துபாய்: 2025 சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோத உள்ள போட்டியில் இந்திய அணி டாஸ் வென்றால் என்ன முடிவை எடுக்க வேண்டும்? முதலில் பேட்டிங் செய்வதா அல்லது பவுலிங் செய்வதா.. எது டாஸ் வெல்லும் அணிக்கு சாதகமாக இருக்கும்? என்பதைப் பற்றிப் பார்க்கலாம்.
இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டி துபாய் சர்வதேச மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்த மைதானத்தின் பிட்ச் பேட்டிங் மற்றும் பவுலிங் என இரண்டுக்கும் சரிசமமாக ஒத்துழைக்கும். இரண்டாவதாக பேட்டிங் செய்யும் போது மின் விளக்குகளின் வெளிச்சத்தில் பந்தை எளிதாக கணித்து ஆடுவது கடினமாக உள்ளது.

முன்னதாக, இரண்டாவதாக பந்து வீசும் அணிக்கு சிரமம் இருக்கும், பனிப்பொழிவு காரணமாக பந்து வீசுவது சிரமமாக இருக்கும் என்ற ஒரு கணிப்பு வெளியிடப்பட்டு இருந்தது. ஆனால், இந்தியா மற்றும் வங்கதேசம் அணிகள் மோதிய போட்டியின் போது எந்த விதமான பனிப்பொழிவும் இல்லை.
மேலும், இரண்டாவதாக இந்திய அணி பேட்டிங் செய்தபோது சிரமத்தை எதிர்கொண்டது. மின் வெளிச்சத்தில் அந்த மைதானத்தில் பேட்டிங் செய்வது சற்று சவாலாக இருந்தது. அதே சமயம் பந்து வீச்சாளர்களுக்கு பனிப்பொழிவு போன்ற எந்த இடர்பாடுகளும் இல்லை.
இதை கருத்தில் கொண்டு பார்த்தால், டாஸ் வெல்லும் அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்வதே சாதகமான முடிவாக இருக்கும். எனவே, இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா டாஸ் வென்றால் நிச்சயமாக முதலில் பேட்டிங்கை தேர்வு செய்ய வேண்டும்.
இது ஒரு புறம் இருக்க, இந்திய அணி கடந்த 11 ஒருநாள் போட்டிகளில் டாஸ் வெல்லவில்லை. இது ஒருநாள் போட்டியின் வரலாற்றில் அதிகபட்ச சாதனையாகும். தொடர்ந்து 11 போட்டிகளில் ஒரு அணி ஒரு முறை கூட டாஸ் வெல்லாமல் இருப்பது அதிகபட்சமாகும். இன்னும் ஒரு போட்டியில் இந்திய அணி டாஸ் வெல்லாமல் போனால் இது புதிய உலக சாதனையாகவும் மாறிவிடும்.
பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டி மிகவும் முக்கியமானது என்பதால் இந்தியா இந்தப் போட்டியில் டாஸ் வெல்லும் அதிர்ஷ்டத்தைப் பெறுமா? என்று பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
இந்தப் போட்டியில் பாகிஸ்தான் அணி வாழ்வா.. சாவா? என்ற நிலையில் பங்கேற்கிறது. ஏற்கனவே அந்த அணி நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் தோல்வியடைந்து இருப்பதால் இந்திய அணிக்கு எதிரான போட்டியில் வெற்றி பெற்றால் மட்டுமே அரையிறுதி வாய்ப்பை தக்க வைக்க முடியும் என்ற நிலையில் உள்ளது.