டெல்லி: பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா இன்னும் சில மாதங்களில் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் தலைவராக பதவியேற்க இருக்கிறார். அவர் பதவியேற்கும் முன்பாகவே ஒரு சிக்கலை தீர்த்து வைக்க வேண்டிய இக்கட்டான நிலையில் இருக்கிறார். 2025 சாம்பியன்ஸ் ட்ராபி கிரிக்கெட் தொடர் பாகிஸ்தானில் நடைபெற உள்ளது. கடந்த 15 ஆண்டுகளாக இந்திய அணி பாகிஸ்தான் செல்ல மறுத்து வருகிறது.
இப்போதும் இந்திய அணியை பாகிஸ்தானுக்கு அனுப்ப முடியாது என பிசிசிஐ கூறிவிட்டது. இந்திய அரசு அனுமதி அளித்தால் மட்டுமே இந்திய அணி, பாகிஸ்தானுக்கு செல்லும் என தெளிவாக கூறிவிட்டது பிசிசிஐ. அதே சமயம், பாகிஸ்தான் கிரிக்கெட் அமைப்பும் மல்லுக்கட்டி வருகிறது. இந்தியா ஆடும் போட்டிகளை மட்டும் வேறு நாட்டில் நடத்த வேண்டும் என பிசிசிஐ கூறி உள்ளது.

அதற்கு பாகிஸ்தான் கிரிக்கெட் அமைப்பு இது வரை ஒப்புக்கொள்ளவில்லை. இன்னும் ஐந்து மாதங்களில் சாம்பியன்ஸ் ட்ராபி தொடர் துவங்க உள்ளது. வரும் டிசம்பர் மாதம் ஜெய் ஷா சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் தலைவராக பதவி ஏற்பார். அப்போது பாகிஸ்தான் கிரிக்கெட் அமைப்பு இந்தியா ஆடும் போட்டிகளை வெளிநாடுகளில் நடத்த ஒப்புக் கொள்ளவில்லை என்றால் மிகப்பெரிய சிக்கல் ஏற்படும்.
சாம்பியன்ஸ் ட்ராபி தொடரின் ஒளிபரப்பு உரிமத்திலும் மிகப்பெரிய சிக்கல் ஏற்படும். இந்தியா இடம் பெறாமல் சாம்பியன்ஸ் ட்ராபி தொடர் நடந்தால் அதன் விளம்பர வருவாய் மிகப்பெரிய அளவில் அடி வாங்கும். அந்த வகையில் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் தலைவர் ஜெய் ஷாவின் முதல் தொடரே தோல்வியில் முடியும். அதே சமயம், ஜெய்ஷா நினைத்தால் இந்திய அணியை, பாகிஸ்தானுக்கு அனுப்ப முடியும்.
தற்போது இந்திய உள்துறை அமைச்சராக அமித்ஷா இருக்கிறார். அவரது மகனான ஜெய் ஷா இந்திய அணியை அனுப்புவதற்கு தனது தந்தையிடம் பேசி அனுமதி வாங்க முடியும். உள்துறை அமைச்சகம் அனுமதி அளித்தால் இந்திய அணி பாகிஸ்தானுக்கு செல்வதில் எந்த சிக்கலும் இருக்காது. ஆனால், ஜெய் ஷாவுக்காக மட்டும் மத்தியில் ஆளும் பாஜக அரசு இந்திய அணியை பாகிஸ்தானுக்கு அனுப்ப ஒப்புக் கொள்ளுமா? என்ற கேள்வி உள்ளது.