கராச்சி: 2025 சாம்பியன்ஸ் டிராஃபி கிரிக்கெட் தொடர் பாகிஸ்தானில் அடுத்த ஆண்டு பிப்ரவரியில் நடைபெற உள்ளது. இந்திய அணி கடந்த 17 ஆண்டுகளாக பாகிஸ்தானுக்கு பயணம் செய்ததில்லை. அங்கு இந்திய வீரர்களுக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் இருப்பதை சுட்டிக்காட்டி ஒவ்வொரு முறையும் இந்திய அணி பாகிஸ்தான் செல்வதை தவிர்த்து வருகிறது.
இந்த நிலையில், 2025 சாம்பியன்ஸ் டிராபி தொடரில் பங்கேற்க பாகிஸ்தானுக்கு செல்ல முடியாது என பிசிசிஐ சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலிடம் தெரிவித்து இருந்தது. எனினும், பாகிஸ்தான் கிரிக்கெட் அமைப்பு எப்படியாவது இந்திய அணியை பாகிஸ்தானுக்கு வரவழைத்து விட வேண்டும் என முயற்சியில் இறங்கி இருந்தது.

தற்போது அந்த முயற்சிகளுக்கு வேட்டு வைக்கும் வகையில் பாகிஸ்தானில் ஒரு பெரிய குண்டுவெடிப்பு சம்பவம் நடந்துள்ளது. கராச்சி விமான நிலையத்தில் சீன பொறியாளர்களை குறி வைத்து குண்டுவெடிப்பு நடத்தப்பட்டது. அதில் இரண்டு சீனர்கள் பலியாகினர். மேலும், 11 பேர் பலத்த காயம் அடைந்தனர். இந்த சம்பவத்திற்கு சீனா கடும் கண்டனத்தை தெரிவித்து இருக்கிறது.
இந்த தாக்குதலை நடத்தியது பலூசிஸ்தான் லிபரேஷன் ஆர்மி என தெரிய வந்துள்ளது. அந்த அமைப்பு பாகிஸ்தானில் சீனா வளர்ச்சிப் பணிகள் என்ற பெயரில் ஊடுருவுவதை விரும்பவில்லை. அதன் காரணமாகவே சீன பொறியாளர்களை குறி வைத்து இந்த தாக்குதல் சம்பவத்தை நடத்தி உள்ளது.
தற்போது இது சாம்பியன்ஸ் ட்ராஃபி கிரிக்கெட் தொடருக்கும் பெரிய அச்சுறுத்தலாக மாறி உள்ளது. இதே அமைப்பு கடந்த ஆகஸ்ட் மாதம் சுமார் 70 பேரை பல்வேறு தாக்குதல் சம்பவங்களில் பலியாக்கி இருந்தது. ஆனால், அது பாகிஸ்தானின் உள்விவகாரமாக இருந்தது. தற்போது சீன நாட்டினரை குறி வைத்து இந்த அமைப்பு நடத்திய தாக்குதல், சாம்பியன்ஸ் ட்ராஃபிக்கு வரவுள்ள ஏழு வெளிநாட்டு அணிகளுக்கும் கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.
ஏற்கனவே, 2009 ஆம் ஆண்டு இலங்கை கிரிக்கெட் அணி பாகிஸ்தானில் சுற்றுப் பயணம் மேற்கொண்ட போது தீவிரவாத தாக்குதல் நடத்தப்பட்டது. அதில் இலங்கை அணி வீரர்கள் நூலிழையில் உயிர் தப்பினர். அதன் பின்பு பல ஆண்டுகளாக எந்த கிரிக்கெட் அணியும் பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளாமல் இருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் கராச்சி குண்டு வெடிப்பை சுட்டிக்காட்டி இந்திய அணி நிச்சியமாக பாகிஸ்தானுக்கு செல்லாது எனக் கூறப்படுகிறது. ஆஸ்திரேலியா உள்ளிட்ட வேறு சில அணிகளும் இதே காரணத்தை சுட்டிக்காட்டி பாகிஸ்தான் செல்ல முடியாது என தெரிவிக்க வாய்ப்பு உள்ளது. எனவே, பாகிஸ்தான் கிரிக்கெட் அமைப்புக்கு கராச்சி குண்டுவெடிப்பு சம்பவம் மிகப்பெரிய தலைவலியாக மாறியுள்ளது. 2025 சாம்பியன்ஸ் ட்ராஃபி தொடருக்கு பல கோடிகளை செலவிட்டு உள்ள நிலையில் வேறு நாட்டுக்கு தொடரை மாற்றினால் அது பாகிஸ்தானுக்கு பெரும் நஷ்டமாக மாறக் கூடும்.