கராச்சி: எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு சாம்பியன்ஸ் டிராபி தொடர் வரும் 19ஆம் தேதி பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடைபெறுகிறது. சர்வதேச ஒரு நாள் போட்டிகளுக்கான தரவரிசையில் டாப் 8 இடங்களை பிடிக்கும் அணி இந்த தொடரில் பங்கு பெறுகிறது.
குரூப் ஏ பிரிவில் நடப்பு சாம்பியன் பாகிஸ்தான், இந்தியா, நியூசிலாந்து, வங்கதேசம் ஆகிய ஆணிகள் விளையாடுகின்றது. இதேபோன்று குரூப் பி பிரிவில் ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா,இங்கிலாந்து, மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய அணிகள் விளையாடுகின்றன.

இந்த நிலையில் பாதுகாப்பு காரணங்களால் இந்திய அணி பாகிஸ்தானுக்கு சென்று விளையாட மறுத்துவிட்டது. இதன் காரணமாக இந்தியா விளையாடும் போட்டிகள் மற்றும் முதல் அரை இறுதி ஆட்டம் துபாயில் நடைபெறுகிறது. ஒருவேளை இந்திய அணி பைனலுக்கு தகுதி பெற்றால், துபாயில் தான் இறுதிப் போட்டி நடைபெறும்.
இந்த சூழலில் சாம்பியன்ஸ் கோப்பை தொடருக்காக பாகிஸ்தானில் உள்ள கராச்சி மற்றும் லாகூர் மைதானங்கள் புனரமைக்கப்பட்டது. இந்த சூழலில் ஐசிசி தொடரில் ஒவ்வொரு அணியின் தேசியக்கொடியும் மைதானத்தில் பறக்க விடப்படுவது சம்பிரதாயம்.
ஆனால் தற்போது கராச்சியில் உள்ள மைதானத்தில் ஏழு நாடுகளின் கொடி மட்டும்தான் பறக்க விடப்பட்டிருக்கிறது. இதில் இந்தியாவின் தேசியக்கொடி இல்லை என்று ரசிகர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இது இந்தியாவை அவமதிக்கும் செயல் என்றும், இந்திய கோடி பறக்க விடப்படவில்லை என்றால் சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் இந்திய அணி விளையாடக்கூடாது என்றும் ரசிகர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
எனினும் இதற்கு விளக்கம் அளித்துள்ள பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய நிர்வாகி, பாகிஸ்தானில் வந்து விளையாடும் நாடுகளின் கொடிகள் மட்டும் தான் பறக்க விடப்பட்டிருப்பதாகவும், இந்தியா தங்களது நாட்டுக்கு வரவில்லை என்பதால் தான் இந்திய நாட்டின் தேசிய கொடியை தாங்கள் வைக்கவில்லை என்றும் விளக்கம் அளித்து இருக்கின்றார்.
ஐசிசி யின் தலைவராக ஜெயிஷா தான் இருக்கிறார் என்பதால், ரசிகர்கள் ஜெய்ஷா இந்த விவகாரத்தில் தலையிட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர். ஏற்கனவே பாகிஸ்தான் என்ற பெயரை தங்களது ஜெர்சியில் போடமாட்டோம் என இந்தியா எதிர்ப்பு தெரிவித்து இருந்த நிலையில் தற்போது பாகிஸ்தானும் இந்தியாவின் தேசிய கொடியை புறக்கணித்து இருப்பது குறிப்பிடத்தக்கது.