துபாய்: சர்வதேச கிரிக்கெட்டில் அடுத்த 10 ஆண்டுகளுக்கு இந்திய அணியின் ஆதிக்கம் தொடர்வதற்கான இளம் வீரர்கள் தயாராகி விட்டார்கள் என்று நட்சத்திர வீரர் விராட் கோலி தெரிவித்துள்ளார். சுப்மன் கில், ஸ்ரேயாஸ் ஐயர், கேல் ராகுல் மற்றும் ஹர்திக் பாண்டியா ஆகியோரை பாராட்டிய விராட் கோலி, நியூசிலாந்து அணி வீரர்களுக்கும் ஆறுதல் கூறியுள்ளார்.
சம்பியன்ஸ் டிராபி தொடரின் இறுதிப் போட்டியில் நியூசிலாந்து அணிக்கு எதிரான ஆட்டத்தில் 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றியை பெற்றது. நியூசிலாந்து அணி நிர்ணயித்த 252 ரன்கள் என்ற இலக்கை இந்திய அணி வீரர்கள் 49 ஓவர்களில் சேஸ் செய்து அசத்தியுள்ளனர். சிறப்பாக ஆடிய கேஎல் ராகுல் கடைசி வரை களத்தில் நின்று இந்திய அணியின் வெற்றிக்கு வழிவகுத்தார்.

இந்த வெற்றியால் இந்திய அணி 3வது முறையாக ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரை கைப்பற்றி சாதனை படைத்துள்ளது. இந்த வெற்றியின் போது ஓய்வறையில் இருந்த விராட் கோலி துள்ளிக் குதித்து அபிஷேக் நாயரை கட்டிப்பிடித்து கொண்டாட்டத்தில் ஈடுபட்டார். அதேபோல் மைதானத்திற்கு வந்த ஸ்டம்பை எடுத்து கொண்டு ரோஹித் சர்மாவுடன் தாண்டியா ஆடி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.
இந்த வெற்றிக்கு நட்சத்திர வீரர் விராட் கோலி பேசுகையில், இந்த தருணம் அற்புதமாக உள்ளது. ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடர் எங்களுக்கு மோசமானதாக அமைந்தது. அதன்பின் அற்புதமான இளம் வீரர்களுக்கு இந்த வெற்றியை பெற்றிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. அவர்கள் சரியான நேரத்தில் முன் நின்று வெற்றியை குவிக்கிறார்கள். இந்திய கிரிக்கெட்டை சரியான திசையில் அழைத்து செல்கின்றனர்.
நீண்ட நாட்களாக கிரிக்கெட் விளையாடி வரும் போது, அழுத்தம் நிறைந்த சூழல்களில் அதிகமாக பேட்டிங் செய்ய வேண்டும் என்று விரும்புகிறோம். ஐசிசி தொடரை வெல்ல வேண்டுமென்றால், ஒரு அணியாக ஒவ்வொரு போட்டிகளில் அனைவரும் சிறந்த பங்களிப்பை வழங்க வேண்டும். அப்படி ஒவ்வொரு போட்டிகளிலும் ஒவ்வொரு வீரர் சிறந்த பங்களிப்பை அளித்துள்ளனர். இந்த வெற்றி எங்களுக்கு கூட்டு முயற்சிக்கு கிடைத்த ஒன்றாகும்.
இளம் வீரர்களுடன் எனது அனுபவத்தை அதிகமாக பகிர்ந்து கொள்கிறேன். தொடர்ச்சியாக இத்தனை ஆண்டுகளாக விளையாடுவது எப்படி என்று கூறுகிறேன். நாம் இங்கிருந்து ஓய்வு பெற்று செல்லும் போது, இந்திய கிரிக்கெட் நல்ல இடத்தில் இருக்க வேண்டும். அதற்கேற்ப சுப்மன் கில், ஸ்ரேயாஸ் ஐயர், கேஎல் ராகுல், ஹர்திக் பாண்டியா ஆகியோர் தயாராகிவிட்டார்கள்.
இந்திய அணி சிறந்தவர்களின் கைகளில் உள்ளது. நியூசிலாந்து அணி சொற்ப வீரர்களை வைத்து கொண்டு செய்யும் விஷயங்களை நினைத்து ஆச்சரியமடைந்துள்ளோம். அவர்கள் எப்போதும் சரியான திட்டத்துடன் வருவார்கள். ஒவ்வொரு ஃபீல்டருக்கும் பவுலர் என்ன பந்து வீசுவார் என்பது தெரியும். அவர்களின் திறமை மீது அபார நம்பிக்கை கொண்டிருக்கிறார்கள்.
சிறந்த ஃபீல்டிங் யூனிட் நியூசிலாந்து அணிதான். அவர்களுக்கு நிச்சயம் பாராட்டுகளை தெரிவிக்க வேண்டும். எனது நண்பன் கேன் வில்லியம்சன் சோகமாக இருப்பதை நினைத்து கவலையாக உள்ளது. ஆனால் ஏற்கனவே இரு முறை அவர்கள் வென்றுள்ளார்கள். அதனால் இம்முறை நாங்கள் வென்றுள்ளோம். எங்களுக்குள் சிறந்த நட்பு உள்ளது என்று தெரிவித்தார்.