மும்பை: 2025 சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரில் வேறு எந்த அணிக்கும் கிடைக்காத சாதகம் ஒன்று இந்தியாவுக்கு கிடைத்து இருக்கிறது. இதை வைத்தும் இந்திய அணி 2025 சாம்பியன்ஸ் டிராபி வெல்லவில்லை என்றால் நிச்சயம் அது மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் என விமர்சகர்கள் சுட்டிக்காட்டி உள்ளனர்.
2025 சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் பாகிஸ்தான் நாட்டில் நடைபெற உள்ளது. இந்திய அணி, பாகிஸ்தான் நாட்டிற்கு செல்ல மறுத்ததால் இந்திய அணி ஆடும் போட்டிகளை மட்டும் துபாயில் நடத்த முடிவு எடுக்கப்பட்டு இருக்கிறது. குரூப் சுற்றில் இந்திய அணி மூன்று போட்டிகளில் விளையாட உள்ளது.

அந்த மூன்று போட்டிகளும் துபாயில் தான் நடைபெற உள்ளன. குரூப் சுற்றில் வங்கதேசம், பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து ஆகிய மூன்று அணிகளுக்கு எதிராக இந்திய அணி துபாயில் விளையாட உள்ளது. பிப்ரவரி 20 அன்று வங்கதேசத்திற்கு எதிராகவும், பிப்ரவரி 23 அன்று பாகிஸ்தான் அணிக்கு எதிராகவும், மார்ச் 2 அன்று நியூசிலாந்து அணிக்கு எதிராகவும் இந்திய அணி விளையாட உள்ளது.
இந்த மூன்று போட்டிகள் நடந்து முடிந்த பிறகு அரை இறுதிச் சுற்று நடைபெறும். அப்போது இந்திய அணி அரை இறுதி சுற்றுக்கு முன்னேறி இருந்தால், அந்தப் போட்டியும் துபாயில் தான் நடைபெறும். அதற்கு ஏற்ப அட்டவணை தயாரிக்கப்பட்டு உள்ளது.
ஒருவேளை இந்திய அணி 2025 சாம்பியன்ஸ் டிராபி தொடரின் இறுதிப் போட்டிக்கு முன்னேறினால் அப்போதும் அந்த இறுதிப் போட்டி துபாய்க்கு மாற்றப்படும் எனவும் அறிவிக்கப்பட்டு இருக்கிறது. எனவே, இந்திய அணி இந்த தொடரில் அனைத்து போட்டிகளையும் துபாய் மைதானத்தில் விளையாட உள்ளது.
ஆனால், மற்ற அணிகள் வெவ்வேறு மைதானங்களில் தங்களின் போட்டிகளை விளையாட வேண்டிய கட்டாயத்தில் உள்ளன. அதனால், அந்த அணிகள் ஒவ்வொரு போட்டிக்கும், போட்டி சூழ்நிலைகளை சரியாக கணித்து, அதற்கு ஏற்ப அணியை தேர்வு செய்து விளையாட வேண்டும். ஆனால், இந்திய அணிக்கு அதுபோன்ற சிக்கல்கள் எதுவும் இல்லை.
முதல் மூன்று போட்டிகளில் ஆடிய துபாய் மைதானத்தை இந்திய அணி வீரர்கள் நன்றாக புரிந்து கொண்டு இருப்பார்கள். அந்த சூழ்நிலையில் அரை இறுதி மற்றும் இறுதிப் போட்டியிலும் அதே மைதானத்தில் விளையாடினால் அது இந்திய அணிக்கு மிகப்பெரிய சாதகமாக இருக்கும். எதிரணிக்கு அது மிகப்பெரிய அளவில் பாதகமாகவும் இருக்கும்.
இப்படி ஒரு சாதகம் கிடைத்து இருக்கும் நிலையில் இந்திய அணி நிச்சயமாக 2025 சாம்பியன்ஸ் டிராபி கோப்பையை வெல்ல வேண்டும் என விமர்சகர்கள் சுட்டிக்காட்டி உள்ளனர். அதே சமயம் இந்தியாவுக்கு கிடைத்து இருக்கும் இந்த சாதகம் மற்ற அணி வீரர்களால் விமர்சிக்கப்படவும் வாய்ப்பு உள்ளது.