துபாய்: கிரிக்கெட் உலகின் சாம்பியன் அணி என ஆஸ்திரேலியாவை பலரும் அழைத்து வரும் நிலையில், ஆஸ்திரேலியாவால் கூட நினைத்துக்கூட பார்க்க முடியாத ஒரு பிரம்மாண்ட விஷயத்தை இந்தியா செய்து மிரள வைத்துள்ளது. கடந்த மூன்று ஐசிசி தொடர்களில் இந்திய அணி ஒரே ஒரு தோல்வியை மட்டுமே சந்தித்துள்ளது. 23 வெற்றிகளைப் பெற்று இருக்கிறது.
இது போன்ற ஒரு சாதனையை இதுவரை உலகில் எந்த கிரிக்கெட் அணியும் செய்ததில்லை. தொடர்ந்து மூன்று ஐசிசி தொடர்களில் இத்தனை வெற்றிகளைப் பெற்ற ஒரே அணி என்ற உண்மையான சாம்பியன் அணியின் பெயரைப் பெற்று இருக்கிறது இந்தியா. ஒவ்வொரு தொடரிலும் இந்தியா எத்தனை வெற்றிகளை பெற்றது.. அந்த ஒரு தோல்வி எந்தப் போட்டியில்? என்று பார்க்கலாம்.

2025 சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்திய அணி இறுதிப் போட்டியில் நியூசிலாந்தை வீழ்த்தி நான்கு விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. அதன் மூலம் சாம்பியன்ஸ் டிராபி கோப்பையையும் வென்றது. இந்த தொடரில் இந்திய அணி குரூப் சுற்றில் மூன்று போட்டிகளிலும், அரையிறுதி மற்றும் இறுதிப் போட்டிகள் என மொத்தம் ஐந்து போட்டிகளில் விளையாடியது. அந்த ஐந்திலும் வெற்றி பெற்றது.
இதற்கு முன் 2024 டி20 உலகக் கோப்பையில் இந்திய அணி குரூப் சுற்றில் மூன்று போட்டிகளிலும், சூப்பர் 8 சுற்றில் மூன்று போட்டிகளிலும், அதன் பின் அரையிறுதி மற்றும் இறுதிப் போட்டிகளிலும் தொடர்ந்து வெற்றி பெற்றது. 2024 டி20 உலகக் கோப்பையில் மொத்தம் எட்டு போட்டிகளில் விளையாடி அந்த எட்டிலும் வெற்றி பெற்றிருந்தது இந்திய அணி.
அதற்கு முன் 2023 ஒருநாள் போட்டி உலகக் கோப்பையில் இந்திய அணி முதல் சுற்றில் ஒன்பது போட்டிகளில் தொடர்ந்து வெற்றி பெற்றது. அதன் பின் அரையிறுதியிலும் வெற்றி பெற்றது. இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவிடம் மட்டுமே இந்திய அணி தோல்வி அடைந்து இருந்தது.
இந்த மூன்று தொடர்களிலும் மொத்தம் 24 போட்டிகளில் இந்திய அணி விளையாடியது. அதில் 2023 ஒருநாள் கோப்பை இறுதிப் போட்டியைத் தவிர்த்து மற்ற 23 போட்டிகளிலும் இந்திய அணி வெற்றி பெற்று இருக்கிறது. இதன் மூலம் உண்மையான சாம்பியன் அணி என்பதை இந்திய அணி நிரூபித்து இருக்கிறது.
கிரிக்கெட் வெறி பிடித்த ஆஸ்திரேலியா கூட இது போன்ற ஒரு ஆதிக்கத்தை செய்ய முடியவில்லை. மேலும், ஒன்பது மாத இடைவெளியில் 2024 டி20 உலகக் கோப்பையையும், 2025 சாம்பியன்ஸ் டிராபியையும் இந்திய அணி வென்று இருக்கிறது. அடுத்து 2026 டி20 உலகக் கோப்பை நடைபெற உள்ள நிலையில், அதையும் வெல்வதற்கு இந்திய அணி இப்போது தயாராகி வருகிறது. இனி உலகின் சாம்பியன் அணி ஆஸ்திரேலியா அல்ல இந்தியா தான் என்பதை இந்த நிகழ்வு ஆணித்தரமாக உணர்த்தி இருக்கிறது.