லாகூர்: 2025 சாம்பியன்ஸ் ட்ராபி கிரிக்கெட் தொடரில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் விளையாட உள்ள போட்டி எந்த தேதியில், எந்த இடத்தில் நடக்க உள்ளது? என்பது பற்றி ஒரு தகவல் வெளியாகி உள்ளது. இதை அடுத்து கிரிக்கெட் உலகம் உற்சாகம் அடைந்து உள்ளது.
2025 சாம்பியன்ஸ் ட்ராபி ஒருநாள் கிரிக்கெட் தொடர் பாகிஸ்தானில் நடைபெற உள்ளது. இந்திய அணி பாகிஸ்தானுக்கு பயணம் மேற்கொள்ள முடியாது என அறிவித்ததை, அடுத்து கடந்த ஒரு மாதமாக இது பற்றி பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. அதன் முடிவில் இந்திய அணி ஆடும் போட்டிகளை மட்டும் வேறு நாட்டில் நடத்த பாகிஸ்தான் கிரிக்கெட் அமைப்பு ஒப்புக்கொண்டது.

அதே சமயம், அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு இந்தியாவில் நடக்க உள்ள சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் நடத்தும் கிரிக்கெட் தொடர்களில் பாகிஸ்தான் அணியும் பங்கேற்காது எனவும், அப்போது பாகிஸ்தான் விளையாடும் போட்டிகள் அனைத்தையும் வேறு நாட்டில் நடத்த வேண்டும் எனவும் ஒப்பந்தம் தயாரிக்கப்பட்டு உள்ளது.
விரைவில் இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில், 2025 சாம்பியன்ஸ் ட்ராபியில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் விளையாடும் போட்டிகள் எந்த தேதியில் நடைபெறும்? என்ற எதிர்பார்ப்பு எகிறி உள்ளது. அது பற்றி சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் அதிகாரி ஒருவர் ஊடகம் ஒன்றிற்கு அளித்த பேட்டியில் ஒரு தகவலை குறிப்பிட்டு இருக்கிறார்.
அதன்படி, இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் விளையாட உள்ள 2025 சாம்பியன்ஸ் ட்ராபி கிரிக்கெட் போட்டி பிப்ரவரி 23 அன்று நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அந்தப் போட்டி இலங்கையில் உள்ள கொழும்பு மைதானத்திலோ அல்லது ஐக்கிய அரபு அமீரக நாட்டில் உள்ள துபாய் மைதானத்திலோ நடைபெறும் என சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.
எனவே, 2025 பிப்ரவரி 23ஆம் தேதி இந்தியா மற்றும் பாகிஸ்தான் மோதும் போட்டி நடக்கும் என முதற்கட்டமாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. விரைவில் 2025 சாம்பியன்ஸ் ட்ராபி தொடருக்கான போட்டி அட்டவணை வெளியாக உள்ளது. அப்போது இதை நாம் உறுதி செய்து கொள்ளலாம்.
இந்தியா ஆடும் போட்டிகளை தவிர்த்து மற்ற அணிகள் ஆடும் போட்டிகள் அனைத்தும் பாகிஸ்தானில் உள்ள ராவல்பிண்டி, கராச்சி மற்றும் லாகூர் ஆகிய மூன்று நகரங்களில் உள்ள மைதானங்களில் நடைபெற உள்ளது. இந்தியா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், ஆஸ்திரேலியா, வங்கதேசம், இங்கிலாந்து, நியூசிலாந்து மற்றும் தென்னாப்பிரிக்கா ஆகிய எட்டு அணிகள் இந்த தொடரில் பங்கேற்க உள்ளன.
இந்த எட்டு அணிகளும் இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு, ஒரு பிரிவில் உள்ள ஒரு அணி அதே பிரிவில் உள்ள மற்ற மூன்று அணிகளுடன் மோதும் வகையில் அட்டவணை தயாரிக்கப்படும். இந்த இரண்டு பிரிவுகளில் முதல் இரண்டு இடங்களை பெறும் அணிகள், அரை இறுதிக்கு முன்னேறும். அரை இறுதிப் போட்டிகளில் வெற்றி பெறும் அணிகள் இறுதிப் போட்டிக்கு முன்னேறும். இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் ஒரே பிரிவில் இடம் பெற உள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.
தற்போது இந்தியா ஆடும் போட்டிகள் இலங்கையில் உள்ள கொழும்பு நகரில் நடத்தப்படுமா? அல்லது துபாயில் நடத்தப்படுமா? என்பதே ஒரே கேள்வியாக உள்ளது.