மும்பை: 2025 சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான அணியில் இருந்து கடைசி நேரத்தில் நீக்கப்பட்ட யஷஸ்வி ஜெய்ஸ்வால் மாற்று வீரராக அறிவிக்கப்பட்டிருந்தார். அதாவது அவர் இந்திய அணியுடன் துபாய்க்கு பயணம் செய்ய மாட்டார். ஆனால் அந்த தொடரில் விளையாடும் இந்திய அணி வீரர்களில் யாருக்கேனும் காயம் ஏற்பட்டால் ஜெய்ஸ்வால் மாற்று வீரராக அணியில் தேர்வு செய்யப்பட வாய்ப்பு இருந்தது. ஆனால் தற்போது அந்த வாய்ப்பும் முடிவுக்கு வந்துள்ளது.
2025 சாம்பியன்ஸ் டிராபி தொடரில் தேர்வு செய்யப்படாத நிலையில், ரஞ்சி டிராபி அரை இறுதிப் போட்டியில் மும்பை மற்றும் விதர்பா அணிகள் மோதும் போட்டியில் அவர் விளையாட இருந்தார். ஆனால் தற்போது அவர் காயம் காரணமாக மும்பை அணியில் இருந்து நீக்கப்பட்டு இருக்கிறார்.

அதனால் சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான மாற்று வீரர்கள் பட்டியலில் இருந்தும் யஷஸ்வி ஜெய்ஸ்வால் நீக்கப்பட வாய்ப்பு உள்ளது. ஆனால் பிசிசிஐ இதுவரை எந்த முடிவையும் அறிவிக்கவில்லை. ஒருவேளை ஜெய்ஸ்வாலை மாற்று வீரர்கள் பட்டியலில் இருந்து பிசிசிஐ நீக்காமல் இருக்கலாம்.
சாம்பியன்ஸ் டிராபி தொடரின் போது இந்திய அணியில் எந்த வீரருக்காவது காயம் ஏற்பட்டால் அப்போது ஜெய்ஸ்வாலின் நிலையை உத்தேசித்து அவரை ஆட வைக்கலாம் அல்லது அவரை அப்போது மாற்று வீரர்கள் பட்டியலில் இருந்து நீக்கிவிட்டு வேறு ஒரு வீரரை அணியில் சேர்த்து அவரை இந்திய அணியின் மாற்று வீரராக அறிவிக்கலாம். இப்படி ஒரு வாய்ப்பு இருப்பதால் இப்போதைக்கு பிசிசிஐ ஜெய்ஸ்வாலுக்கான மாற்றத்தை அறிவிக்காது.
இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் தொடருக்கு முன்பு வரை ஜெய்ஸ்வால் இந்திய ஒருநாள் அணியில் இடம் பெறவில்லை. இந்த நிலையில் தான் அவரை சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான முதற்கட்ட அணியில் பிசிசிஐ சேர்த்திருந்தது. அதன் பின்னரே அவருக்கு இங்கிலாந்து ஒருநாள் தொடரிலும் வாய்ப்பு அளிக்கப்பட்டு முதல் போட்டியில் அவர் களம் இறக்கப்பட்டார்.
ஆனால் அந்த அறிமுக போட்டியுடன் யஷஸ்வி ஜெய்ஸ்வாலின் வாய்ப்புகள் முடிவுக்கு வந்தன. இங்கிலாந்து ஒரு நாள் தொடரின் இரண்டாவது மற்றும் மூன்றாவது போட்டிகளில் அவர் விளையாடவில்லை. அதன் பின் சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான அணியிலிருந்தும் நீக்கப்பட்டார். அந்த அணியில் மாற்று வீரராக அறிவிக்கப்பட்டு இருந்தார். தற்போது அந்த வாய்ப்பும் நழுவி போகும் நிலையில் உள்ளது.