துபாய்: சாம்பியன்ஸ் டிராபி தொடர் இந்தியா விளையாடும் போட்டிகள் மட்டும் துபாயில் நடைபெற்று வருகிறது. இந்த சூழலில் இந்திய அணி இந்த தொடரில் தோல்வியை தழுவாமல் இறுதி போட்டிக்கு தகுதி பெற்றிருக்கிறது.இஸ்லாமியர்களின் ஐம்பெரும் கடமைகளில் ஒன்றான ரமலான் நோன்பு கடைப்பிடிக்கும் காலம் அண்மையில் தொடங்கியது.
இதன் காரணமாக முதல் அரை இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக விளையாடும் போது சமி நோன்பு வைக்காமல் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடினார். இதற்கு பலரும் சமியை பாராட்டி நாட்டிற்காக சமி நோன்பை விட்டதாக கருத்து தெரிவித்திருந்தனர்.

இந்த நிலையில் சமி நோன்பு வைக்காமல் விட்டதற்கு இஸ்லாமிய மதகுரு ஒருவர் கண்டனம் தெரிவித்திருக்கிறார்கள். இது குறித்து கருத்து தெரிவித்துள்ள மௌலானா சகாபுதீன், "நோன்பை கடைபிடிக்காமல் விடுவது என்பது குற்றமாகும். இது இஸ்லாமிய கொள்கைக்கு எதிரான பாவம்."
"நோன்பு வைப்பது என்பது ஒவ்வொரு இஸ்லாமியர்களின் கடமை. இதனால் நோன்பு வைக்காமல் முகமது சமி பாவம் செய்துவிட்டார். உடல்நலம் ஆரோக்கியத்துடன் இருக்கும் ஒரு ஆணோ, பெண்ணோ நோன்பு வைக்காமல் இருப்பது மிகப்பெரிய குற்றமாகும். இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் சமி, நோன்பு வைக்காமல் போட்டியின் போது குடிநீர் குடித்திருக்கிறார்."
"இதை பலரும் பார்த்திருக்கிறார்கள். அவரால் விளையாட முடிகிறது என்றால் அவர் உடல் ஆரோக்கியத்துடன் இருக்கிறார் என்று தான் அர்த்தம். அப்படி இருக்கும்போது அவர் நோன்பு வைக்காமல் தண்ணீர் குடித்தால் ஒரு தவறான முன்னுதாரணமாக சமி விளங்குகிறார்."
"இந்த தவறை சமி மீண்டும் செய்யக்கூடாது. சமி தற்போது பாவம் செய்துவிட்டார். இதற்கு அவர் இறைவனிடம் பதில் சொல்லியே ஆக வேண்டும்" என்று கூறியுள்ளார். மௌலானா சஹாபூதனின் கருத்திற்கு முகமது சமியின் பயிற்சியாளர் ஆன முகமது பத்ருதீன் கடும் எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார். நாட்டிற்காக சேவை செய்யும்போது ஷமி நோன்பு வைக்காதது ஒரு பெரிய குற்றம் இல்லை என்றும், நாடுதான் அனைவருக்கும் முதலில் வரும் என்றும் அவர் கூறியுள்ளார்.
மௌலானாவின் கருத்திற்கு முகமது சமியின் குடும்பத்தினரும் கடும் கண்டனம் தெரிவித்திருக்கிறார்கள். இது குறித்து கருத்து தெரிவித்துள்ள சமியின் உறவினரான மும்தாஜ்,"நாட்டுக்காக விளையாடும் ஒரு வீரரை பாவம் செய்து இருக்கிறார் என்று கூறுவதை ஏற்றுக் கொள்ள முடியாது. இப்படி சொல்பவர்கள் முதலில் வெட்கப்பட வேண்டும்."
"சமி நாட்டுக்காக விளையாடுகிறார் என்பதை மறந்து விடாதீர்கள். பாகிஸ்தான் அணியில் கூட பல வீரர்கள் நோன்பு வைக்காமல் தங்களது நாட்டுக்காக விளையாடி இருக்கிறார்கள். கிரிக்கெட் வீரர்கள் இப்படி நோன்பு விடுவது என்பது புதிதல்ல. ஆனால் இது போன்ற சொல் எல்லாம் சமி மீது வைக்கப்படுவது எல்லாம் வெட்கக்கேடானது."
"நாங்கள் முகமது சமிக்கு சொல்லிக் கொள்வதெல்லாம் ஒன்றை ஒன்றுதான். இது போன்ற கருத்தில் எல்லாம் நீங்கள் கவனம் செலுத்த வேண்டாம். போட்டிக்காக தயாராகுங்கள் இறுதிப் போட்டியில் சிறப்பாக செயல்படுங்கள்" என்று தெரிவித்துள்ளார். இதேபோன்று சமிக்கு ஆதரவாக மௌலானா யாசும் அப்பாஸ் கருத்து ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.
"அதில் சில மத குருக்கள் வீண் விளம்பரத்திற்காக இது போல் சமி மீது தேவையற்ற புகார்களையும் குற்றச்சாட்டுகளையும் வைக்கிறார்கள். மத சார்ந்த நடவடிக்கைகளில் இஸ்லாம் யாரையும் வற்புறுத்தி ஒரு விஷயத்தை செய்ய சொன்னது கிடையாது. ஒரு மனிதர் நோன்பு வைக்கவில்லை என்றால் அது அவருடைய தனிப்பட்ட தோல்வியாக தான் கருத வேண்டுமே தவிர அதை பூதாகரமாக மாற்றக்கூடாது."
" ரமலான் மாதத்தில் மேலும் பல தரப்பினரும் நோன்பு வைக்காமல் இருக்கிறார்கள். அதற்கு பல காரணங்களும் இருக்கின்றது. அவர்கள் பற்றி எல்லாம் மௌலானா ஷாகாபுதீன் ஏதேனும் பேசுவாரா? ரமலான் மாதத்தையும் நோன்பையும் சர்ச்சையில் சிக்க வைப்பது மிகவும் தவறான விஷயம்" என்று தெரிவித்துள்ளார்.
இதேபோன்று மௌலானா காலித் வெளியிட்டுள்ள கருத்தில், "இஸ்லாமியர்கள் நோன்பு நோற்க வேண்டும் என்பது கண்டிப்பான ஒரு விஷயமாக இருந்தாலும், குர்ஆனில் சிலருக்கு விதிவிலக்கு அளிக்கப்பட்டிருக்கிறது. அதில் ஒரு மனிதர் பயணத்தில் இருக்கும்போது நோன்பு வைக்க தேவையில்லை. இதன் அடிப்படையில் சமி தற்போது வெளிநாட்டில் தான் இருக்கின்றார்"
"இதனால் அவர் நோன்பு வைக்காமல் இருப்பதற்கு இஸ்லாம் மதத்தில் வழி இருக்கின்றது. இதனால் யார் யாரையும் குறி வைத்து புகார் அளிக்கக்கூடாது விடப்பட்ட நோன்பை வேறு நாட்களில் வைத்துக்கொள்ள இஸ்லாம் மதத்தில் அனுமதி இருக்கிறது"என்று அவர் கூறியுள்ளார்.