துபாய்: இந்திய அணியின் மூத்த வீரர் விராட் கோலி துபாயில் சிறப்புப் பயிற்சியில் ஈடுபட்டுள்ளார். மற்ற இந்திய வீரர்களை காட்டிலும் 3 மணி நேரத்திற்கு முன்பாக மைதானத்திற்கு வந்த விராட் கோலி, ஐக்கிய அரபு அமீரக கிரிக்கெட் அணியைச் சேர்ந்த பந்துவீச்சாளர்களை வரவழைத்து பயிற்சியில் ஈடுபட்டார்.
விராட் கோலியின் ஃபார்ம் சமீப காலமாக மோசமாக இருக்கும் நிலையில், அவர் அதை மீட்பதற்காக இந்த வலைப் பயிற்சியில் ஈடுபட்டு இருக்கலாம் என்று தகவல் வெளியாகி உள்ளது. திடீரென இதுபோன்ற சிறப்பு பயிற்சியில் ஈடுபட்டு இருப்பதால் சரியாக ரன் குவிக்கவில்லை என்ற அழுத்தம் மற்றும் பதற்றத்தில் இருக்கிறாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

முன்னதாக விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா பாகிஸ்தான் அணியின் உயரமான வேகப்பந்து வீச்சாளரான ஷாஹீன் ஷா அப்ரிடியை எதிர்கொள்வதற்காக ஐக்கிய அரபு அமீரகத்தை சேர்ந்த உயரமான இடது கை வேகப்பந்து வீச்சாளர் ஒருவரை அழைத்து வந்து சிறப்பு பயிற்சியில் ஈடுபட்டதாக தகவல் வெளியாகி இருந்தது.
தற்போது விராட் கோலி தனிப்பட்ட முறையில் 3 மணி நேரம் சிறப்பு பயிற்சியில் ஈடுபட்டு இருக்கிறார். இது பிசிசிஐ விதியை மீறிய செயலா? என்ற சர்ச்சையும் எழுந்துள்ளது. ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணி தோல்வி அடைந்ததை அடுத்து, பிசிசிஐ சில விதிமுறைகளை அமல்படுத்தி இருந்தது. அதில், "இனி இந்திய வீரர்கள் அனைவரும் பயிற்சிக்கு ஒன்றாக இணைந்து பேருந்தில் செல்ல வேண்டும், திரும்பி வரும்போதும் அனைவரும் ஒன்றாகவே வர வேண்டும்" என்ற விதி குறிப்பிடப்பட்டிருந்தது.
ஆனால், தற்போது விராட் கோலி சிறப்புப் பயிற்சிக்கு தனியாகச் சென்று இருக்கிறார். இது அவரது ஃபார்மை மீட்பதற்கான பயிற்சி என்பதால், பிசிசிஐ அனுமதித்ததா? அல்லது விராட் கோலி தனிப்பட்ட முறையில் இந்த முடிவை எடுத்துச் சென்றாரா? என்ற கேள்விகளும் எழுந்துள்ளன.
இந்திய அணி நாளை (பிப்ரவரி 23) பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் விளையாட உள்ளது. இதற்கு முன் சாம்பியன்ஸ் டிராபி தொடரின் குரூப் ஏ பிரிவில் வங்கதேச அணியை சந்தித்தது இந்தியா. அந்தப் போட்டியில் இந்திய அணி ஆறு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அந்தப் போட்டியில் விராட் கோலி 38 பந்துகளில் 22 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டம் இழந்தார்.
அதுவும் வங்கதேச அணியின் லெக் ஸ்பின்னர் ரிஷாத் ஹுசைன் பந்துவீச்சில் அவர் ஆட்டம் இழந்து இருந்தார். கடந்த ஓராண்டில் மட்டும் லெக் ஸ்பின்னர்களிடம் விராட் கோலி ஐந்து முறை ஆட்டம் இழந்து இருப்பது கவலையை அதிகரிக்கச் செய்தது. இந்த நிலையில்தான் விராட் கோலி தற்போது சிறப்பு பயிற்சியில் ஈடுபட்டு இருக்கிறார்
முன்னதாக அவர் வேகப்பந்து வீச்சாளர்களின் பந்துவீச்சில் தொடர்ந்து ஆட்டம் இழந்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது சுழற் பந்துவீச்சிலும் சிக்கலை எதிர்கொண்டு இருக்கிறார்.