துபாய் : சாம்பியன்ஸ் கோப்பை தொடர் வரும் 19ஆம் தேதி பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடத்தப்படுகிறது. இதில் அரசியல் காரணங்களால் பாகிஸ்தானுக்கு வந்து விளையாட முடியாத சூழல் இந்தியாவுக்கு ஏற்பட்டதை அடுத்து, இந்தியா விளையாடும் போட்டிகள் அனைத்தும் துபாய்க்கு மாற்றப்பட்டு இருக்கிறது.
இந்த சூழலில் குரூப் ஏ பிரிவில் இந்தியா , பாகிஸ்தான், வங்கதேசம், நியூசிலாந்து ஆகிய அணிகள் இடம்பெற்றுள்ளன. பி பிரிவில் ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா, இங்கிலாந்து மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய அணிகள் இருக்கின்றன.

இந்த நிலையில் இந்திய அணி தங்களுடைய முதல் போட்டியில் பிப்ரவரி 20ஆம் தேதி வங்கதேசத்தை எதிர்கொள்கிறது. இதன்பிறகு பிப்ரவரி 23ஆம் தேதி பாகிஸ்தானை எதிர்கொள்கிறது. ஒரு நாள் கிரிக்கெட்டில் கடைசியாக இரு அணிகளும் 50 ஓவர் உலககோப்பை லீக் ஆட்டத்தில் அகமதாபாத்தில் மோதியது. இதில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது.
அதன் பிறகு கிட்டத்தட்ட பதினாறு மாதங்கள் கழித்து இரு அணிகளும் மீண்டும் ஒரு நாள் கிரிக்கெட்டில் சந்திக்கிறது. இதனால் இந்த போட்டிக்கான எதிர்பார்ப்பு பல மடங்கு அதிகரித்து இருக்கிறது. துபாயில் நடத்தப்படும் மற்ற போட்டிகளுக்கான டிக்கெட்டின் ஆரம்ப விலை இந்திய ரூபாய் மதிப்பில் 2500 ரூபாயாக இருக்கிறது.
ஆனால் இந்தியா பாகிஸ்தான் விளையாடும் போட்டிக்கான டிக்கெட் விலை பல மடங்கு உயர்த்தப்பட்டு இருக்கிறது. ஆரம்ப விலையை இந்திய ரூபாய் மதிப்பில் 10 ஆயிரம் ரூபாயாகவும் அதிகபட்ச விலையாக ஒரு டிக்கெட் விலை ஒரு லட்சத்து 10 ஆயிரம் ரூபாய் ஆகும் நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. இந்தப் போட்டிக்கான டிக்கெட் விற்பனை ஆன்லைன் மற்றும் மைதானத்தில் வழங்கப்பட்டது.
நீண்ட வரிசையில் நின்று ரசிகர்கள் டிக்கெட்டை வாங்கி சென்றனர். டிக்கெட் விற்பனை ஆரம்பித்து ஒரு மணி நேரத்திலே அனைத்து டிக்கெட்டுகளும் விற்று தீர்ந்து விட்டதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. குறிப்பாக அதிக விலை மதிப்பு உடைய 40 ஆயிரம் ரூபாய் டிக்கெட் மற்றும் ஒரு லட்சத்து 10 ஆயிரம் ரூபாய் டிக்கெட் கூட விற்று தீர்ந்து விட்டதால் கிரிக்கெட் ரசிகர்கள் ஆச்சரியம் அடைந்தனர்.
துபாயில் அதிக அளவு இந்திய ரசிகர்களும், பாகிஸ்தான் ரசிகர்களும் இருக்கின்றனர். அது மட்டும் இல்லாமல் பல வெளிநாட்டு ரசிகர்களும் இருப்பதால் இந்த போட்டிக்கான மவுசு அதிகரித்து இருக்கிறது. கடந்த 2021 டி20 உலக கோப்பை போட்டியில் இதே துபாய் மைதானத்தில் பாகிஸ்தானிடம் இந்தியா தோல்வியை தழுவியது. அதற்கு பழித்தீர்க்க தற்போது இந்தியாவுக்கு நல்ல வாய்ப்பு ஏற்பட்டிருக்கிறது.