸ்தானுக்கு அனுப்பவில்லை என்றால் இலங்கை, ஆப்கானிஸ்தான் மற்றும் வங்கதேசம் ஆகிய நாடுகளும் பாகிஸ்தான் வர மறுக்கும். இந்திய அணியின் பாதையை அவர்களும் பின்பற்றுவார்கள்." என்றார்.
மேலும், "பாகிஸ்தான், இந்திய அணியை பழிக்கு பழி வாங்க வேண்டும் என்ற எண்ணத்தை கைவிட வேண்டும். இதில் முக்கிய விஷயம் என்னவென்றால், பிசிசிஐ பாகிஸ்தானுக்கு தனது அணியை அனுப்ப முடியாது. எங்களது போட்டிகளை பாகிஸ்தானுக்கு வெளியே தான் விளையாடுவோம் என்று கூறினால், சர்வதேச கிரிக்கெட் தொடரை பாகிஸ்தானில் நடத்துவதன் முக்கியத்துவம் குறைந்து போகும்." என்றார்.
கடந்த 2008 ஆம் ஆண்டு முதல் இந்திய அணி, பாகிஸ்தான் செல்ல மறுத்து வருவதால் அதற்குப் பழி தீர்க்கும் வகையில் இந்திய அணி இல்லாமல் சாம்பியன்ஸ் டிராபி தொடரை நடத்த பாகிஸ்தான் கிரிக்கெட் அமைப்பு முடிவு செய்துள்ளது. அதைத் தான் காலித் மஹ்மூத் பழி வாங்கும் நடவடிக்கை கூடாது என சுட்டிக்காட்டி உள்ளார். அப்படி இந்திய அணி இல்லாமல் தொடரை நடத்துவதால் எந்த பயனும் இல்லை என அவர் சுட்டிக்காட்டி இருக்கிறார். ஏனெனில், இந்திய அணி இந்த தொடரில் ஆடினால் மட்டுமே பாகிஸ்தானால் அதிக வருவாய் ஈட்ட முடியும். மேலும், அதிக மக்கள் இந்த தொடரை பார்ப்பார்கள். அதைத்தான் காலித் மஹ்மூத் சுட்டிக்காட்டி இருக்கிறார்.