கராச்சி: ஐசிசி சாம்பியன்ஸ் டிராஃபி தொடரில் பங்கேற்க இந்திய அணி வீரர்கள் மட்டும் பாகிஸ்தானுக்கு வரவில்லை என்றால், பாகிஸ்தான் அணி தொடரையே புறக்கணிக்கும் என்று முன்னாள் வீரர் ரஷித் லடிஃப் தெரிவித்துள்ளார். இதனால் ஐசிசி தலையிட்டு பிசிசிஐ நிர்வாகத்தை சமாதானம் செய்ய வேண்டும் என்றும் கூறியுள்ளார்.
ஐசிசி சாம்பியன்ஸ் டிராஃபி தொடர் அடுத்த பிப்ரவரி மற்றும் மார்ச் மாதத்தில் பாகிஸ்தானில் நடத்தப்படவுள்ளது. 2017ஆம் ஆண்டுக்கு பின் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி நடக்கவுள்ளதால், ரசிகர்கள் அதிகம் எதிர்பார்த்துள்ளனர். இந்த நிலையில் நாளை மறுநாள் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான அட்டவணை வெளியிடப்படும் என்று தெரியவந்துள்ளது.

இதனிடையே இந்திய அணி பாகிஸ்தான் பயணிக்குமா என்ற கேள்வியே ஒவ்வொரு ரசிகர்களின் மனதிலும் உள்ளது. ஏனென்றால் 2008ஆம் ஆண்டுக்கு பின் பாகிஸ்தானுக்கு இந்திய அணி வீரர்கள் பயணிக்கவில்லை. இரு அணிகளும் ஐசிசி தொடர்களில் மட்டுமே நேருக்கு நேர் மோதி வருகின்றன. இதனால் பாகிஸ்தானுக்கு பயணிக்க மத்திய அரசு பிசிசிஐ-க்கு அனுமதி வழங்குமா என்ற கேள்வி எழுந்தது.
இந்த நிலையில் சாம்பியன்ஸ் டிராஃபியை ஹைபிரிட் மாடலில் நடத்த ஐசிசி முடிவு எடுத்துள்ளதாக தகவல் வெளியாகியது. இந்திய அணி விளையாடும் போட்டிகளை மட்டும் துபாய் அல்லது ஷார்ஜாவில் நடத்த ஐசிசி திட்டமிட்டு வருவதாக கூறப்பட்டது. ஆனால் இதுகுறித்து ஐசிசி தங்களிடம் எந்த ஆலோசனையும் நடத்தவில்லை என்று பிசிபி தலைவர் நக்வி கூறியுள்ளார்.
இதனைத் தொடர்ந்து பாகிஸ்தான் முன்னாள் வீரர் ரஷித் லடிஃப் பேசுகையில், இது ஒரு ஐசிசி தொடர். 2024 முதல் 2031 வரையிலான ஐசிசி தொடர்களில் பங்கேற்கும் என்று அனைத்து அணிகளும் கையொப்பமிட்டுள்ளன. ஏற்கனவே அனைத்து அணிகளும் பங்கேற்பார்கள் என்ற நம்பிக்கையில் ஒளிபரப்பாளர்கள், ஸ்பான்சர்கள் ஒப்பந்தம் நடந்து முடிந்துள்ளது.
ஏதாவது ஒரு அணி பாகிஸ்தான் வந்து சாம்பியன்ஸ் டிராபி தொடரில் பங்கேற்கவில்லை என்று கூறினால், அதற்கு நியாயமான காரணங்கள் இருக்க வேண்டும். 1996 உலகக்கோப்பை வெஸ்ட் இண்டீஸ் மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய இரு அணிகளும் இலங்கைக்கு செல்லவில்லை. இருந்தாலும் அவர்களால் இறுதிப்போட்டிக்கு செல்ல முடிந்தது.
ஆனால் இந்திய அணியோ பாதுகாப்பை மட்டும் தான் காரணமாக கூறுகிறது. ஆனால் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா அணிகள் பாகிஸ்தான் வருகின்றன.ஒருவேளை பாகிஸ்தான் அரசு தரப்பில் சாம்பியன்ஸ் டிராபி தொடரில் பங்கேற்க மாட்டோம் என்று கூறிவிட்டால், யாருமே ஐசிசி தொடரை பார்க்க மாட்டார்கள்.
இருதரப்பு தொடர்களில் விளையாட மாட்டோம் என்று கூறுவதற்கு பிசிசிஐ-க்கு உரிமை உள்ளது. ஆனால் ஐசிசி தொடரில் விளையாட மாட்டோம் என்று கூற உரிமையில்லை. ஏனென்றால் ஏற்கனவே பிசிசிஐ ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. ஒருவேளை இந்திய அணி வரவில்லை என்றால், பாகிஸ்தான் இந்த தொடரை புறக்கணிக்கும் முடிவை எடுக்கும் என்று தெரிவித்துள்ளார்.