இஸ்லாமாபாத்: 2025 சாம்பியன்ஸ் டிராபி தொடர் பாகிஸ்தானில் நடைபெற உள்ள நிலையில் இந்தியா அந்த தொடரில் பங்கேற்காது எனக் கூறப்பட்டு வருகிறது. பாகிஸ்தானுக்கு பதிலாக வேறு நாட்டில் சாம்பியன்ஸ் டிராபி தொடரை நடத்தினால் மட்டுமே இந்தியா பங்கேற்கும் எனவும் பிசிசிஐ சார்பாக சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலிடம் தகவல் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.
இந்த நிலையில், பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர்கள் பலரும் இந்தியா நிச்சயமாக பாகிஸ்தானுக்கு வரவேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர். முன்னாள் வீரர் பாசித் அலி இந்த விவகாரம் குறித்து அதிரடியான கருத்து ஒன்றை கூறி இருக்கிறார். இந்திய பிரதமர் நரேந்திர மோடி பாகிஸ்தானுக்கு வந்தால், நிச்சயமாக இந்திய அணியும் பாகிஸ்தானுக்கு வரும் என அவர் பேசி இருக்கிறார். இது வேடிக்கையான கருத்தை போல இருந்தாலும் இதன் பின்னணியில் சில சாத்தியங்கள் உள்ளன.

வரும் அக்டோபர் 15 மற்றும் 16 தேதிகளில் பாகிஸ்தானில் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (SCO) கூட்டம் நடைபெற உள்ளது. இது ரஷ்யா மற்றும் சீனாவால் ஏற்படுத்தப்பட்ட ஒரு அமைப்பாகும். இதில் இந்தியா, பாகிஸ்தான், உஸ்பெகிஸ்தான், தஜிகிஸ்தான், கஜகஸ்தான், கிர்கிஸ்தான் மற்றும் பெலாரஸ் ஆகிய நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன. இந்த கூட்டத்தில் உறுப்பினர் நாடுகளின் தலைவர்கள் பலரும் நேரடியாக பங்கேற்க உள்ளனர்.
ரஷ்யா மற்றும் சீனாவின் அதிபர்களும் நேரடியாக பங்கேற்க உள்ளனர். இந்த முக்கியமான கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடியும் நேரடியாக பங்கேற்பாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது. ஒருவேளை பிரதமர் மோடி பாகிஸ்தான் செல்ல விரும்பவில்லை என்றால் வெளியுறவுத் துறை அமைச்சரை அனுப்பி வைக்கக் கூடும் அல்லது இணைய வழியாக அவர் பங்கேற்கக் கூடும்.
அதே சமயம் அவர் பாகிஸ்தானுக்கு பயணம் மேற்கொள்ளவும் வாய்ப்பு உள்ளது. தற்போது பாகிஸ்தானின் பிரதமராக இருக்கும் ஷபாஸ் ஷெரிஃப் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரிஃப்பின் சகோதரர் ஆவார். ஏற்கனவே, நவாஸ் ஷெரிஃப் பிரதமராக இருந்தபோது நரேந்திர மோடி பாகிஸ்தானுக்கு பயணம் மேற்கொண்டு இருக்கிறார். அவர் நவாஸ் ஷெரிஃப்புடன் நட்புறவில் இருப்பதாக ஒரு கருத்து உள்ளது.
அந்த வகையில், பாகிஸ்தானுடன் மீண்டும் நட்புறவை துளிர்க்க வைக்கும் வகையில் பிரதமர் நரேந்திர மோடி பாகிஸ்தானுக்கு பயணம் மேற்கொள்ள வாய்ப்பு உள்ளது. அது நடந்தால் நிச்சயமாக இந்திய கிரிக்கெட் அணியும் அடுத்த சில மாதங்களில் நடைபெற உள்ள சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கு பயணம் மேற்கொள்ளும் என்று கூறி இருக்கிறார் பாசித் அலி.
ஒருவேளை இந்திய கிரிக்கெட் அணி, பாகிஸ்தானுக்கு செல்லாது என அறிவித்தால் அது ஜெய் ஷாவுக்கு தான் பெரிய தலைவலியாக மாறும். ஏனெனில், தற்போது ஜெய்ஷா சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். வரும் டிசம்பர் மாதம் முதல் அவர் அந்த பொறுப்பை ஏற்க உள்ளார். அதற்கு அடுத்த இரண்டு மாதங்களில் சாம்பியன்ஸ் டிராபி தொடர் நடைபெற உள்ளது. அப்போது இந்திய அணி, பாகிஸ்தானுக்கு செல்ல மறுத்தால் அந்த பிரச்சனையை தலையிட்டு தீர்த்து வைக்க வேண்டிய இடத்தில் ஜெய் ஷா தான் இருப்பார்.
அவர் பாகிஸ்தான் கிரிக்கெட் அமைப்பை வற்புறுத்தி இந்தியா ஆடும் போட்டிகளை மட்டும் துபாய் போன்ற வெளிநாடுகளில் நடத்த வைப்பார் எனவும் சிலர் கூறி வருகின்றனர்.