மும்பை: இந்திய ரசிகர்கள் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்களிடம் அன்பாக, ஆதரவாக நடந்து கொண்டார்கள் எனவும், அவர்கள் தான் உலகிலேயே சிறந்த கிரிக்கெட் ரசிகர்கள் எனவும் புகழ்ந்து இருக்கிறார் முன்னாள் பாகிஸ்தான் வீரர் கம்ரான் அக்மல். மேலும், இந்திய அணி, பாகிஸ்தானுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டு பாகிஸ்தான் ரசிகர்களின் அன்பை பெற வேண்டும் எனவும் கூறி இருக்கிறார்.
இந்திய அணி பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு சுமார் 18 ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது. இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே இருதரப்பு கிரிக்கெட் தொடர்கள் எதுவும் இந்த 18 ஆண்டுகளில் நடத்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

அதேசமயம் ஐசிசி நடத்தும் கிரிக்கெட் தொடர்களில் மட்டுமே இந்தியா மற்றும் பாகிஸ்தான அணிகள் மோதி வருகின்றன. தற்போது ஐசிசி நடத்தும் சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் 2025 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் நடைபெற உள்ளது. அந்தத் தொடர் பாகிஸ்தானில் நடைபெற இருப்பதால் இந்திய அணி அந்தத் தொடரில் பங்கேற்பதில் சிக்கல் உள்ளதாகவும், இந்திய அரசு அனுமதி வழங்காது என்றும் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலிடம் கூறி இருக்கிறது பிசிசிஐ.
ஆனால், பாகிஸ்தான் கிரிக்கெட் அமைப்பு மற்றும் முன்னாள் பாகிஸ்தான் வீரர்கள் இந்திய அணி, பாகிஸ்தானுக்கு வர வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். தற்போது பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் கம்ரான் அக்மல் இது குறித்து விரிவாக பேசியிருக்கிறார். "இந்தியா மற்றும் பாகிஸ்தான் போட்டிகள் ரசிகர்களை ஒன்று இணைக்கின்றன. அதனால் தான் கிரிக்கெட் போட்டிகளிலேயே இதுதான் சிறந்தது என கருதப்படுகிறது. நாங்கள் இந்தியாவுக்கு பலமுறை சுற்றுப்பயணம் சென்று இருக்கிறோம். 2004, 2007 மற்றும் 2011இல் சென்று இருந்தோம். இந்தியாவில் எங்களுக்கு நிறைய அன்பு மற்றும் ஆதரவு கிடைத்தது."
"சொந்த மண்ணில் தொடரை நடத்தும் அணிக்கு ஆதரவு கிடைப்பதில் ஆச்சரியம் இல்லை. ஆனால், எங்களுக்கும் அதே அளவு ஆதரவு கிடைத்தது. பாகிஸ்தான் அணி இந்தியாவில் எங்கெல்லாம் விளையாடியதோ அங்கு இந்திய ரசிகர்கள் தங்கள் அன்பை வெளிப்படுத்தினார்கள். நான் கூட ஹோட்டல் அறையை விட்டு வெளியே சென்றேன்."
"எந்த அணியாவது நல்ல கிரிக்கெட் ஆட வேண்டும், போட்டியை ரசித்து ஆட வேண்டும் என நினைத்தால் இந்தியாவுக்கு செல்லுங்கள். உலகிலேயே இந்திய ரசிகர்கள் தான் சிறந்தவர்கள். அதே போல, பாகிஸ்தான் ரசிகர்களும் இந்திய கிரிக்கெட் வீரர்களை ரசிக்கிறார்கள். இந்தியா எப்போதெல்லாம் பாகிஸ்தானுக்கு வந்ததோ அப்போதெல்லாம் எங்கள் ரசிகர்கள் புன்னகையுடன் அவர்களை வரவேற்று இருக்கிறார்கள். வீரேந்தர் சேவாக் பாகிஸ்தானில் தங்களுக்கு கிடைத்த அன்பை குறித்து பலமுறை பேசியிருக்கிறார். சவுரவ் கங்குலி கூட பாகிஸ்தான் ரசிகர்களின் அன்பு குறித்து பேசி இருக்கிறார்."
"எங்கள் ரசிகர்களும் இந்திய அணிக்கு ஆதரவு அளிக்கிறார்கள். இந்தியா மற்றும் பாகிஸ்தான் இருதரப்பு தொடர் நடக்க வேண்டும் என்பதே எங்களது விருப்பம். இந்தியா - பாகிஸ்தான் தொடருக்காக நாங்கள் ஏங்குகிறோம். இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டதால் நான் அதிர்ஷ்டம் வாய்ந்தவனாக கருதுகிறேன். பலமுறை இந்திய அணிக்கு எதிராக சொந்த மண்ணிலும், இந்தியாவிலும் விளையாடி இருக்கிறேன். அந்த நாட்களை நான் மிகவும் ரசித்தேன். இந்தியா பாகிஸ்தானுக்கு வரவேண்டும். அதேபோல, பாகிஸ்தான் இந்தியாவுக்கு செல்லவேண்டும். அரசியலை ஒதுக்கி விட்டு நாம் அனைவரும் கிரிக்கெட் மூலம் இணைய வேண்டும்"
"ஆஸ்திரேலியா போன்ற ஒரு அணி பாகிஸ்தானுக்கு வருகிறது என்றால் இந்தியா ஏன் வரக்கூடாது? இரு நாடுகளின் அரசுகளும் இது குறித்து பேசி ஒரு முடிவை எட்ட வேண்டும். இது கிரிக்கெட்டுக்கு நன்மை பயக்கும். முதலில் பிசிசிஐ ஆசிய கோப்பையை பாகிஸ்தானில் இருந்து வெளியே கொண்டு சென்றது. இப்போது சாம்பியன்ஸ் டிராபியை வெளியே கொண்டு செல்ல முயல்கிறது. ஏன்? நாங்கள் பாகிஸ்தானில் கிரிக்கெட் போட்டிகளை மீண்டும் கொண்டுவர கடினமான உழைப்பை செலுத்தி இருக்கிறோம். இந்தியா, பாகிஸ்தானை அழைத்தால் எங்கள் அரசு எங்களை தடுக்காது. நீங்கள் இந்தியா சென்று விளையாடுங்கள் என்று தான் சொல்வார்கள். இந்திய அரசும் அதை செய்ய வேண்டும். அரசியலை ஒதுக்கிவிட்டு நாம் கிரிக்கெட் ஆட வேண்டும்." இவ்வாறு கம்ரான் அக்மல் பேசியிருக்கிறார்.