துபாய்: சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்தியா ஆடும் போட்டிகளை பார்க்கலாம் என துபாய் வாழ் இந்தியர்களும், இந்தியாவில் இருக்கும் தீவிர கிரிக்கெட் ரசிகர்களும் ஆவலுடன் இருந்தனர். நேற்று சாம்பியன்ஸ் டிராபி போட்டிகளுக்கான டிக்கெட் விற்பனை நடந்தது. ஆனால், சில நிமிடங்களில் இந்தியா ஆடும் போட்டிகளுக்கான டிக்கெட்கள் விற்றுத் தீர்ந்தன.
அதனால் பல ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர். பலரும் தங்கள் ஆதங்கத்தை சமூக வலைதளங்களில் கொட்டி வருகின்றனர். விரைவில் இந்த டிக்கெட்கள் கள்ள சந்தையில் லட்சங்களில் விற்கப்படும் எனவும் புலம்பி வருகின்றனர்.

2025 சாம்பியன்ஸ் டிராபி தொடர் வரும் பிப்ரவரி 19 முதல் துவங்க உள்ளது. இதில் இந்தியா - பாகிஸ்தான் ஆடும் போட்டிக்கான எதிர்பார்ப்பு உச்சத்தை எட்டி இருக்கிறது. இந்த நிலையில் இந்தியா - பாகிஸ்தான் போட்டி உட்பட இந்தியா ஆடும் மூன்று போட்டிகளுக்கான அனைத்திற்குமான டிக்கெட்டுகள் சில நிமிடங்களில் விற்றுத் தீர்ந்து விட்டன.
இவை அனைத்தும் ஆன்லைனில் விநியோகிக்கப்பட்டன. அதை வாங்குவதற்கு பல ஆயிரம் ரசிகர்கள் ஆன்லைன் வரிசையில் காத்திருந்தனர். இந்த நிலையில் அனைத்துமே சில நிமிடங்களில் விற்றுத் தீர்ந்து உள்ளன. சுமார் 1,50,000 ரசிகர்கள் ஆன்லைனில் காத்திருந்து டிக்கெட்களை வாங்க முயன்றுள்ளனர். அதில் பாதி பேருக்கு மட்டுமே டிக்கெட்கள் கிடைத்துள்ளன.
2025 சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்தியா ஆடும் போட்டிகள் அனைத்தும் துபாயில் நடைபெற உள்ளன. அந்த மைதானத்தில் 25,000 இருக்கைகள் மட்டுமே உள்ளன. அங்கு இந்தியா -பாகிஸ்தான் போட்டிக்கான டிக்கெட்கள் அதிக விலைக்கு விற்கப்பட்டன. அதிகபட்சமாக பிளாட்டினம் டிக்கெட் 47,434 ரூபாய்க்கும், கிராண்ட் லவுன்ச் டிக்கெட்கள் 1,80,000 ரூபாய்க்கும் விற்கப்பட்டன.
இத்தனை விலை கொடுத்தும் ரசிகர்கள் சில நிமிடத்தில் வாங்கியது ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. பலர் ஆன்லைன் வரிசையில் காத்திருந்தும் டிக்கெட் கிடைக்கவில்லை என சமூக வலைதளங்களில் புலம்பியதையும் பார்க்க முடிந்தது. இந்தத் தொடரில் இந்தியா - பாகிஸ்தான் போட்டி மட்டுமன்றி, இந்தியா - வங்கதேசம் மற்றும் இந்தியா - நியூசிலாந்து ஆகிய போட்டிகளுக்கும் வரவேற்பு இருந்தது.
அதேபோல தொடரை நடத்தும் பாகிஸ்தான் அணி ஆடும் போட்டிகளின் டிக்கெட்களும் முழுவதுமாக விற்று தீர்ந்து உள்ளன. சாம்பியன்ஸ் டிராபி தொடரில் குரூப் ஏ பிரிவில் இந்திய அணி மூன்று போட்டிகளில் விளையாட உள்ளது. முதல் போட்டி பிப்ரவரி 20 அன்று வங்கதேச அணிக்கு எதிராகவும், இரண்டாவது போட்டி பிப்ரவரி 23 அன்று பாகிஸ்தான் அணிக்கு எதிராகவும், மூன்றாவது போட்டி மார்ச் 2 அன்று நியூசிலாந்து அணிக்கு எதிராகவும் நடைபெற உள்ளன.