துபாய்: உலகின் அனைத்து கிரிக்கெட் அமைப்புகளும் சேர்ந்து பிசிசிஐயை கட்டுப்படுத்த வேண்டும் என முன்னாள் பாகிஸ்தான் வீரர் இன்சமாம் உல் ஹக் பேசி இருக்கிறார். 2025 சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்திய அணிக்கு மட்டும் ஒரு சலுகை அளிக்கப்பட்டு இருக்கிறது.
2025 சாம்பியன்ஸ் டிராபி தொடரை பாகிஸ்தான் நடத்தும் நிலையில், இந்திய அணி, பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் செய்ய மறுத்தது. அதனால் இந்திய அணி விளையாடும் போட்டிகள் அனைத்தும் துபாயில் நடத்தப்பட்டு வருகிறது. இந்திய அணி அரையிறுதிக்கு முன்னேறி இருக்கும் நிலையில், இந்தியாவின் அரையிறுதி போட்டியும் துபாயில் தான் நடைபெறும். அடுத்து இந்திய அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறினாலும் அந்தப் போட்டியும் துபாயில் தான் நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

இது மட்டுமின்றி ஐபிஎல் தொடரிலும் பிசிசிஐ தனது ஆதிக்கத்தை செலுத்தி வருகிறது. இந்திய அணி வீரர்கள் ஐபிஎல் தொடரை தவிர உலகின் வேறு எந்த தொடரிலும் பங்கேற்க அனுமதி இல்லை. அப்படி அவர்கள் பங்கேற்றால் அதன் பின் ஐபிஎல் மற்றும் இந்திய அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் அந்த வீரர்கள் பங்கேற்க முடியாது என்ற விதி உள்ளது.
அதே சமயம் மற்ற நாடுகளைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர்கள் ஐபிஎல் தொடரில் பங்கேற்கலாம் என்ற நிலை உள்ளது. இதை மாற்ற வேண்டும், பிசிசிஐயின் இந்த ஆதிக்கத்தை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என இன்சமாம் உல் ஹக் பேசி இருக்கிறார்.
இது பற்றி அவர் ஒரு கிரிக்கெட் விவாத நிகழ்ச்சியில் பேசிய போது, "சாம்பியன்ஸ் டிராபியில் இந்திய அணி தனியாக ஓர் இடத்தில் ஆடுவதைக் கூட விட்டு விடுங்கள். ஆனால், உலகின் முக்கிய வீரர்கள் ஐபிஎல் தொடரில் பங்கேற்கிறார்கள். ஆனால் இந்திய வீரர்கள் மற்ற நாட்டு டி20 தொடர்களில் பங்கேற்பதில்லை."
"எனவே, மற்ற கிரிக்கெட் அமைப்புகள் தங்கள் வீரர்களை ஐபிஎல் தொடருக்கு விளையாட அனுப்புவதை நிறுத்த வேண்டும். பிசிசிஐ உங்கள் நாட்டு தொடர்களில் அவர்கள் வீரர்களை விளையாட அனுமதிக்கவில்லை என்றால், நீங்களும் உங்கள் வீரர்களை ஐபிஎல் தொடரில் விளையாட அனுமதிக்காதீர்கள்" எனக் கூறியிருக்கிறார்.
இதில் மற்றொரு விஷயமும் உள்ளது. பாகிஸ்தான் வீரர்களுக்கு 2009ஆம் ஆண்டிலிருந்து ஐபிஎல் தொடரில் வாய்ப்பு அளிக்கப்படுவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது. எந்த அணியும் பாகிஸ்தான் வீரரை ஏலத்தில் வாங்காது. இது எழுதப்படாத விதியாகவே உள்ளது. அதனால் பாகிஸ்தான் வீரர்களும் ஐபிஎல் ஏலத்தில் பங்கேற்கத் தங்கள் பெயர்களை விண்ணப்பிப்பதில்லை. இந்த நிலையில்தான் இன்சமாம் உல் ஹக் பிசிசிஐ ஆதிக்கத்தை மற்ற நாட்டு கிரிக்கெட் அமைப்புகள் சேர்ந்து முறியடிக்க வேண்டும் என பேசி இருக்கிறார்.