மும்பை: 2025 சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டு இருக்கிறது. அந்த அணியில் பும்ரா இடம் பெறுவாரா? என ரசிகர்கள் பலரும் எதிர்பார்ப்புடன் காத்திருந்தனர். இந்த நிலையில், பும்ராவின் பெயர் சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான இந்திய அணியில் இடம் பெற்று இருக்கிறது. ஆனால், அவர் விளையாடுவது இன்னும் உறுதியாகவில்லை.
இது இந்திய அணிக்கு பின்னடைவான செய்தியாக அமைந்திருக்கிறது. பிப்ரவரி முதல் வாரத்தில் தான் பும்ரா விளையாடுவாரா, இல்லையா? என்பது தெரிய வரும் என தேர்வுக் குழு தலைவர் அஜித் அகர்கர் தெரிவித்து இருக்கிறார். இது குறித்து பேசிய கேப்டன் ரோஹித் சர்மா, பும்ரா விளையாடுவாரா என்பது உறுதியாக தெரியாததால் மாற்று வேகப் பந்துவீச்சாளராக அர்ஷ்தீப் சிங்கை தேர்வு செய்து இருப்பதாக கூறி இருக்கிறார்.

அர்ஷ்தீப் சிங் இதுவரை 8 சர்வதேச ஒருநாள் போட்டிகளில் மட்டுமே விளையாடி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அவர் சமீப காலமாக தேசிய அளவிலான டி20 தொடரான சையது முஷ்டாக் அலி தொடர் மற்றும் ஒரு நாள் தொடரான விஜய் ஹசாரே டிராபியில் தொடர்ந்து விளையாடினார். அதிக விக்கெட்களையும் கைப்பற்றினார்.
அதனால் அவரது அனுபவம் குறித்து நாம் அதிகம் கவலைப்பட வேண்டியது இல்லை என்று ரோஹித் சர்மா தெரிவித்தார். முன்னணி வேகப் பந்துவீச்சாளர் பும்ரா இல்லாத நிலையில் மற்றொரு மூத்த வேக பந்துவீச்சாளரான முகமது ஷமி அணியில் இடம் பெற்று இருப்பது குறிப்பிடத்தக்கது.
ஷமியும் நீண்ட கால காயத்திலிருந்து மீண்டு வந்திருக்கிறார். அவரால் முழு அளவில் சாம்பியன்ஸ் டிராபி தொடரில் பங்கேற்க முடியுமா? என்ற கேள்வியும் உள்ளது.
2025 சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான இந்திய அணி விவரம் - ரோஹித் சர்மா (கேப்டன்), சுப்மன் கில் (துணை கேப்டன்), விராட் கோலி, கே எல் ராகுல், ஸ்ரேயாஸ் ஐயர், ஹர்திக் பாண்டியா, அக்சர் பட்டேல், வாஷிங்டன் சுந்தர், குல்தீப் யாதவ், ரவீந்திர ஜடேஜா, பும்ரா, முகமது ஷமி, அர்ஷ்தீப் சிங், ஜெய்ஸ்வால், ரிஷப் பண்ட்.